''மாநிறத்துல ஒரு ஜோதிகா, மறுபடி ஒரு ஷோபா... எக்ஸ்பிரஷன்ல பின்னுது பொண்ணு!'' - 'பூ' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் முதல் பூங்கொத்து நீட்டுவது ஹீரோயின் பார்வதிக்குத்தான்! சவேரா ஓட்டல் லாபி... 'ஒன் மெசேஜ் ரிசீவ்டு' என டிங்டாங்கிக்கொண்டே இருக்கிற மொபைல் பார்த்து மலர்கிறது பார்வதிப் பூ.
''பார்வதி... சிறுகுறிப்பு வரைக?''
''நான் கோழிக்கோடு. பி.ஏ. இங்கிலீஷ், ஃபிரெஞ்ச் லிட்டரேச்சர்னு டபுள் டிகிரி ஹோல்டர். படிக்கும்போதே கிரண் சேனலில் தொகுப்பாளினியா இருந்தேன். அப்புறம் தேடி வந்தது சினிமா. மலையாளத்தில் 'அவுட் ஆஃப் சிலபஸ்' படத்தில் அறிமுகம். அடுத்தது, 'நோட்புக்'. நாலு ஹீரோயின்களில் ஒருத்தியா வந்தாலும் நல்ல அடையாளம் கிடைச்சுது. 'நான் கடவுள்' படத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்போ பார்த்து, எனக்கு செமஸ்டர். நல்ல வாய்ப்பை இழந்த வருத்தத்தில் இருந்தப்போ, சசி சாரின் அழைப்பு. 'பூ' படத்துக்காக ஆடிஷனுக்கு அழைத்தவர், முதல் ரவுண்டிலேயே 'நீதான் என் மாரி!'ன்னு டிக் பண்ணிட்டார். 'பூ'வில் என் கேரக்டர் பத்தி சசி சார் சொல்லும்போதே, இது என் கேரியரில் முக்கியமான படமா இருக்கும்னு புரிஞ்சுது. அது நல்லபடியா நடந்தாச்சு!''
''அப்பிடியே தமிழ்நாட்டுக் கிராமத்துப் பொண்ணு மாரியா மாறின அதிசயம் எப்படிச் சாத்தியமாச்சு?''
'' 'தமிழ்ச்செல்வன் எழுதின, 'வெயிலோடு போய்' சிறுகதையைத்தான் படமாக்குறேன்'னு சசி சொன்னார். 'முதல்ல அந்தக் கதையைப் படிச்சுர்றேன்'னு என் தமிழ் ஃப்ரெண்டு மூலமா படிக்கச் சொல்லிக் கேட்டேன். 'பூ'-வுக்கு முன்னாடி எனக்குத் தெரிஞ்ச இரண்டே தமிழ் வார்த்தைகள் 'ஆமா, இல்லை'தான். ஒரே மாசத்தில் தமிழ் பேச, படிக்கக் கத்துக் கிட்டேன். ஷூட்டிங்குக்கு ராஜபாளையம் போறதுக்கு முன்னாடி, அந்த ஊர் மனிதர்களின் லைஃப் ஸ்டைல், பேச்சு, டிரெஸ்ஸிங் எல்லாத்தையும் வீடியோவா எடுத்துக் கொடுத்துட்டார் சசி சார். அதைப் பார்த்துப் பேச,சிரிக்க, நடக்க, முறைக்க... இப்படி நிறைய ஹோம் வொர்க் செய்தேன். ஷூட்டிங்தான் புது அனுபவம். வீட்லயே செருப்புப் போட்டுத் திரியுற என்னை முள்ளுக் காட் டில் வெறுங் காலோட அலையவிட்டாங்க. 'மேக்கப் பாக்ஸ்ல கை வெச்சா கொன்னுருவேன்'னுட்டார் டைரக்டர். பூ கட்டவே தெரியாத எனக்குப் பட்டாசு ஃபேக்டரியில் சரம் சரமா வெடி கட்டுற வித்தையை அந்தக் கிராம மக்கள் சொல்லிக் கொடுத்தாங்க. தேங்க்ஸ் டு சசி!''
|