காதலன் திரும்பி வருவான் என்று காத்திருக்கும் 11,111 சினிமா நாயகிகளில் ஒருவராக அருந்ததி. தன் காதலன் கதிருக்காக, அம்மாவிடமும் அப்பாவிடமும் முறைத்துத் திருகும் காட்சிகளில் அச்சு அசல் 'பருத்திவீரன்' முத்தழகு. தன் காதலனிடம் கௌரவத்தையும் உழைத்து வாழும் எண்ணத்தையும் உசுப்பிவிடும் காட்சிகளில், அருந்ததியின் இயல்பான நடிப்பு அழகாக ஈர்க்கிறது. க்ளைமாக்ஸில் வில்லனைத் துரத்தித் துரத்தி அரிவாளால் வெட்டும் காட்சியில் அருந்ததியின் ஆவேசம்... அசத்தல்!
கதிரின் நண்பர்களாக வருபவர்களை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். கதிரின் சென்னை கேன்டீன் முதலாளி, மகன்களால் துரத்திவிடப்பட்டு கதிரிடம் அடைக்கலம் ஆகும் பாட்டி, அருந்ததியின் அப்பா, முறை மாமன் போன்ற சின்னச் சின்ன கேரக்டர்கள் சுவாரஸ்யம். கதிரின் இரண்டாம் பாதி சென்னை வாழ்க்கையில் வரும் இரண்டு கிளாமர் பெண்கள், அவர்களின் காதல் எதற்கு என்றே தெரியவில்லை. கதிர் சாதாரணமாக ஹோட்டலில் தட்டுக் கழுவுகிறார். தனிக் கடை போடுகிறார். ரெஸ்டாரென்ட் ஆரம்பித்துவிடுகிறார். நேர்மையாகப் பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதா? கிராமத்தில் 10 ரூபாய்க்கு வழி இல்லாத கதிர், சென்னையில் 17 லட்சம் சம்பாதித்த பிறகும்கூட அருந்ததியைப் பார்க்கப் போகாமல் பொறுமையைச் சோதிக்கிறார். பரணியின் இசையில் 'வெளுத்துக் கட்டு' பாடல் கேட்கும்படி இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு சின்ன வயசுக் காதல், பொறுக்கியைக் காதலிக்கும் பொறுப்பான காதலி, உழைத்து முன்னேறும் உத்தமர்கள் என்று தெரியவில்லை. இந்த சலித்துப்போன வட்டத்தில் இருந்து வெளியே வந்தால், இன்னும் வெளுத்துக் கட்டலாமே!
|