டெல்லி உயர் நீதிமன்றம், போக்சோ சட்டம் சம்மந்தப்பட்ட பல வழக்குகளை விசாரித்த நிலையில், போக்சோ சட்டத்தில் பாலியல் உறவுக்கான வயது வரம்பை (Age of Consent) 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
இதையொட்டி, இந்தியத் தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட், 16-18 வயதுக்குட்பட்டவர்கள் மனம் விரும்பி ஒப்புதலுடன் உடலுறவு கொண்டாலும், சட்டத்தில் அதை நாம் குற்றமாகக் கருதுவதால், கைதான சிறுவனை பாலியல் குற்றவாளிகள் போல நடத்த வேண்டி இருக்கிறது. அதனால் அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் காதலித்து திருமணம் செய்யும் போது, அவர்களை அவசரப்பட்டு கைது செய்து குற்றவாளி ஆக்க வேண்டாம் என்று காவலர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “காவலர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் உடனடியாக இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம். சம்மந்தப்பட்ட சிறுமியிடம் பொறுமையாக விசாரித்து ஆலோசனை வழங்கியப் பின், மேலதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கவும்” என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் தில்லி உயர் நீதிமன்றம், “போக்சோ சட்டத்தின் நோக்கம், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளை காத்து, பாலியல் அத்துமீறல்களை ஒழிப்பதுதானே தவிர, இருவர் மனம் விரும்பி காதலிக்கும் போது அவர்களை பிரித்து, சம்மந்தப்பட்ட ஆணை மட்டும் சிறையில் அடைப்பது அல்ல” எனத் தெரிவித்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாராளுமன்றத்தில் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, மத்திய அரசு பாலியல் இசைவுக்கான வயது வரம்பை குறைக்கும் திட்டத்தில் இல்லை என்று தெரிவித்தார்.
இது பற்றி, அருணோதயா அமைப்பின் நிர்வாக இயக்குனரும், குழந்தைகள் நல ஆர்வலருமான, விர்ஜில் டி சாமி ”சரியான பாலியல் கல்வி இல்லாமல், நாம் என்ன சட்ட திருத்தங்கள் கொண்டு வந்தாலும் அது முழுமையான பலனை அளிக்காது. வயது வரம்பை மாற்றியமைப்பதால் பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. அதனால் தொடர்ந்து வேறு விதமான பிரச்னைகளை சந்திக்க வேண்டும். அதிலும் நம் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள்.
பெற்றோர்கள் சிலர் சாதி, பொருளாதார பின்புலம் என பல காரணங்களுக்காக போக்சோ சட்டத்தைப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட சிறுவனை சிறையில் அடைக்கிறார்கள்.
18 வயதுக்குட்பட்ட இருவர் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினால், உடனே அதை கடத்தல் வழக்காக பதிவு செய்யாமல் விசாரனைக்குப் பின் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அதே போல பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தால், அதையும் முழுமையான விசாரணைக்குப் பின்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டங்களை மாற்றி அமைத்துவிட்டால், சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. நமது நோக்கம் ஒட்டுமொத்த தலைமுறையின் முன்னேற்றத்தை நோக்கி இருக்க வேண்டும்” என்கிறார்.

பாலியல் புரிதலுடன், தகுந்த மருத்துவ வசதிகளும் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும். சமீபத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 17 வயது பெண் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை அணுகிய போது, உடனே காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெண்ணின் கணவரை அதிகாரிகள் தைது செய்தனர். சட்டப்படி இது குற்றம் என்றபோதும், பழங்குடி கிராமங்களில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு திருமணம் நடப்பது என்பது இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. தண்டனைக்கு பயந்து பல பெண்கள் பிரசவத்துக்கு மருத்துவமனையை அணுகத் தயங்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ரோமியோ-ஜூலியட் சட்டம்
சில நாடுகளில் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள் இருவரும் வயது வரம்புக்கு கீழ் இருந்தாலும், அவர்கள் வயது ஒன்றாக இருந்தால், அப்போது சில விதிவிலக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதை ரோமியோ-ஜூலியட் சட்டம் என்கிறார்கள். சில நாடுகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை வயது வித்தியாசம் இருக்கும் போது, அது பாலியல் குற்றமாகக் கருதப்படுவதில்லை.
மற்ற நாடுகளின் நிலவரம்?
ஜெர்மனியில் பாலியல் உறவுக்கான வயது வரம்பு 14 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 16 வயதுக்கு மேல் எந்த பாலினரும் யாருடனும் பாலியல் உறவில் ஈடுபடலாம். அமெரிக்காவில் பரவலாக 16 முதல் 18 வரை வயது வரம்பு அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இங்கு ரோமியோ-ஜூலியட் சட்டம் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான், ஈரான், கத்தார், யெமன் போன்ற நாடுகளில் திருமணமான ஒருவர் மட்டுமே பாலியல் உறவில் ஈடுபட முடியும். யெமனில் திருமணத்திற்கு என எந்த வயது வரம்பும் கிடையாது. ஈரானில் 13 வயது நிரம்பிய பெண்களும், 15 வயதான ஆண்களும் திருமணம் செய்துக்கொள்ளலாம். பிலிப்பைன்ஸில், 2022ல்தான் பாலியல் உறவுக்கான வயதை 12ல் இருந்து 16ஆக உயர்ந்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாலியல் இசைவுக்கான வயது வரம்பு 17ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வயதில் மூத்தவர் இளையவரின் அதிகாரப் பதவியில் இருக்கும் போது, (ஆசிரியர், மத குருக்கள், பயிற்சியாளர்) வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.