தேவதாஸின் கதை அனைவரும் அறிந்ததே. நீளமான தாடியும், சோகம் படிந்த முகமும், கூடவே அவருடன் சுற்றித் திரியும் ஒரு நாயும் என தேவதாஸ் என்றதும் நம்முடைய நினைவில் வந்து ஒட்டிக்கொள்பவை இவை. இங்கு கேள்வியே தேவதாஸால் நாயின் வாழ்க்கை வீணாய்ப் போனதா என்பதுதான்.
தேவதாஸ், சரக்கை அடித்து விட்டு, சைடிஷ்களை நாய்க்குப் போட்டு விடுவார். ஆனால் சரக்கையும் அப்படியே விட்டு விட்டால்... என்னவாகியிருக்கும்? அந்த நாயும் குடிக்கு அடிமையாகி இருக்கும்.

இப்படி குடிக்கு ஒரு நாய் அடிமையாகி இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா... இங்கிலாந்தின் ப்ளைமௌத் பகுதியில் உள்ள நாய் குடிக்கு அடிமையானதால், குடியிலிருந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நாயின் பெயர் கோகோ (Coco). இதன் உரிமையாளர் குடிப்பழக்கம் உடையவர். இவர் தூங்குவதற்கு முன்பு சிறிது குடித்துவிட்டு, மிச்சத்தை அங்கேயே விட்டுச் சென்று விடுவாராம்.
அதனைக் குடித்து கோகோவும், குடிக்குப் பழகியிருக்கிறது. இதன் உரிமையாளர் இறந்த பின், கோகோவுடன் மற்றொரு நாயும் குடிக்கு அடிமையாகி இருப்பதைக் கண்டறிந்தனர். உடனே `Woodside Animal Welfare Trust’ அந்த நாய்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
`ஒரு நாய் குடிப்பழத்தில் இருந்து மீள்வதற்குச் சிகிச்சை அளிக்கப்படுவது இதுவே முதல்முறை' எனக் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக கோகோவுடன் இருந்த மற்றொரு நாய் இறந்தது. கோகோவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடியிலிருந்து மீளும்போது வெளிப்படும் அறிகுறிகள் மற்றும் ஆபத்துகளில் இருந்து காக்க, நான்கு வாரங்கள் வரை கோகோ மயக்க நிலையில் வைக்கப் பட்டிருக்கிறது.

இது குறித்து Woodside Animal Welfare Trust தன்னுடைய முகநூல் பக்கத்தில், `கோகோவிற்கு ஒருமாத காலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆபத்தில் இருந்து விடுபட்டுள்ளது.
சாதாரண நாயைப் போல கோகோ செயல்படத் தொடங்கி விட்டது. ஆனால் தத்தெடுக்கப்படுவதற்குத் தயாராக இல்லை. உடல்ரீதியாக கோகோ குணமடைந்திருந்தாலும், மனரீதியாக சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது. கோகோ போன்ற நாய்களுக்கு உதவ Dunroamin unit-ஐ ஆதரியுங்கள்’ எனப் பதிவிட்டுள்ளது.
ஒரு நாய் குடிக்கு அடிமையாகி சிகிச்சையளிக்கப்பட்டு வரும் செய்தி பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.