மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிஸினஸ் கேள்வி - பதில்

வாருங்கள்... வழிகாட்டுகிறோம் !

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

புடவை டிசைனுக்கான ஆர்டர்கள்... பெறுவது எப்படி?

''இறந்துபோன என் மகளின் நினைவாக, சட்டப்பூர்வமாக பதிவு செய்து ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறேன். இதற்கு வருமான வரிவிலக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் முதியோருக்கும், குழந்தைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். எனக்கு, உங்களிடமிருந்து இரண்டு வகைகளில் உதவிகள் தேவைப்படுகின்றன.

பிஸினஸ் கேள்வி - பதில்

1. டிரஸ்ட்டுக்கு வெளிநாட்டவர் உதவி பெறுவது எப்படி?  

2. நான் புடவைகளுக்கு நன்றாக டிசைன் செய்வேன். ஸ்டோன் வொர்க், ஃபேப்ரிக் பெயின்ட்டிங் இவற்றுக்கு எப்படி, எங்கு ஆர்டர்கள் வாங்குவது? ஒரு சில கடைகளில் ஆர்டர் கிடைத்தால், சிலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து உதவுவதுடன், அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை டிரஸ்ட்டுக்கும் செலவு செய்யலாம் என்பது என் ஆர்வம். வழிகாட்டுங்களேன்.''

- மங்கலவல்லி சுப்ரமணியன், சேலம்

''டிரஸ்டுக்கு வெளிநாட்டவர் உதவிபெற, முதலில் அதை. 'எஃப்.சி.ஆர்.ஏ' (FCRA- Foreign Contribution Regulation Act) சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும். இதற்கென உள்ள ஆடிட்டர்களை நாடினால், உதவுவார்கள். இதற்கு மத்திய அரசும் உதவும். அடுத்ததாக, உதவி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை வெப்சைட்டில் தேடித் தேர்வு செய்யுங்கள். உங்கள் செயல்பாடுகளை குறும்படமாகத் தயாரித்து, அவர்களுக்கு அனுப்பி வைத்து தொடர்பு ஏற்படுத்திச் செயல்படுங்கள். வெளிநாட்டு நண்பர்களின் உதவியையும் நாடுங்கள்.

பிஸினஸ் கேள்வி - பதில்

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், உங்கள் ஊரில் உள்ள ஏதாவது ஒரு வங்கியில் இருக்கும், உங்களுடைய கணக்கின் மூலம் மட்டுமே வெளிநாட்டினரின் பணப்பரிவர்த்தனையை பெறலாம். மேலும் உங்கள் டிரஸ்ட் மூன்று ஆண்டுகள் கடந்திருந்தால் மத்திய, மாநில அரசுகளின் உதவியையும் பெறலாம். அதாவது, தங்களுடைய டிரஸ்ட் பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தால், டிரஸ்ட் தொடர்பாக அங்கே நடைபெறும் கூட்டங்களுக்கு அழைப்பு வரும். அதில் கலந்து கொள்ளும்போது, உதவிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கும்.

உங்களின் அடுத்த கேள்விக்கு வருகிறேன். சேலத்தில் கட் வொர்க், பேட்ச் வொர்க், குந்தன் வொர்க், ஆரி வொர்க், ஹேண்ட் எம்ப்ராய்டரி வொர்க், ஸ்டோன் வொர்க் போன்ற வேலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதற்கு அதிக ஆட்கள் தேவையும் உள்ளது. முதலில் நீங்கள் மேற்கண்ட வேலைப்பாட்டுக்கான பயிற்சியை மறுபடியும் முழுவதுமாக பெறுங்கள். அந்த வேலைப்பாட்டின் மாதிரியை துணிகளில் செய்து கொண்டு, சேலத்தில் உள்ள தையற்கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளை அணுகுங்கள். உங்கள் மீதும், வேலையின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டால்... உடனே

பிஸினஸ் கேள்வி - பதில்

ஆர்டர்கள் தருவார்கள்.

ஒரு புடவைக்கு 2,000 ரூபாய் வரையிலும், ஒரு ஜாக்கெட்டுக்கு 600 ரூபாய் வரையிலும் செலவு செய்ய நிறைய பேர் காத்திருக்கின்றனர். எனவே, தைரியமாக இதைத் தொழிலாக ஆரம்பிக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் வேலையாட்களுக்கு நல்ல பயிற்சி அவசியம். ஓர் ஆண்டுக்குள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மாதம் 20 ஆயிரத்துக்கும் மேல் வருமானம் கிடைக்கும் என்பது, நிறைய பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கும் உண்மை. உங்களுக்குத் தேவையான பயிற்சியும், கடன் உதவியும் வங்கிகள் அளிக்கும். நீங்கள் சிறிது முயற்சி எடுக்க வேண்டும்... அவ்வளவுதான்.''

''நீட்ஸ் திட்டம், சுயமுன்னேற்றத்துக்கு கைகொடுக்குமா?''

''நான் முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 'நீட்ஸ்' (NEEDS) திட்டத்தின் மூலம் சுயமுன்னேற்றத்துக்கான வழி காண விரும்புகிறேன். அத்திட்டம் பற்றிய விவரங்கள், குறிப்பாக எங்கள் மாவட்ட அளவில் கொடுக்க முடியுமா..?''

- எஸ்.கவிதா, மயிலாடுதுறை

''இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ள அரசுத் திட்டம்தான் 'நீட்ஸ்'! இத்திட்டத்தின்படி உங்களுடைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 தொழில்கள் வரை துவங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்கள். அதில் 12 தொழில்கள், மாவட்டத் தொழில் மையம் மூலமாக வங்கிக் கடனாகவும், 6 தொழில்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)மூலமாகவும் கொடுக்க உள்ளனர். திட்டத் தொகை 5 லட்சம் முதல் 100 கோடி வரை இருக்கலாம்.

மேலும் சில விவரங்கள்...

பிஸினஸ் கேள்வி - பதில்

நீங்கள் பெறும் கடன்... நிலம், கட்டடம், இயந்திரம், மின்சாரம், நடைமுறை மூலதனம் என தேவையான செலவுகளுக்கானதாக இருக்கலாம். இதில் மானியமாக 25%  கிடைக்கும். இந்தத் தொகையானது... நிலம் அல்லது கட்டடம், இயந்திரம் ஆகியவற்றுக்குத் தரு வார்கள். மொத்தத் திட்டத்தில் 50% பெண் தொழில்முனைவோர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. மற்றும் 18% தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி.

உங்கள் மாவட்டத்துக்கு ரூபாய் 225 லட்சம் மானியம் கொடுக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில்தான் பயன்பெறுபவர்கள் உள்ளதால், பெரிய திட்டங்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். அதாவது, 50 லட்சம் முதல் ஒரு கோடி போன்ற திட்டங்களுக்கு! உங்கள் திட்டத்தை சரியாக அளவிட்டு நிலம், கட்டடம் என அனைத்துத் தேவைகளையும் திட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வந்து மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும்.

உங்களுக்கு ஒரு மாத உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும் உண்டு. இத்திட்டம் தனிநபர் அல்லது பங்குதாராக உள்ள நிறுவனத்துக்கும் உண்டு. ஆனால், அனைத்து பங்குதாரர்களும் டிகிரி அல்லது டிப்ளமா அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். புதிய தொழில்முனைவோராக இருக்கவேண்டும். பங்குதாரர் நிறுவனம் என்றால், ஒருவருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

உங்கள் வாழ்விலும், 'நீட்ஸ்' விருட்ச விதை ஊன்றட்டும்!''

பிஸினஸ் கேள்வி - பதில்

''35 வயதுக்கு மேல் வங்கிக் கடன் கிடைக்காதா?''

''சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வேண்டி தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகியபோது, 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுப்பதில்லை என்று கூறினர். என் போன்றவர்களுக்கு வங்கிக் கடன் வாங்கவே முடியாதா?''

- ஜெ.சகுந்தலா, சென்னை

''இது தவறான தகவல். கவலை வேண்டாம். ஆண், பெண் இருபாலரும் 55 வயது வரை வங்கிக் கடன் பெற முடியும். பொதுவாக, திருமணத்துக்குப் பின் சில வருடங்கள் கணவர், குழந்தை, குடும்பம் எனச் சுழன்று, குழந்தைகளுக்கு தன் அரவணைப்பு அவ்வளவாக தேவைப்படாத நிலையில், பெண்களின் மனநிலை (35 - 45 வயதுகளில்) மாறும். 'சும்மா இருக்கிறோமே' என்கிற எண்ணம் தோன்றும். தங்களுக்கு அங்கீகாரம் தேவை என உணர்வார்கள். இப்போது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்ற பக்குவமும் கிடைத்திருக்கும். இந்த வயதில்தான் நீங்கள் இருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்குத் தேவையான தொழில் பயிற்சி மற்றும் கடன் உதவி நிச்சயம் கிடைக்கும்.

'யு.ஓய்.இ.ஜி.பி' (UYEGP) திட்டத்தில் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மானியத்துடன் கடன் கிடைக்கிறது. மாவட்டத் தொழில் மையத்தை அணுகவும். மேலும் நீங்கள் 45 வயது கடந்த பெண்ணாக இருந்தால், ஸ்டேட் பேங்க்  ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க் போன்ற வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் பிணையம் இல்லாமலும் கடன் உதவி செய்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.''