கொரோனா வைரஸ் என்பது போகவிட்டு பொறமண்டையில் அடிக்கும் கொடூரமான வைரஸ். இது, விலங்குகளுக்கு வயிற்றுப்போக்கையும், மனிதர்களுக்கு மன உளைச்சல், மன பிராந்தி என வாழ்க்கையின் போக்கையும் கெடுத்துவிட்டுப்போகும். மேலும், இதர சுவாசக் கோளாறுகளையும், வொர்க் ஃபிரம் ஆட்களுக்கு வேனல் கட்டி எனப்படும் வேதனை தரும் கட்டிகளை உடலில் உண்டுபண்ணி, உங்களை உண்டு இல்லை எனச் செய்துவிடும்.

`ஆப்பு கண்ணுக்கு தெரியாதுடியேய்' என முன்கூட்டியே இதுபற்றி விளக்கியிருக்கிறார், அறிஞர் மற்றும் இயக்குநரான பேரரசு. மேலும்,`நீ கத்தி, இவன் கத்தி, எவன் கத்தியும் பிரயோஜனம் இல்ல. என் கத்திதான் பிரயோஜனம்' என மருத்துவர்களின் மகத்துவத்தையும் அன்றே அறிந்து சொல்லியிருந்தார்.
வரலாறு:

கொரோனா வைரஸ், சீன நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இந்திய நாய் ஒன்றின் இடுப்பைச் சுற்றி 16 ஊசி போட்டு வைரஸ் பரப்பினார் டோங்லீ. `இதுவும் அதுபோன்ற பயோவார்தான்' என பயமுறுத்துகிறார்கள் பல இலுமினாட்டி ஆர்வலர்கள். `வரலாறு' என்பது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம். இது, `நாட்டாமை', `படையப்பா' வரிசையில் `கே.எஸ்.ஆர் குவாரன்டைன் டிரையாலஜி'யின் மூன்றாவது படமாகக் கருதப்படுகிறது. அஜித்தோ, கொரோனா வருவதற்கு முன்பிருந்தே குவாரன்டைனில்தான் இருக்கிறார். `வாழு, வாழ விடு' என அன்றே சொன்னவர் அவர்.
மருந்துகள் :

கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளனர். மாற்று மருத்துவ முறைப்படி கொரோனாவின் குமட்டில் குத்த காத்திருந்த ஹீலர் பாஸ்கர் என்பவர், இலுமினாட்டிகளின் சதியால் கைதாகினார் என்கின்றனர் அவரது சப்ஸ்கிரைபர்கள். `கொரோனாவால் வயிற்றுப்போக்கு உண்டானால், புளித்த மோரில் ஊமத்தை இரண்டு சொட்டு விட்டு அருந்துங்கள். பறந்து போயிடும்' என சித்த மருத்துவர் ஒருவரும் குறுக்க மறுக்க ஓடிக்கொண்டிருக்கிறார். ஆமாம், ஊமத்தங்காய் பார்ப்பதற்கும் கொரோனா வைரஸ் போன்றுதான் உள்ளது என ஆரவாரம் அடைந்தார்கள் அவரது ரசிகர்கள். இவர் `நான் மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்த சில நொடிகளில், டொனால்டு ட்ரம்ப்பும் பதறியடித்து வந்து மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கிறார். இது, தமிழனுக்கு எதிரான சதி' எனப் பதிவு போட்டிருக்கிறார். ஆஸ்கர் கொடு டிராம்பே... அதேபோல், தனக்கு கொரோனா வந்ததே தெரியாமல், வெறும் பாராசிட்டமாலை வாயில் போட்டுக்கொண்டே பலர் போர்வையைப் போர்த்தி படுத்திருக்கிறார்கள் நம் நாட்டில் என்ற தகவலும் வெளியானது.
இதர மருந்துகள் :

பூண்டு நசுக்கிப்போட்ட, மிளகு தட்டிப்போட்ட, கெட்டி ரசம். ஹிப்ஹாப் தமிழா ஆதி பரிந்துரைத்த நிலவேம்புக் கசாயம். மதுரையில் லாரியைக் கொண்டு தெளித்த மஞ்சள் தண்ணீர். சில்லென்ற கோவையில் பேருந்தைச் சுற்றி கட்டிவிட்ட வேப்பிலைக்கொத்துகள். வாய்க்குள் ஊற்றிக்கொண்ட கை கழுவும் கிருமி நாசினி. வீட்டுக்கு சாம்பிராணி போடுவது, சூடான கோமியம் அருந்துவது, பேச்சிலர்கள் கிளப்பிவிட்ட சரக்கு, குடும்பத் தலைவர்கள் கிளப்பிவிட்ட மட்டன் சுக்கா, இல்லத்தரசிகள் கிளப்பிவிட்ட உப்புமா எனப் பல மருந்துகள் இந்தியாவில் இருக்கின்றன. வட இந்தியாவில் சிலர் மண்சோறு உண்டனர். `அது புதுவித மருத்துவமோ' என்று சிலர் ஆச்சர்யமாக, பிறகுதான் தெரிந்தது அவர்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டத்தில் நாட்டுக்காக சாப்பாட்டு, தட்டை தியாகம் செய்தவர்கள் என. தட்டு இல்லாமல், தரையில் போட்டு சாப்பிட்டிருக்கிறார்கள்!
சாதனைகள் :

கொரோனா வைரஸ் பல சாதனைகளைச் செய்துள்ளது. ராக்கெட் வேகத்தில் பறந்த சீனப் பொருளாதாரம் மடங்கிப்போனது, சில போராட்டங்கள் அடங்கிப்போனது, அசைவம் சாப்பிடும் ஊரெல்லாம் முடங்கிப்போனது, அமெரிக்காவே நடுங்கிப்போனது, ஆனால், இந்தியாவைப் பார்த்து கொரோனாவே பயத்தில் பிடுங்கிப்போனது என வாட்ஸப்பில் ஆறு பக்கத்துக்கு டைப் செய்து ஆர்ட்டின் விட்டவர், இப்போது 21 நாள் ஊரடங்கில் ஒடுங்கிப்போய் அமர்ந்திருக்கிறார். வேலை கிடைக்காமல் இருந்த பல 90'ஸ் கிட்ஸுக்கு, `பையன் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றான்' என்கிற ஒற்றைப் பொய்யில் திருமணம் நிச்சயமானது. `கொரோனா கிட்ட பேசு, அதுகிட்ட அன்பு காட்டு' என சமுத்திரக்கனி டெம்ப்ளேட்டுகளும், `ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட் போன், எலெக்ட்ரானிக் அயிட்டம்ஸ், ஜாக்கி சான் மந்திரக்கல் எல்லாம் சைனால இருந்து வரணும். ஆனா, கொரோனா வந்தா மூக்கை பொத்திப்பீங்களா?' என கத்தி (எ) கதிரேசன் டெம்ப்ளேட்டுகளும் வலம்வந்தன. `இனம் எனப் பிரிந்தது போதும்' எனும் பாடல் இதுவரை 20 கோடி முறை கொரோனாவுக்கு எதிராக டிக்-டாக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனாவை விரட்ட வட இந்திய மக்கள், மாபெரும் மனிதச் சங்கிலி செய்து `கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தவிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
வேதனைகள் :

சாதனைகளைவிட வேதனைகள்தான் அதிகம். டீ குடித்தால் கொரோனா ஓடிப்போகும் என வாட்ஸ்அப் மருத்துவர் அறிக்கை அனுப்பியபோது, ஆபீஸில் இருந்து காபி மெஷினைத் தூக்கிவந்த வொர்க் ஃப்ரம் ஆட்கள் வேதனை அடைந்தனர். ``கொரோனாவால் என்னைக் கொல்லமுடியாது. ஏனென்றால், `பிகில்' படத்தில் ராயப்பன் இறந்தபோதே நான் மனத்தளவில் இறந்துவிட்டேன். இது வெறும் காற்றடைத்த பையடா, கையில் கொரோனாவை தூக்கி வையடா" என சிலர் தெரிவித்தது கண்களை கலங்கச்செய்தது. `மேல் மாடியில் கொரோனா வைரஸ்-க்கு எந்திரம் கட்டப்படும்' என்ற பலகையைப் படித்த மக்கள், வீட்டில் மேல்மாடி இருந்தால்தான் எந்திரம் கட்டமுடியும் எனத் தவறாக புரிந்துகொண்டனர். இந்த அறியாமையால் கொரோனா இன்னும் வேகமாகப் பரவியது. `இனி எல்லோரும் ஒத்த செருப்புதான்' என பார்த்திபன் இன்னும் ட்வீட் போடாமல் இருப்பதும் பெரும் வேதனையான ஒன்று. இந்தியப் பிரதமர் இந்தியில்தான் பேசினார், அப்போதும் அவர் சொன்னது புரியாமல் கும்பல் கும்பலாக `கொரோனா கொண்டாட்டம்' நிகழ்த்திய இந்திவாலாக்களை நினைத்து கொரோனாவே வேதனைகொண்டது.
பிற தகவல்கள் :

``நாங்கதான் ஆண்டசாதி ஆம்பள சிங்கம். பயந்தா அது அசிங்கம். எங்களை கொரோனா ஒன்னும் செய்யாது" என டிக்-டாக் செய்து கொண்டிருக்கிறார் ஒருவர். அவரை `7-ஆம் அறிவு' படத்தில் வருவதுபோல், தண்ணி உள்ள டிரம்மில் ஒரு மண்டலத்துக்கு ஊற வைத்தால், டி.என்.ஏ ட்ரிக்கராகி மருந்து கண்டுபிடிக்க வாய்ப்புண்டு.
மேலும் பார்க்க :

கே.எஸ்.ரவிக்குமார் குவாரன்டைன் டிரையாலஜி
கும்பலாக சுத்துவோம் ஐயோ அம்மான்னு கத்துவோம்!
கொரோனா கொரோனா... - தில்லானா தில்லானா ரீமிக்ஸ்
( `முத்து' படத்தை இயக்கியதும் கே.எஸ்.ரவிக்குமார்தான் )
கான்டாஜியன்
மேலும் படிக்க :

கொரோனா குவாரன்டைனும் குயின்டின் டரான்டினோவும்
கொட்டபாக்கு கசாயம் செய்வது எப்படி?
குவாரன்டைன் டைரீஸ் - கவிஞர் கம்பியூட்டர் நேசன்
ப.சூரியராஜ் எழுதிய கட்டுரைகள்