நியூஸ்
##~## |
முழுக்க ஆண்களே நிறைந்திருக்கும் அலுவலகங்கள்... பெயருக்கு பெண்களும் இடம்பிடித்திருக்கும் அலுவலகங்கள்தான் இங்கே அதிகம். இதற்கு நடுவே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்யும் அலுவலகங்களும் இருக்கின்றன. ஆனால், பரவலாக ஆண்களும், பெண்களும் வந்துபோகின்ற 'சேவை உதவி மையத்தில்’ செக்யூரிட்டி தொடங்கி மேனேஜர் வரை அனைவருமே பெண்கள் என்றால், ஆச்சர்யமான... ஆரோக்கியமான விஷயம்தானே?! ஆம்... சென்னை, டி.டி.கே சாலையில் உள்ள 'வோடஃபோன்’ சேவை உதவி மையத்துக்குள் நுழைந்தால்... வரவேற்ற செக்யூரிட்டி வசந்தி தொடங்கி, ஸ்டோர் மேனேஜர் கீதா வரை அனைவரும் பெண்களே!
''கடந்த நவம்பர் மாதம்தான் இதைத் தொடங்கினோம். இந்த மையம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கவேண்டும் என்று திட்டமிட்டபோதுதான், முழுவதும் பெண்களையே பணியமர்த்த முடிவெடுத்தோம். தற்போது, 15 பெண்களுக்கும் மேல் வேலை செய்கிறோம். அனைவரும் பெண்களாகவே இருப்பதால், இதற்கு 'ஏஞ்சல் ஸ்டோர்’ என்றும் செல்லமாக பெயர் வைத்திருக்கிறோம்!'' என்று பூரிப்புடன் சொல்கிறார் மேனேஜர் கீதா!


சேவை அதிகாரியாக பணிபுரியும் அனல், ''இதுக்கு முன்ன வேலை செய்த இடத்துல... ஆண்களோட வேலை பார்த்த அனுபவத்தைவிட, பெண்கள் மட்டும் வேலை பார்க்கிற இந்த சூழல் வசதியா இருக்கறதா உணர்றேன். சமயங்கள்ல இதுல சில பாதகங்களும் உண்டு. உதாரணமா, இங்க வரும் ஆண் வாடிக்கையாளர்கள் சிலர், வாய்ச்சண்டைகள்ல இறங்கிடறாங்க. கலங்காம அதையெல்லாம் ஒற்றுமையா சமாளிச்சுடறோம். மற்ற வாடிக்கையாளர்களும் இதுமாதிரியான சந்தர்ப்பங்கள்ல எங்களுக்கு உதவியா இருப்பாங்க. ஒரு அலுவலகத்தை முழுக்க பெண்களே வெற்றிகரமா இயக்கமுடியும்ங்கிறதுக்கு... எங்க ஸ்டோர் சிறந்த எடுத்துக்காட்டு!'' என்றார் பெருமையுடன்.
''பொம்பளைங்க கையில கொடுத்தா அப்படித்தான் ஆகும்னு நாளைக்கு ஒரு சொல் வந்துடக் கூடாதுனு, இங்க வேலை பார்க்கிற ஒவ்வொருவரும் அவங்கவங்களோட வேலையில ரெண்டு மடங்கு கவனமா இருக்காங்க. கஸ்டமர்கள் அதிகம் வர்ற நேரம் இது. அப்புறமா பேசுவோமா?!'' என்றபடியே வேலையில் கவனம் திருப்பி, நமக்கு விடைகொடுத்தார் செக்யூரிட்டி வசந்தி!
சபாஷ்!
- சா.வடிவரசு படங்கள்: ரா.மூகாம்பிகை