உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

கொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்

கொக்கிபீடியா  -  தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
கொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்

கொக்கிபீடியா - தமிழிசை சௌந்தரராஜன்

கொக்கிபீடியா  -  தமிழிசை சௌந்தரராஜன்

பெயர் : தமிழிசை சௌந்தரராஜன்

பிறப்பு : 2 ஜூன், 1961

வயது : 55

இருப்பிடம் : சென்னை

தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.

சாதனைகள் :

அம்மா, ஐயா வரிசையில் மிச்சமிருந்த அக்கா என்ற உறவுமுறையை அடைமொழியாய் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தமிழிசை அக்கா அவர்கள். மேலும், நாத்தனார், கொழுந்தனார், ஓரகத்தி போன்ற உறவுமுறைகள்தான் அந்த வரிசையில் மிச்சமிருக்கின்றன, முந்துபவருக்கே முன்னுரிமை என்பது குறிப்பிடத்தக்கது. `என் வீட்டு கொல்லப்புறத்துல இருக்கிற கிணத்துல திமிங்கலம் வளர்த்தேன்' என்பதுபோல் அடிக்கடி எதையாவது கரியை அள்ளிப்போடுவது இவரது வழக்கம். சமீபத்தில்கூட, `அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுத்திருந்தால் பாரதிய ஜனதாதான் முதல் இடம் பெற்றிருக்கும்' எனக் கூறியிருக்கிறார். `ஜல்லிக்கட்டு' படத்தில் ஹீரோவாக நடித்தவர் யார் எனக் கேள்வி கேட்டாலும்கூட, `ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது' என பதில் சொல்வார். சில நாட்களாக, ‘ராகுலா மோடியா, யார் சிறந்த தலைவர்?'னு விவாதம் பண்ணுவோம்’ என்று ஓயாமல் திருநாவுக்கரசரை வான்ட்டடாக வம்பிழுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்திய சாதனையாக, `அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்...'னு ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, 18.5 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளோடு உலாவிக்கொண்டிருந்த பா.ஜ.க. பிரமுகரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

வேதனைகள் :


கன்டெய்னரில் இருந்தாலும் கடுகு டப்பாவில் இருந்தாலும் அது கறுப்புப்பணம்தான் என இவர் கூறியுள்ளதால், அம்மாக்கள் அனைவரும் பயந்துபோய் கடுகு டப்பாவில் உள்ள பணத்தை அவசர கதியில் சீரக டப்பாவிற்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை உயரம் தாண்டுதலில் 1800 மீட்டர் வரை உயரம் தாண்டியதாகக் கூறி வாழ்த்துத் தெரிவித்து பதறவைத்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு  வங்கிகளில் க்யூவில் காத்திருப்போருக்கு `மோர்' கொடுத்து குறைகளை கேட்டறிந்தார். அதற்கு, `மோர் ரொம்ப புளிப்பாக உள்ளது. குண்டு மாங்காய்க்குப் பதிலாக மூக்கு மாங்காய் போட்டிருக்கலாம்' என சிலர் குறை கூறி வேதனைப்படுத்தியிருக்கிறார்கள்.

குழப்பங்கள் :

`தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கை ராணுவம் அல்ல, வேறு யாரோ' என இவர் ஒருமுறை கூறியிருக்கிறார். ஒருவேளை, தமிழக மீனவர்களைத் தாக்குவது மங்கோலியா, மடகாஸ்கர் தீவுகளைச் சேர்ந்தவர்களா என்பது குழப்பமாக உள்ளது.

மேலும் பார்க்க :

சரஸ்வதி சபதம்
எல்லாமே பா.ஜ.க செயல்
கரியை அள்ளிப் போடுவோம்...

மேலும் படிக்க :

சொந்தக்கருத்துகளும், சோகக்கதைகளும்
பீஸ் இருந்தால்தான் பிரியாணி
கருப்புதான் நமக்குப் பிடிக்காத கலரு...

- ப.சூரியராஜ்