
கற்பனை: கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
நிருபர் : சார் வணக்கம், மாத்திரை வெச்சிருக்கீங்களா?
ரஜினி : ஏன் ஏன் ஏன்?
நிருபர் : இல்லை சார், கேள்விகள் கேட்கப்போறேன். உங்களுக்குத் தலை சுத்தும்ல, அதான்!
ரஜினி (சிரிக்கிறார்) : ஹாஹாஹாஹா...
நிருபர் : நல்லாச் சிரிக்கிறீங்க சார். என் கேள்விக்குப் பதில் சொல்லலையே?
ரஜினி : (மேலே கையைக் காட்டுகிறார்)

நிருபர் : என்ன சார், மேலே ஃபேன் சுத்துது. தலை சுத்தலை, ஃபேன் சுத்துதுன்னு சொல்றீங்களா?
ரஜினி : நோ, மேலே ஒருத்தர் இருக்கார், அவர் பார்த்துக்குவார்னு சொல்றேன்!
நிருபர் : மேலே ஒருத்தர்னா மோடியா சார்?

ரஜினி : ந்நோ, ஆண்டவன், காட். ஆண்டவன் இருக்கான்!
நிருபர் : ஆண்டவன் இருக்கிறது இருக்கட்டும். நீங்க அரசியலில் இருக்கீங்களா, இல்லையா?
ரஜினி : ஏன், ஏன்... டிசம்பர் 31ஆம் தேதி, ‘தனிக்கட்சி தொடங்குவேன்’னு சொன்னேனே?
நிருபர் : அது மட்டுமா சார் சொன்னீங்க? நாடாளுமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல், அபார்ட்மென்ட் செகரெட்டரி தேர்தல்னு எதுலயுமே போட்டியிட மாட்டேன். சட்டமன்றத் தேர்தல்தான்னு சொன்னீங்களே, அதுசரி, நீங்கதான் ஸ்ட்ரெய்ட்டா ஹீரோ ஆச்சே!
ரஜினி : ஹாஹாஹா, இது எப்டி இருக்கு?
நிருபர் : ஏதோ இருக்கு சார். அதிருக்கட்டும், நாளைக்கே சட்டமன்றத் தேர்தல் வந்தா என்ன பண்ணுவீங்க?
ரஜினி : கண்ணா, எப்ப வர்றோம், எப்படி வர்றோம்கிறது முக்கியமில்லை. ஆனா கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு வருவேன்!
நிருபர் : இதை 25 வருஷமா கேட்டுட்டு வர்றோம் சார். ஆமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலையே?
ரஜினி : சட்டமன்றத் தேர்தல்னு சொன்னேனே தவிர, எந்தச் சட்டமன்றத் தேர்தல்னு சொன்னேனா, ஹாஹாஹாஹா... போர் வரும்போது பார்த்துக்கலாம்.

நிருபர் : போர்ன்னா சட்டமன்றத் தேர்தல்தானே?
ரஜினி : ஹாஹாஹா, முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர்னு நிறைய போர் இருக்கில்ல. அதுமாதிரி நிறைய...நிறைய...போர் இருக்கு.
நிருபர் : போர்ன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது. சீமானைப் போராளின்னு பாராட்டினீங்க. ஆனா, இப்போ அதே சீமானைத் தாக்கி ட்விட்டர்ல எழுதியிருக்கீங்களே?
ரஜினி : கலைஞர் முன்னால அஜித் எதிர்த்தப்போ கூடத்தான் எந்திரிச்சுக் கை தட்டினேன். அப்புறம் அதே கலைஞரைப் பாராட்டலையா? ஜெயலலிதா மேடத்தைக் கடுமையா எதிர்த்தேன். அப்புறம் அவங்களை ‘தைரிய லெட்சுமி’ன்னு பாராட்ட லையா?
நிருபர் : அப்போ அதையும் ஒரு கேள்வியா சேர்த்துக்கவா?
ரஜினி : நோ நோ நோ. நானேதான் சொல்லிட்டேனா, ஹரே பாபா!
நிருபர் : போலீஸை அடிக்கிறது தப்புன்னு சொல்றீங்க. ஏத்துக்கிறேன். ஆனா போலீஸ் பல இடங்களில் போராடினவங்களை அடிச்சப்போ கண்டிக்கலையே?

ரஜினி : ஆண்டவன் சொன்னான், கண்டிச்சேன். அவ்ளோதான் தெரியும்.
நிருபர் : அப்போ ஆண்டவன்தான் உங்க ட்விட்டர் அட்மினா சார்?
ரஜினி : ஹாஹாஹா... குட் ஜோக்.
நிருபர் : ஆமா, நீங்க ஆண்டவன், ஆண்டவன்னு சொல்றீங்க. கமலையும் அவரோட ரசிகர்கள் ஆண்டவர்னு சொல்றாங்களே. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?
ரஜினி : ஹாஹாஹா... இன்னொரு குட் ஜோக்.
நிருபர் : சார், நீங்க ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவீங்க?

ரஜினி : எல்லா ஸ்டூடன்ட்டும் கவர்மென்ட் ஆபீசர்ஸும் வருஷத்துக்கு ஆறு மாசம் இமயமலைக்கு டூர் போகணும்னு சட்டம் போட்டு முதல் கையொப்பம் போடுவேன்!
நிருபர் : இப்போ உண்மையிலேயே எனக்குத் தலை சுத்துது சார்!