விவாகரத்துச் சூழல் கணவன் - மனைவியை மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளையும் பெரிய அளவில் பாதிக்கும். இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்வதில் பல பெற்றோர்களும் தடுமாறுகின்றனர். நடிகை நளினியும், சின்னத்திரை தொகுப்பாளர் மகேஸ்வரியும் தங்கள் வாழ்க்கையில் இந்தச் சூழலை எதிர்கொண்ட விதம் மற்றும் தங்களது சிங்கிள் பேரன்ட் அனுபவங்களைப் பகிர்கிறார்கள்.
``சிங்கிள் பேரன்ட்டா வெற்றி பெற்றிருக்கேன்!" - நடிகை நளினி

``என் கணவர் ராமராஜனுடன் நாங்க வாழ்ந்த காலத்திலேயே, பிள்ளைகள் என்கிட்டதான் அதிக பாசமா இருப்பாங்க. அவர் குழந்தைகளிடம் அன்பு செலுத்தியதும் நேரம் செலவிட்டதும் குறைவுதான். `நானும் அம்மாவும் பிரியப் போறோம்'னு அவர் சொன்னப்போ, `ரொம்ப தேங்ஸ்ப்பா'னுதான் பிள்ளைங்க சொன்னாங்க. மனஸ்தாபம் இல்லாம அவரும் நானும் சுமுகமா பிரிஞ்சோம்.
என் இரட்டை குழந்தைகள் அருண், அருணாவுடன் சிங்கிள் பேரன்ட்டா வாழ ஆரம்பிச்சேன். `ஸ்கூல்ல சில டீச்சர்ஸ், `உங்க அம்மா, அப்பா பிரிஞ்சுட்டாங்களா?'னு கேட்கிறாங்க. வேதனையா இருக்கும்மா'னு பிள்ளைங்க என்கிட்ட சொல்லி வருத்தப்படுவாங்க. அவங்களுக்கு நான் ஆறுதல் சொன்னாலும், அதை நினைச்சே படிப்பில் சரியா கவனம் செலுத்தாமவிட்டாங்க. குழந்தைகளுடன் ஆலோசனை செய்து அவங்க ஒப்புதலுடன் இரு பிள்ளைகளையும் வேற ஸ்கூல்ல சேர்த்தேன்.
`மத்த விஷயங்களுக்குக்கூட நான் விட்டுக்கொடுத்துப் போவேன். ஆனா, சரியா படிக்கலைன்னா பொறுமையா இருக்க மாட்டேன். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லைனா, உங்க அப்பாகிட்டேயே போயிடுங்க'னு கண்டிப்புடன் சொல்வேன்.நளினி
அதுக்கு அப்புறமும் சில நேரங்கள்ல படிப்புல சரியா கவனம் செலுத்த முடியாம தடுமாறினாங்க. `மத்த விஷயங்களுக்குக்கூட நான் விட்டுக்கொடுத்துப் போவேன். ஆனா, சரியா படிக்கலைன்னா பொறுமையா இருக்க மாட்டேன். உங்களுக்குப் படிக்க விருப்பமில்லைனா, உங்க அப்பாகிட்டேயே போயிடுங்க'னு கண்டிப்புடன் சொல்வேன். பிள்ளைங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சு சிறப்பான நிலைக்கு வரணும்ங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தேன். வாழ்க்கைனா என்னனு அவங்களுக்குப் புரியவெச்சேன். வறுமை நிலையை ஏத்துக்கிட்டு, பிள்ளைங்க நல்லா படிச்சாங்கங்க.
சிங்கிள் பேரன்ட்டா நான் எதிர்கொண்ட கவலைகள் ஏராளம். ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்புக்கு உதவியிருக்கேன். ஆனா, என் பிள்ளைகளைப் படிக்க வைக்கத் தடுமாறி நின்ன நிலைமை என்னை ரொம்பவே கலங்கவெச்சிடுச்சு. பொருளாதாரத் தேவைக்காக நான் மீண்டும் நடிச்சாலும் அது மாலை ஆறு மணிவரைதான். ஹோம்வொர்க், விளையாட்டு, கதை பேசுறதுனு குழந்தைகளுக்கான நேரத்தை மிகச் சரியா செலவிட்டேன்.

நடிகையா புகழுடன் இருந்தாலும், நான் சொகுசான, சுயநலமான வாழ்க்கையை ஒருநாளும் வாழ ஆசைப்படலை. என் உலகமே குழந்தைகள்தான்! அதனால, அப்பாவைப் பிரிஞ்சு இருக்கிறோம்ங்கிற கவலை குழந்தைகளுக்கு வராத அளவுக்கு அவங்களுக்கு அப்பாவும் அம்மாவுமா இருந்தேன். ரெண்டு பேரும் நான் ஆசைப்பட்ட மாதிரியே நல்லா படிச்சு, இப்போ கண்ணுக்கு நிறைவா வாழ்றாங்க. சிங்கிள் பேரன்ட்டா நான் வெற்றி பெற்றிருக்கேன்."
``நான் ஏன் கவலைப்படணும்?!" - சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர் மகேஸ்வரி

``நீண்ட வருடங்களாக நான் சிங்கிள் பேரன்ட்தான். சமூகத்துக்காக அன்பான தம்பதியா வெளியிடங்கள்ல காட்டிக்கிட்டாலும், நிஜ வாழ்க்கையில எத்தனை நாளைக்கு போலியா நடிக்க முடியும்? எங்களுக்குள் நடக்கும் சண்டைகள், ஒருநாளும் என் குழந்தையைப் பாதிக்கக் கூடாதுனு உறுதியா நினைச்சேன். `இந்தப் பந்தம் சரிவராது'னு முடிவெடுத்து, கணவர்கிட்டேருந்து பிரிஞ்சேன்.
. `ஸ்கூல்ல அப்பாவைப் பத்தி யாராச்சும் கேட்டா, எந்தப் பொய்யும் சொல்லாதே. என் அம்மா சிங்கிள் பேரன்ட். எனக்கு அவங்க மட்டும்தான் இருக்காங்க. நான் ஹேப்பியா வளர்றேன்'னு தைரியமா சொல்லு'னு சொல்லிக்கொடுத்து பையனை வளர்த்திருக்கேன்.மகேஸ்வரி
சிங்கிள் பேரன்ட்டா இருக்கிறதால சமூகத்துல புறக்கணிப்புகளை எதிர்கொள்வது இப்போ வரை தொடருதுதான். நான் என்ன சூழல்ல இருக்கேன், என்ன நடந்துச்சுனு தெரியாம பேசுறவங்களின் பேச்சுக்கு நான் ஏன் கவலைப்படணும்?
மகன் கேசவ் மூணாவது படிக்கிறான். எந்தக் கவலையும் தெரியாத மாதிரி குழந்தையை வளர்க்கிறேன். ஸ்போர்ட்ஸ், ஸ்விம்மிங், டான்ஸ் வகுப்புனு அவன் நேரத்தையும் கவனத்தையும் ஆரோக்கியமான வழிகளில் செலுத்தறேன். பையனுக்காகவே சீரியல், தொகுப்பாளர் வேலைகளைக் குறைச்சுக்கிட்டேன். பையனுடைய வேலைகளைச் செய்றதில் எனக்குப் பெரிய ஆனந்தம். அவனுடைய பெஸ்ட் ஃபிரெண்டு நான்தான். அதனால அவனும் அப்பாவைப் பத்தி பெரிசா என்கிட்ட கேட்க மாட்டான்.

`ஸ்கூல்ல அப்பாவைப் பத்தி யாராச்சும் கேட்டா, எந்தப் பொய்யும் சொல்லாதே. என் அம்மா சிங்கிள் பேரன்ட். எனக்கு அவங்க மட்டும்தான் இருக்காங்க. நான் ஹேப்பியா வளர்றேன்'னு தைரியமா சொல்லு'னு சொல்லிக்கொடுத்து பையனை வளர்த்திருக்கேன். அவனும் அப்படித்தான் சொல்வான். எட்டு வருஷமாச்சு. இன்னொரு புது வாழ்க்கையைப் பத்தி எந்த யோசனையும் எனக்கில்லை. என் பையன்தான் என் உலகம்."