மதுரையில் ஒரு விபத்தில் இருந்து ஸ்ரித்திகாவைக் காப்பாற்றுகிறார் அரவிந்த் வினோத். ஸ்ரித்திகா சொந்த கிராமத்துக்குப் போக மதுரை டு தேனி பஸ்ஸில் ஏறுகிறார். வாத்தியார் வேலையில் சேர்வதற்காக அதே பஸ்ஸில் பயணம் செய்கிறார் அரவிந்த் வினோத். காதல் பாடல்களின் பின்னணியில் பார்வைகள்பரிமாற, இருவரும் காதல் டிக்கெட் எடுக்கி றார்கள். தன் சொந்த கிராமம் வந்ததும் ஸ்ரித்திகா இறங்க, அரவிந்த் வினோத்தும் இறங்கி நேரே ஸ்ரித்திகாவின் வீட்டுக்குப் போய் பெண் கேட்கிறார். ஸ்ரித்திகாவின் முறை மாப்பிள்ளை துள்ளி எழ, மல்லுக்கட்டு ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஊர்ப் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே க்ளைமாக்ஸ்!
'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' பட ஸ்டைலில் ஒரே பஸ்ஸில் நடக்கும் கதையைத் துணிச்சலாகக் கையில் எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரதிபாலா. இயல்பான மனிதர்கள், யதார்த்தமான உரையாடல்கள் என 'மதுரை டு தேனி' ரூட்டைக் கவனமாகச் செதுக்கியிருப்பதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.
தெனாவெட்டு வாத்தி கேரக்டரில் படுபாந்தமாகப் பொருந்துகிறார் அரவிந்த் வினோத். பெரும்பாலும் லுக் விடுகிற ஸீன்கள் என்பதால், பேசாமல் அடக்கியே வாசித்திருக்கிறார். அதற்காக ஸ்ரித்திகாவின் தாய் மாமன் கொலைவெறியோடு வந்து தகராறு பண்ணும்போதும் அமைதிச் சாமியாராகத் தவம் இருப்பதா? தேனிப் பக்கத்து பெண்ணின் நடை, உடை, பாவனைகளை அப்படியே அசலாகப் பிரதிபலிக்கிறார் ஸ்ரித்திகா. க்ளைமாக்ஸில் அலறிக் கதறித் தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை நிரூபிக்கிறார்.
டீயைத் தட்டிவிட்டதால், அம்மா கொடுத்த சாபம், நாள் முழுக்க டீ, சர்பத் குடிக்க முடியாமல் அலைபாயும் செல்வம், அடுத்த சூப்பர் ஸ்டார் கனவோடு பஸ் கண்டக்டராக அலப்பறை கொடுக்கும் ராஜ்குமாரும் படத்தின் காமெடிக் குத்தகைதாரர்கள். சிங்கமுத்துவும் குறைவைக்கவில்லை. 'ரொம்ப நல்லவனா இருக்கான். ஒருவேளை வெளியூர்க்காரனா இருப்பானோ?'' என்று குழம்பும் இடத்தில் சிரிக்க வைக்கிறார்.
முதல் பாதி முழுக்க பஸ்சுக்கு உள்ளேயே சுற்றிச் சுற்றி வரும் காட்சிகள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், நக்கல், நையாண்டியோடு எழுதப்பட்டு இருக்கும் சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் ரதிபாலாவின் வசனங்கள் அதை மறக்கடிக்கச் செய்கின்றன. கண் ஆபரேஷன் செய்த கையோடு விடாப்பிடியாக டி.வி. பார்க்கும் கிழவி, போர்வையைப் போர்த்தியபடி ஊர்க்காரர்களை வம்பு இழுக்கும் லந்து பார்ட்டி, பணம் கேட்டாலே எரிச்சல் ஆகிற ஸ்ரித்திகாவின் அப்பா, ஜிகுஜிகு சட்டையோடு தொடை தட்டித் துள்ளிக் குதிக்கும் தாய் மாமன் எனப் படத்தில் பல கேரக்டர்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.
கண்களால் ஈர்த்து காதல் தூது விடும் ஸ்ரித்திகா, கல்யாணம் என்றதும் ஏன் பம்மிப் பதுங்குகிறார் என்பதற்குக் காரணமே இல்லையே? ஸ்ரித்திகாவிடம் இருந்து பாஸிட்டிவ் பதில் வராதபோதும், துணிந்து பெண் கேட்டுச் செல்வதெல்லாம் சின்னப் புள்ளைத்தனமா இருக்கே.
|