"விவரம் தெரியுற வயசுக்கு முன்னாலேயே இவுங்க தெரிஞ்சுகிட்டது கேரம் போர்டுதான்னு நினைக்கிறேன். ரெண்டு பேருமே ஒரே வயசுலதான் விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. அதாவது நாலாவது படிக்கும்போதுல இருந்து. இப்போ ரெண்டு பேருமே கேரம்ல தேசிய அளவிலான சாம்பியன்ஸ். ரெண்டு பேருமே என்னோட ஸ்டூடன்ட்டுங்கறது பயிற்சியாளரா எனக்கு இன்னும் பெருமைதானே!" பேசும்போதே ஆறுமுகம் முகத்தில் அவ்வளவு பெருமிதம். மித்ரா மற்றும் மனுராஜ் இருவரும் கேரம் போர்டு நேஷனல் சாம்பியன்கள். மூவருடனும் உரையாடியதில் இருந்து...
"நான் சிம்மக்கல் சாரதா ஸ்கூல்ல இப்போ எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகப்போறேன். அப்பா ஆட்டோ ஓட்டுறாங்க அம்மா வீட்டுல இருக்காங்க. வீட்டுல இருக்காங்கன்னு சிம்பிளா சொல்றதவிட நான் எங்கெல்லாம் டோர்னமென்ட்டுன்னு கிளம்பி நிக்கிறனோ அம்மாவும் எனக்கு சமமா தன்னை வருத்திக்கிட்டு என்னோட கிளம்பி வந்துருவாங்க. சின்ன வயசுல பக்கத்து வீட்டுப் பசங்க எல்லாரும் கேரம் போர்டு விளையாடுறதப் பார்த்து கேரம் போர்டு கேட்டதால, முதன் முதலா அறுநூறு ரூபாய்க்கு வாங்கிக் குடுத்தாங்க. அதுக்கப்புறம் இன்னும் அதிகமா போர்டுகூட பேச ஆரம்பிச்சுட்டேன்.

சின்னச் சின்ன டோர்னமென்ட்டா ஜெயிக்கவும் எனக்கும் நம்பிக்கை அதிகமாச்சு. அப்போ இன்னும் முறையாக் கத்துக்க பயிற்சியாளர்கிட்ட போங்கன்னு சொல்லவும் ஆறுமுகம் சார்கிட்ட வந்தோம்.
அப்பாவுக்கு வாடகை ஆட்டோதான். போக வர்றதுக்குப் பணம் இல்லாம நிறைய மேட்செல்லாம் போகாம இருந்திருக்கேன். ஆனா எல்லாத்தையும் தாண்டி இப்போ நேஷனல் லெவல்ல ஜெயிச்சது ரொம்பவே சந்தோஷம். இன்னும் அடுத்தடுத்த உயரம் போகணும்" என்கிறார் மித்ரா.
"எனக்கு கேரம் விளையாட ஆசை வந்ததே எங்க அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் விளையாடுறத பார்த்துதான். இப்போ நான் மங்கையற்கரசி ஸ்கூல்ல ப்ளஸ் 1 படிக்கிறேன். காலையில மூணு மணிக்கு எந்திரிக்கணும். பிராக்டீஸ் முடிச்சுட்டு ஸ்கூலுக்குக் கிளம்பணும். திரும்ப சாயங்காலம் ப்ராக்டீஸ்... அது முடிச்சுட்டு படிக்கணும். இப்படி நேரம் போறதே தெரியாது. விளையாடத்தானே போறோங்கிறதால எனக்கும் எந்தக் கஷ்டமும் தெரில" எனச் சொல்லும் மனுராஜ், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
"நான் பதினேழு வருஷமா கேரம் ஆடிக்கிட்டிருக்கேன். நேஷனல் லெவல் பிளேயர்தான் நானும். அப்பா போக்குவரத்துத் துறைல வேலை பார்த்தாங்க. அஞ்சுல இருந்து ஏழு மணிவரைக்கும் பயிற்சி கொடுப்போம். நாங்க பிளேயரா இருந்த காலத்துல சர்ட்டிபிகேட் மட்டும்தான் இருக்கும். இப்போ நிறைய பரிசுத்தொகை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... இது இப்போ உள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய ஊக்கத்தைக் கொடுத்திருக்கு!" என்கிறார் கோச் ஆறுமுகம்.

'ஆறுமுகம் சார் எப்படி?' என்று கேட்டால், மித்ராவும் மனுராஜும் 'ஐயய்யோ அவரா, பயங்கரமான ஆளாச்சே' என ஆறுமுகத்தை நக்கலடிக்க, பின் அவர்களே, "அச்சோ அப்படியெல்லாம் இல்ல... சார் பார்க்கத்தான் சாஃப்ட்... ஆனா ட்ரெயினிங் அப்போ சேட்ட பண்ணுனா செம வயலன்ட்டா மாறிடுவாங்க. எங்க சார் பகல்ல கேரம் கோச்சா இருக்காங்க. இரவுல பரவை மார்க்கெட்டுல வேலை பார்க்குறாங்க. இப்படி பகல் இரவுன்னு வேலை பார்க்கிறதனால அவரு தூங்கிருவாருன்னு நாம அவர ஏமாத்த முடியாது. காலையில நாலு மணிக்கு நாங்க அவருக்கு போன் பண்ணலைன்னா அடுத்த அஞ்சு நிமிஷத்துல எங்களுக்கு அவருகிட்ட இருந்து போன் வந்துரும். அவரோட சொந்தத் தம்பி தங்கச்சிங்க மாதிரிதான் ரொம்ப கவனமா எங்களப் பார்த்துக்கிடுவாரு. இதை ரொம்பவே பாதுகாப்பாவும் உணர்றோம்" என்று உணர்வுபூர்வமாகப் பேசுகின்றனர்.
இப்போது ஆறுமுகம் தொடர்கிறார். "முதன் முதலா அபிநயாங்கிற மாணவிதான் என்னோட ஸ்டூடன்ட்டா அறிமுகம் ஆனாங்க. அவுங்க மாவட்ட அளவுல மாநில அளவுலன்னு அடுத்தடுத்த லெவல் போகவும், மனுராஜும் மித்ராவும் என்கிட்ட வந்தாங்க. மனுராஜ் வந்து சேர்ந்த மூணாவது மாசத்துலயே மாவட்ட அளவுல சாம்பியன் ஆனாரு... பசங்க சொல்றமாதிரி பயிற்சி அப்போ ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டா இருந்திருக்கேன். ஏன்னா இதுல மனச ஒருமுகப்படுத்தி விளையாடணும், கவனம் சிதறுன கேம் நம்மளோடது இல்ல! இப்போ என்கிட்ட எட்டு மாணவர்கள் இருக்காங்க.
பகல்ல கேரம் மாஸ்டர், ராத்திரில மார்க்கெட்ல அக்கவுன்ட்டன்ட் வேலைன்னு ஓய்வே இல்லாமதான் ஓடிக்கிட்டிருக்கேன். என் வீட்டு மாடியிலயே கேரம் பயிற்சிக்காக வாடகைக்கு இடம் பிடிச்சு சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருக்கேன். இதுல நல்ல திறமையான மாணவர்கள் இருக்காங்க. ஆனாலும் பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாத அளவு வறுமையிலயும் இருக்காங்க. அதனால பெரும்பாலும் நான் பணத்த முதன்மையா வச்சு பயிற்சி குடுக்குறது இல்ல. மதுரையில் இருந்து நிறைய சாம்பியன்களை உருவாக்கணும். 'எப்படிப்பா'ன்னு கேட்டா அந்த மாணவர்கள் என்பேரச் சொல்லணும்! அவ்வளவுதான் கனவு, ஆசை எல்லாம். உருவாக்குவேன்!" என்கிறார் அவ்வளவு நம்பிக்கையுடன்.
வாழ்த்துகள் சாம்பியன்ஸ்!