
ஆர்.வைதேகி
பல்லாவரம் சமந்தா ரூத் பிரபுவும், ஜூப்ளி ஹில்ஸ் நாகசைதன்யாவும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். காதல் வென்றிருக்கிறது.
`விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்ஷனில்தான் நாக சைதன்யாவும்- சமந்தாவும் முதன்முதலாக ஜோடி சேர்ந்தார்கள். வருஷம் 2010. சமந்தாவுக்கு அதுதான் முதல் தெலுங்குப்படம். நாக சைதன்யாவுக்கு அது சினிமா கரியரில் இரண்டாவது படம். முதல் படத்தில் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக ஆரம்பித்து, அதன்பிறகு இருவருமே வேறுவேறு கமிட்மென்ட்ஸில் பிஸியாகி, 2015-ல் மீண்டும் திடீர் சந்திப்பில் காதலாகி, இப்போது கோவாவில் திருமணமாகித் தம்பதிகளாகியிருக்கின்றனர்.

கோவாவின் வேகட்டார் கடற்கரையோரம் உள்ள ‘டபிள்யூ’ ஹோட்டல்தான் ‘சாய்சாம்’ ஜோடியின் வெட்டிங் டெஸ்ட்டினேஷன்.அக்டோபர் 5-ம் தேதி இரவு, நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுமாக `டபிள்யூ’ ஹோட்டலின் அறைகள் நிறைந்திருந்தன.
நள்ளிரவு 11.52-க்கு இந்து முறைப்படி திருமணம். தெலுங்குத் திருமணங்களில் நள்ளிரவு முகூர்த்தங்கள் சகஜம். அது முடிந்ததும் டின்னர். இதில் சமந்தா அணிந்திருந்தது நாக சைதன்யாவின் பாட்டியும் ராமநாயுடுவின் மனைவியுமான ராஜேஸ்வரியின் சேலை. அதையும் அவருக்குப் புதுப்பொலிவுக்கு மாற்றித் தந்தவர் பிரபல காஸ்ட்யூம் டிஸைனர் க்ரோஷே பஜாஜ்.

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து, கைத்தறி நெசவுத் துறையை ஆதரிப்பதற்கான வேலைகளில் தீவிரமாகியிருக்கிறார் சமந்தா. அதன் பிரதிபலிப்புதான் இந்த ஓல்டு இஸ் கோல்டு ஆர்வமும். பழைய பட்டுச் சேலைக்கு மேட்ச்சாக சமந்தா அணிந்திருந்தவை ஆன்ட்டிக் ஜுவல்லரி.
அக்டோபர் 7-ம் தேதி மதியம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம். சமந்தாவுக்கு வெள்ளை கவுன் மற்றும் வைர நகைகள். சைதன்யாவுக்கு கோட் சூட். மணமகளின் கைகோத்துக் கூடவே நடந்து வந்தவர் சமந்தாவின் சகோதரர்.

திருமணத்துக்கு வந்தவர்களை வரவேற்று, உபசரித்தவர் திரைப் பிரபலம் நடிகர் வெங்கடேஷ். அவர் நாக சைதன்யாவின் அம்மா லட்சுமியின் அண்ணன். உறவினர் என்கிற முறையில் இத்திருமணத்தில் கலந்துகொண்ட இன்னொரு பிரபலம் நடிகர் ராணா. இவர்தவிர தெலுங்கு சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்கள் யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் பாடகி சின்மயி மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவும்தான். ``நானும் நாக சைதன்யாவும் ஸ்கூல்மேட்ஸ். தவிர நடிகையாகிறதுக்கு முன்னாடியே சமந்தாவும் நானும் ஃப்ரெண்ட்ஸ். படம் பார்க்குறது, வெளில சுத்தறதுனு அப்பலேர்ந்தே செம க்ளோஸா இருப்போம். ரெண்டு நாள் கல்யாணத்தையும் அட்டெண்ட் பண்ணிட்டு வந்தேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு நடிகையோட கல்யாணமில்லை. என் ஃப்ரெண்ட்ஸோட கல்யாணம்’’ என்கிறார் ரம்யா.

‘`எங்க கல்யாணம் ரொம்ப பிரைவேட்டா, சிம்பிளா நடக்கணும்ங்கிறது ஏற்கெனவே நாங்க பிளான் பண்ணினது. எங்க கல்யாணத்துக்கு வர்றவங்க உண்மையா சிரிக்கிற, உண்மையா சந்தோஷப்படுற, மனசார வாழ்த்துறவங்களா மட்டும்தான் இருக்கணும்னு நினைச்சோம்.’’- திருமணத்தில் நட்சத்திர முகங்களே இல்லையே என்கிற கேள்விக்கு சமந்தாவின் பதில் இதுதான்.
திருமண பட்ஜெட் மொத்தம் 10 கோடியாம். செலவு ஆளுக்குப் பாதிப் பாதி என்பதும், இருவர் தரப்புப் பெற்றோரிடமிருந்தும் ஒரு பைசாகூட வாங்கக் கூடாது என்பதும்கூட இருவரும் ஏற்கெனவே எடுத்த முடிவு.
திருமணம் முடிந்த அடுத்த நாளே சமந்தா, சாவித்ரியின் பயோபிக்கான ‘மகாநதி’ ஷூட்டிங்கிலும், சைதன்யா புதிய பட ஷூட்டிங்கிலும் பிசி. ஸோ.. பஹாமாவுக்குச் செல்வதாக இருந்த ஹனிமூன் பிளான், தற்காலிகமாக டிசம்பருக்குத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
நல்லா இருங்க நண்பர்களே!