ரிமோட் ரீட்டாஸ்க்ரீன்ஸ்
“பையனும் அழுவான்!”
##~## |
'சொக்கத் தங்கம்’, 'தென்றல்’ திரைப்படங்கள்ல மனசுல நின்ன கேரக்டர்கள் செய்த உமா, இப்போ சன் டி.வி 'வள்ளி’ சீரியல் மூலமா சின்னத்திரை ரசிகர்கள்கிட்ட ஓட்டு வாங்கிட்டு இருக்காங்க!
''கன்னடத்துல நீங்கதானே 'சித்தி’?''

''உனக்கு எல்லா ஏரியா நியூஸும் தெரியுது ரீட்டா. ஆமா! தமிழ்ல ராதிகா மேம் நடிச்ச 'சித்தி’ சீரியலோட கன்னட வெர்ஷனான 'சிக்கம்மா’ சீரியல்தான் சின்னத்திரையில எனக்கு முதல் வாய்ப்பு. கடந்த அஞ்சு வருஷமா அங்க சூப்பர் ஹிட்டா ஓடிட்டிருந்த அந்த சீரியல், நாலு மாசத்துக்கு முன்னதான் முடிஞ்சது. அடுத்த சீரியல் வாய்ப்புதான் 'வள்ளி’. ஒவ்வொரு பெண்ணும் தனிப்பட்ட வாழ்க்கையில எதிர்கொள்கிற, சாதிக்க நினைக்கிற கதைதான் 'வள்ளி’ சீரியல். நேயர்கள்கிட்ட வள்ளி கேரக்டருக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைச்சிருக்கு. 'வள்ளி’க்கு ஏற்படுற பிரச்னைகளை பார்த்துட்டு, பலரும் நிஜ வாழ்க்கையில் நடக்குற மாதிரியே இருக்குனு போன்ல கலக்கத்தோட பேசுவாங்க. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த புரொடக்ஷன் ஹெட் விஜயலட்சுமி மேம், 'வள்ளி’ டீம் எல்லோருக்கும் என் நன்றியை மறக்காம சொல்லிடு ரீட்டா!''
''உமாவோட வீடு..?!''
''அம்மா சுமித்ரா சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதால, குடும்பம், நடிப்புனு ரெண்டுலயும் எனக்கு வழிகாட்டி அவங்கதான். பெங்களூருவுல எங்க வீட்டுக்கு மூணு வீடு தள்ளிதான் அம்மா வீடு இருக்கு. நினைச்சப்போ எல்லாம் ஓடிடுவேன். கணவர் துஷ்யந்த் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். நாலு வயது மகன் மாத்விக், வர்ற வருஷம் ஜூனியர் கே.ஜி போறான். சீரியல்ல அம்மா அழறதைப் பார்த்துட்டா, அவனுக்கும் அழுகை வந்துடும். அவனுக்காக இப்போ மாசத்துல 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் ஒப்புக்கிறேன். அதுக்கு மேல நோ!''னு சொன்னாங்க உமா அம்மா!
'சிக்கம்மா’ சொன்னா சரிதான்!
வருஷம் 12
எப்போ டி.வி-ய ஆன் பண்ணினாலும், ஏதாவது ஒரு சேனல்ல வந்து கண்கள் படபடக்க டயலாக் பேசிட்டு இருக்கும் தேவிகிருபா சின்னத்திரைக்கு வந்து 12 வருஷம் ஆச்சாம். ''எல்லோரும் என் வயசை தாராளமா கணக்குப் போட்டுக்கப் போறாங்க ரீட்டா. அதனால மகா ஜனங்களுக்கு சொல்லிக்கிறது என்னனா, நான் எட்டாவது படிக்கும்போதே நடிக்க வந்துட்டேன். எல்லா குழந்தைகளையும் வீட்டுல 'படி படி’னு சொல்லி வளர்ப்பாங்க. ஆனா என்னை 'நடி நடி’னு சொல்லி வளர்த்தாங்க. இத்தனை வருஷம் ஓடிப்போச்சானு எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு''னு விளக்கம் கொடுக்குற தேவிகிருபா, காஸ்ட்யூம் டிசைனரும்கூட.
''தென்றல், மாயா சீரியல்கள்ல நான் போட்டுட்டு வர்ற பல காஸ்ட்யூம்ஸ், என்னோட கை வண்ணம்தான். அதைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் அவங்களுக்கும் டிசைன் செய்து தரச் சொல்லிக் கேட்பாங்க. எனக்குதான் நேரம் கிடைக்கிறதில்லை!''னு சொன்னவங்க, தானே வடிவமைச்ச காஸ்ட்யூம்கள் பற்றி ஆர்வத்தோட பேசினாங்க.

''ஆரம்பத்தில் பிளெய்ன் புடவைகளில் ஃபேப்ரிக் பெயின்ட்டால டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் பார்ட்டி வேர் புடவைக்கு ஒரு ஐடியா தோணுச்சு. புடவை வாங்கி, அதுல நானே பார்டர் வொர்க் செய்தேன். பார்டர்லயும் சேலையின் பள்ளு பகுதியிலயும் ஸ்டோன் வொர்க் செய்தேன். ஃப்ரெண்ட்ஸ் பார்த்துட்டு பாராட்டினாங்க. அந்த உற்சாகத்துல சமீபத்துல கறுப்பு, வெள்ளை நிறங்களில் ரெண்டு புடவைகள் வாங்கி, அது ரெண்டையும் ஒண்ணா அட்டாச் செய்து டிசைன் செய்தேன். பார்டர் வேலைக்காக தனியே 10 மீட்டர் பச்சை மற்றும் பொன்னிறத்துல ஃபேப்ரிக் வாங்கி டிசைன் செய்தேன். முடிவுல பார்த்தா, அவ்ளோ அழகு! இதே புடவையை கடையில் வாங்கினா 3,000 ரூபாய்க்கும் மேல சொல்வாங்க. அதுவே நான் பண்ணினது 1,000 ரூபாய்க்குள் முடிஞ்சுடுச்சு!'னு சிரிக்கிறாங்க தேவிகிருபா!
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ப.சரவணகுமார்
கோவைப் பொண்ணு!

சன் டி.வி 'கார்த்திகைப் பெண்கள்’ சீரியல், 'சூப்பர் குடும்பம்’ போட்டியாளர், விஜய் டி.வி 'ஜோடி நம்பர் ஒன் சீஸன் 6’னு பிஸியா இருக்காங்க ஆனந்தி.
''இந்த வருஷம் தகவல் தொழில்நுட்ப துறையில எம்.எஸ்சி. முதுகலை பட்டம் வாங்கப்போற பொண்ணு ரீட்டா நான். இருந்தாலும் என்னோட ஆர்வம் முழுக்க நடிப்பும் நடனமும்தான். அதுக்குக் காரணம், எங்கம்மா கோயம்புத்தூர்ல நடத்திக்கிட்டிருக்கிற 'ரேணு ரித்யாலயா’ டான்ஸ் ஸ்கூல். ரெண்டு வருஷத்துக்கு முன்ன விஜய் டி.வி-யோட 'கனா காணும் காலங்கள்’ ஆடிஷன்ல தேர்வாகி, இப்போ சென்னைவாசியா ஆயிட்டேன். இப்போ நடிப்பு, நடனத்தோட நண்பர்கள் எடுக்குற குறும்படங்களுக்கு ஸ்கிரிப்ட் ஐடியா வரைக்கும் வந்தாச்சு!'' என்ற ஆனந்தி, சுத்தி இருக்கிற எல்லாருக்கும் 'ட்வீட் போஸ்ட் ஜோக்’கள் அள்ளி விடுறாங்க. ரீட்டாவுக்கும் ஒண்ணு...
''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''
(ஃப்ரெண்ட் ஒருத்தி 'ட்வீட்’ பண்ணிட்டு, 'நாளைக்கு பதில் சொல்றேன்!’னு போயிட்டா. அதுக்கு ஃப்ரெண்ட்ஸோட கமென்ட்ஸ்...)

சம்பளத்தை குறைப்பாங்க!

சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!

மற்ற மொழிப்படங்களை தேர்வு செய்வாங்க!
(மறுநாள் ஃப்ரெண்டோட ரிப்ளை)

காய்கறி வாங்குவாங்க!
வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
இளைய தலைமுறைக்கு இனிய பரிசு!
''கலைஞர் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான 'விடியலே வா’ நிகழ்ச்சியின் 'ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் பேசிய
சுப.வீரபாண்டியன், 'பெற்றோர்கள் தங்களுக்குள் மனஸ்தாபங்கள் இருந்தாலும், அதை பிள்ளைகளின் எதிரில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதே சிறந்த பரிசு’ எனக் கூறினார். உண்மைதான். பெற்றோர்கள் இதனைப் புரிந்து கொண்டால், அதுதான் வருங்கால தலைமுறைக்கு நாம் கொடுக்கும் சிறப்பான பரிசாக இருக்கும்'' என்று பரிந்துரைக்கிறார் கடலூரைச் சேர்ந்த பி.ஜோதி
'ரொம்ப சிறப்பு!’
''மக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணிக்கு 'சொல்லி அடி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளினி சித்ரா தன்னுடைய அட்சரசுத்தமான தமிழில் நிகழ்ச்சியை தொய்வில்லாமல் நடத்துகிறார். அதுவும் சித்ரா அடிக்கடி சொல்லும் 'ரொம்ப சிறப்பு’ என்ற வார்த்தையின் அழகு எங்கள் வீட்டிலும் தொற்றிக் கொண்டு விட்டது. மனதை கொள்ளையடிக்கும் நிகழ்ச்சி இது!'' என்று இதயப்பூர்வமாக பாராட்டு கிறார் கலிங்கியத்தைச் சேர்ந்த எஸ்.லோகநாயகி
தாய்மையின் தியாகம்!
''அனிமல் பிளானட் சேனலில் தினமும் காலை 11 மணி முதல் 11.30 வரை 'ஃபூல்டு பை நேச்சர்’ (Fooled by nature) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். எல்லாமே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆச்சர்யங்கள்தான். தன் வலையில் நிறைய முட்டைகள் இட்டு குஞ்சுகள் பொரித்த தாய் சிலந்தி, குட்டிகளுக்காக இரை தேடிப் போகிறது. இரை ஒன்றும் கிடைக்காததால் தானே தான் கட்டிய வலையில் போய் விழுந்து தன் குஞ்சுகளுக்கு இரையாகிறது. தன்னையே இரையாக்கிய சிலந்தியின் தாய்மையை பார்த்து வியந்து போனேன். அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி'' என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்திராணி பொன்னுசாமி.