"தயாரிப்பாளர் ஆகிட்டீங்களே?"
"எனக்கே அது ஆச்சர்யம்தான். 'ஸ்லம்டாக் மில்லியனர்' முடிஞ்ச தும், ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் என்னை ஒரு படம் இயக்கித் தரச் சொன்னாங்க. 'இப்போதைக்கு முடியாது'ன்னு சொன்னதும் எங்களுக்காக படத்தைத் தயாரிங்கன்னு கேட்டாங்க. உண்மையில், அந்த வேலையில் எனக்கு விருப்பம் இல்லை. அவங்களைத் தட்டிக்கழிக்க, நிறைய நிபந்தனைகள் விதிச்சேன். ஆச்சர்யமா எல்லாத்துக்கும் 'ஓ.கே' சொல்லிட்டாங்க. முதல் படத்தை என் அசிஸ்டென்ட் சரவணன் இயக்குகிறார். இரண்டு காதலுக்கு இடையே நடக்கும் சாதாரண கதைக்கு அழகான திரைக்கதை அமைச்சிருக்கார் சரவணன். அது, அடுத்த வருஷத்தின் மிகச் சிறந்த படமா அமையும்னு நம்பிக்கை இருக்கு!"
"அடுத்தது இந்திப் படமா?"
"யெஸ்!
'நாம சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவோம்'னு அமீர் கான் சொன்னார். 'இல்லை சார், 'கஜினி' நல்ல படம்னாலும் உங்களை வெச்சுத்தான் ஓப்பனிங்கே கிடைச்சது. நீங்க இல்லாம நான் இந்தியில் ஒரு படம் ஹிட் கொடுக்கணும். அதுதான் டைரக்டரா எனக்குப் பெருமை. அதுக்கு அப்புறம் சேர்ந்து பண்ணலாம்'னு சொன்னேன். 'நல்ல விஷயம். எந்த உதவின்னாலும் கேளுங்க'ன்னு சொன்னார். அதுதான் அமீர் கான். இடையில், அக்ஷய்குமாரை வெச்சுப் படம் பண்ண ஒரு வாய்ப்பு வந்தது. 'ஏழாம் அறிவு' அநேகமா அடுத்த மார்ச் மாசத்துக்குள் வெளியாகும். அதற்கடுத்து, அக்ஷய் குமாரை வெச்சு ஒரு ஆக்ஷன் படம் பண்ணப்போறேன். அடுத்து, சின்ன பட்ஜெட் படம் பத்தியும் யோசிக்கணும்!"
"இந்தி, தமிழ் இரண்டிலும் எது பெஸ்ட்?"
"தமிழ் சினிமாவில் எப்பவுமே கிரியேட்டிவிட்டிக்குப் பஞ்சம் கிடையாது. நல்ல படங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. இந்தியில் அந்த அளவுக்கு நல்ல படங்கள் வெளிவருவது இல்லை. ஆனால், 'த்ரீ இடியட்ஸ்' மாதிரி ஒரே ஒரு 'எக்சலன்ட் ஃபிலிம்' கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்கவெச்சுடுவாங்க. வருடம் முழுக்க வெளி வந்த நல்ல தமிழ்ப் படங்களின் பெயர்களைத் தட்டிட்டுப் போயிடுவாங்க. 'ரங்க் தே பஸந்தி', 'தாரே ஜமீன் பர்', 'த்ரீ இடியட்ஸ்' இப்போது 'பீப்ளி லைவ்'னு நம்ம நான்கு வருட நல்ல சினிமாக்களை நான்கே சினிமாக்களில் முந்திடுறாங்க. தமிழ்லயும் எக்சலன்ட் சினிமாக்கள் வர ஆரம்பிச்சுட்டா, நாமதான் இந்திய சினிமா!"
"அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் அமீர்கானும், ஷாரூக்கானும் ஈகோ யுத்தத்தில் மும்முரமா இருக்காங்களே?"
"பல மாநில சினிமாக்களில் இருக்கும் மோசமான விஷயம் இதுதான். இங்கே ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி சாரும், கமல் சாரும் நட்பு உணர்வோடு இருந்தாங்க. அந்த நட்பைத் தங்களுடைய ரசிகர்களுக்கும் சொல்லிக்கொடுத்தாங்க. அதனால், இங்கே ஈகோ சண்டை எதுவும் வரலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சில நடிகர்களின் ரசிகர்கள் சண்டை போட்டாங்க. இப்போ அதுவும் இல்லை. இது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயம். தமிழைத் தவிர, மற்ற மொழி ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் ஈகோ உண்டு. இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவைப் பார்த்து மற்ற ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!"
|