
சேவை மனம்
முகநூலுக்குள் நுழைந்தாலே, நம் நண்பர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் வீட்டிலேயே மாஸ்க் தயாரித்து தேவையிருப்பவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருவது தொடர்பான செய்திகளை அதிகம் பார்க்கிறோம்.
மலேசியா பினாங்கில் வசிக்கிறார் தமிழ்ப்பெண் திவ்யா. தங்கள் நாட்டு மருத்துவர்களுக்கு ஷீல்டு தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் திவ்யாவைப் பற்றி அறிந்து வாட்ஸ்அப் வழியாகப் பேசினோம்.
``நாம இருமும்போதும் தும்மும்போதும் வெளிவர்ற நீர்த்துளிகள் வழியாகத்தான் கொரோனா பரவுது. அதுலேருந்து தப்பிக்கிறதுக்காகத்தான் முகத்துக்கு மாஸ்க் போடுறோம். ஆனா, கொரோனா நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் பண்ற டாக்டர்களுக்கு அந்த நீர்த்துளிகள் வாய், மூக்கு மட்டுமல்ல, கண்களிலும் படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால, அவங்க மாஸ்க்கோடு கண்களுக்கு ஷீல்டும் அணிய வேண்டியது அவசியம்.

மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய அந்த ஷீல்டுகளை, இங்கே நாங்க 300 பேர் சேர்த்து தயாரிச்சிக்கிட்டிருக்கோம். டிரான்ஸ்பரன்ட் ஷீட், ஸ்பாஞ்ச், எலாஸ்டிக்னு பயன்படுத்தி இந்த ஷீல்டை தயார் பண்ணணும். பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிட்டலுக்கு மட்டுமே ஒரு வாரத்துக்கு 2,000 ஷீல்ட்ஸ் அனுப்பிட்டிருக்கோம். எல்லாம் ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய யூஸ் அண்டு த்ரோ வகை. ஐசியூ-யில டியூட்டி பார்க்கிற டாக்டர்களுக்கும் ஷீல்டு தயாரித்துத் தர்றோம்” என்கிற திவ்யா, அடிப்படையில் டிசைனர். ஐஐடி மும்பையில் படித்தவர்.
``ஒருபக்கம் மருத்துவர்களுக்கு ஷீல்டு தயாரிப்பதுடன், மறுபக்கம் மார்க்கெட், பேங்க், போஸ்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்களுக்கும், உணவு டெலிவரி பண்றவங்களுக்கும் தரமான மாஸ்க் தயாரிச்சுக் கொடுத்திட்டிருக்கோம். இந்த ஊரடங்கு நேரத்துல கொரோனா பணிகளில் முன்வரிசையில் இருக்கிறவங்களுக்கு நம்மாலான உதவியா எதையாச்சும் செய்யணும்னு இதை முன்னெடுத்துப் பண்ணிட்டிருக்கோம்’’ என்கிற திவ்யா, இதேபோன்ற எண்ணத்தில் இருக்கும் 300 பேரை ஒருங்கிணைத்து இந்தப் பணியைச் செய்து வருவது குறித்துப் பேசினார்.

``மலேசியாவுல மார்ச் 18-ம் தேதியிலேருந்து லாக் டெளன் அறிவிச்சாங்க. ஒண்ணு, ரெண்டு நாள் வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு அப்புறம், ‘அப்பாடா... நாம பாதுகாப்பா வீட்ல இருக்கோம்’னு தோணுச்சு. அதுக்கப்புறம் கோவிட்-19 நோய்ப்பரவல் பற்றிய செய்திகளையெல்லாம் பார்க்கப் பார்க்க மனசுக்கு வேதனையா இருந்தது. ஃபேஸ்புக்ல ஒரு நண்பர், தன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற மருத்துவ மனையில டாக்டர்ஸுக்கு ஃபேஸ் ஷீல்டு போதுமான அளவு இல்லைன்னு வருத்தப்பட்டிருந்தார். ‘இதுக்கு நம்மளால எந்த வகையிலாச்சும் உதவ முடியுமா’னு நான் உட்பட பலரும் கமென்ட்ல கேட்டிருந்தோம்.
அந்தப் பேச்சு அப்படியே வளர்ந்து வளர்ந்து, ‘இந்த ஷீல்டுகளை நாமளே ஏன் செய்யக் கூடாது’ங்கிற கேள்வியில வந்து நின்றது. ஒருத்தர், ‘அதுக்கான டிரான்ஸ்பரன்ட் ஷீட் நான் தரேன்’னு சொன்னார். இன்னொருத்தர், ‘எனக்கு எலாஸ்டிக் தயாரிக்கிறவங்களைத் தெரியும், மொத்தமாக நான் வாங்கித் தர்றேன்’னு சொன்னார். நான் 3டி பிரின்ட் மெஷின் கொடுத்தேன். என்னை மாதிரியே இன்னும் சிலரும் சப்போர்ட் செஞ்சாங்க. சிலர் ஷீல்டு தயாரிச்சுக் கொடுக்க, சிலர் தயாரிச்ச ஷீல்டை மருத்துவமனைக்குக் கொண்டு போய் கொடுக்கன்னு... ஒவ்வொருத்தரா இந்த முயற்சியில் இணைய ஆரம்பிச்சாங்க.
இப்போ ஆண்கள், பெண்கள், இந்தியர்கள், மலாய்ஸ், சைனீஸ்னு மொத்தம் 300 பேர் இந்த ஷீல்டு தயாரிப்புல ஈடுபட்டிருக்கோம். இதுல டெலிவரி எடுக்கிறவங்களை மட்டும்தான் நேர்ல பார்க்க முடியும். மத்தவங்க எல்லாரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்லதான் தொடர்புல இருக்கோம்.

டாக்டர்களுக்கு ஷீல்டு தயாரிச்சுக் கொடுக்கிறதை நாங்க ஒரு சர்வீஸா நினைச்சு ஆத்மார்த்தமா பண்ணி ட்டிருக்கோம். இந்த முயற்சி பற்றி கேள்விப்பட்ட சிலரும், எங்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்திட்டிருக் காங்க. மருத்துவர்களின் பாதுகாப் புக்காக நாங்க இணைந்து உழைப்பது மனசுக்கு நிறைவா இருக்கு’’ என்கிற திவ்யாவிடம், வொர்க் ஃப்ரம் ஹோம், வீட்டு வேலைகள், ஷீல்டு தயாரிப்பு என எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டோம்.
``நான் வேலைபார்க்கிற கம்பெனியோட ஹெட் ஆபீஸ் அமெரிக்காவுல இருக்கு. வாரத்துல மூணு நாள்கள் விடிய விடிய எனக்கு மீட்டிங் இருக்கும். பகல் நேரங்கள்ல வீட்டு வேலைகள் செய்கிறது, மகளைப் பார்த்துக்கிறது, ஷீல்டு தயாரிக்கிறதுன்னு சரியா இருக்கும். இதுக்கு ஏத்த மாதிரி தூங்கிப்பேன்” என்று சிரிக்கிறார் திவ்யா.