வாசகிகள் பக்கம்ஓவியங்கள் : ஹரன்

கூர்க்கா... ஊறுகா!

##~## |
பேத்தி விஷாலினிக்கு அப்போது இரண்டரை வயது. அன்று வீட்டின் உள்ளே வேலையாக இருக்கும்போது, யாரோ வெளிப்புற கேட்டை தட்டி அழைக்கும் குரல் கேட்கவே, பேத்தியை அனுப்பி பார்த்து வரச் சொன்னேன். அவளும் பார்த்துவிட்டு வந்து ''ஊறுகா வந்திருக்கு பாட்டி'' என்றாள். ''எலுமிச்சை வேண்டாம்... மாங்காய் ஊறுகாய் மட்டும் வாங்கு'' என்று என் மகளுக்கு நான் குரல் கொடுக்க, அவளோ கேட்டை பார்த்துவிட்டு, ''ஹைய்யோ அம்மா... உன் பேத்தி கூர்க்காவைத்தான்... ஊறுகா போட்டுட்டா!'' என்று சொல்லிச் சிரிக்க, நானும் சிரிக்க, என் பேத்தியுடன் சேர்ந்து புரியாமல் விழித்திருந்தார் 'ஊறுகா’ கூர்க்காவும்!
- சுப்புலட்சுமி சம்பத்குமார், மல்லசமுத்திரம்
கேப்படா... கேப்ப!

எங்கள் வீட்டுக்கு அருகில் மதுரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்தது. ஒருநாள், அந்த வீட்டிலுள்ள பாட்டி... கேழ்வரகைச் சுத்தம் செய்து காய வைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த என் மூன்று வயது மகன் கீர்த்திவாசன், ''இது என்ன பாட்டி..?'' எனக் கேட்டான். அவர், ''கேப்படா'' என்றார். உடனே என் மகன், ''நான் கேக்கமாட்டேன் பாட்டி'' எனக் கூற, அவரோ விடாமல் ''அட, கேப்படா'' என்று நையாண்டி பண்ண... சுற்றி இருந்த எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்புதான். அதன்பின் அவனுக்கு 'கேப்பை' என் றால் 'கேழ்வரகு' எனப் புரிய வைத்தேன்!
- இரா.ருக்மணி, ஓசூர்
தாத்தாவுக்கு பாலாபிஷேகம்!

மூன்று வயதுப் பேரன் பிரவீன்... ஒருநாள், ''பிள்ளை யாருக்கு மட்டும் பன்னீர், பால் அபிஷேகம் செஞ்சு குளிப்பாட்டுறாங்க. நாமெல்லாம் வெறும் தண்ணீர் மட்டும்தான் ஊத்திக் குளிக்கணுமா..?'' என்றான். அதற்கு நான், ''சாமிக்குதாம்பா அபிஷேகம் செய்வாங்க. நாமெல்லாம் மனுஷங்க. தண்ணி ஊத்திதான் குளிக்கணும்'' என்றேன். உடனே அவன், ''அப்போ, நம்ம தாத்தாவும் சாமிதானே? அவர் ஏன் பால், பன்னீர் ஊத்திக் குளிக்க மாட்டேங்கிறார்..?'' என்று கேட்க, நான் குப்பென்று சிரித்துவிட்டேன். என் கணவர் சாமிநாதனை... 'சாமி’ என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்!
- எஸ்.புவனா, சீர்காழி