வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
பிளஸ் டூ பள்ளித்தோழிகளுடன் மீண்டும் ஒரு அழகிய சந்திப்பு. 37 வருடங்களுக்குப் பிறகும் அதே அன்பு அதே பாசம் அதே காதலுடன் பிறர் மனம் மகிழ ஒருவருக்கொருவர் காரணமாக இருக்கிறோம் என்றால் நாம் சரியாகத்தான் வாழ்கிறோம் என்று புரிந்தது. ஆறு புஷ்பங்களுடன் அழகானதொரு பயணத்தை வாழ்க்கையின் இறுதி மூச்சு இருக்கும் வரை தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததன் விளைவு...
கடந்த ஞாயிறன்று ஒரு அழகிய சந்திப்பு. இந்த முறை (இரண்டு மாதங்களுக்கு முன்பே) தோழி கிரேஸ் சென்னைக்கு வரும் தேதியை முடிவு செய்துசொல்ல... மற்றவர்களும் அவரவர் இடத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர்.
தோழி லலிதாவின் வீட்டில் தங்குவதென முடிவு செய்யப்பட்டது. அந்த தருணத்திற்காக காத்திருந்தோம். சந்திப்பின்போது எந்த புடவை கட்டுவது? எந்த ஓட்டலுக்குச் செல்வது? நம்மளுடைய சந்திப்பை எப்படி அர்த்தமுள்ளதாக ஆக்குவது?! இப்படி தினம் தினம் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள....

குறிப்பிட்ட அந்த தருணம் அந்த நாள்..( மார்ச் 19) வந்தது.. மதிய உணவை (மோர் குழம்பு கடலை கத்தரி குழம்பு, பூசணி சாம்பார் ,உருளை பட்டாணி வறுவல் ,கத்தரி முருங்கை வேர்க்கடலை பொரியல் ,கோஸ் பொரியல் பூந்தி பாயசம் ) தயார் செய்து லலிதா வீட்டிற்கு சென்றேன்.
காவேரிப்பட்டினத்தில் இருந்து வந்த.."தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியால் நிரப்பும்" ஜெயலக்ஷ்மியும்,"முளைப்பதை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அன்பை மட்டுமே விதைக்க முயற்சி செய்யும்" லலிதாவும்... புன்னகை முகத்துடன் வரவேற்றார்கள்.
சற்று நேரத்தில் "மற்றவர்களுடைய மௌனத்தை புன்னகையால் மாற்றும் மொழிபெயர்ப்பாளரான "எஸ்கே சாந்தியும், எப்பவுமே வாழ்க்கையை ரசனைக்குரியதாக மாற்றிக் கொள்ளும் ரசனைவாதி கிரேஸும் வந்து சேர... கலாட்டா ஆரம்பமானது. மதிய உணவை சாப்பிட்டு முடித்ததும், அவரவர் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை அழகாய் பகிர்ந்து கொள்ள...
"இறந்து புதைந்த சில அழகிய நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றது"
அன்பால் விளைந்த ஆனந்த கண்ணீர் அவ்வப்போது கன்னத்தில் வழிந்து நிலம் தொட...' சிநேக நிலம்' குளிர்ந்தது.

தோழிகளுடன் ஆதிரைநிமிடமாய் நேரம் ஓட.. ஒரே மாதிரியான புடவை அணிந்து ஹோட்டலுக்குச் சென்றோம்.(போன வழி எங்கும் எங்களைப் பார்த்தவர்கள் எங்களையும், ஒரேமாதிரியான எங்கள் புடவையையும் பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டனர்.)
ஹோட்டலுக்குள் காலடி எடுத்து வைத்த நேரம் "அன்பால் பிறர் மனங்களை நிரப்பும்" மகாலட்சுமியும் வந்து சேர...
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொண்டே சாப்பிட்டோம். என்ன சாப்பிட்டோம் என்று யாராவது எங்களைக் கேட்டால் நிச்சயம் ஒருவருக்கும் தெரியாது அவ்வளவு சுவாரஸ்யமான பேச்சுகள்..
எங்களின் ரியூனியனை தெரிந்து கொண்ட ஹோட்டல் நிர்வாகம் இன்ப அதிர்ச்சியாக ...கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தது...(பின்னணியில் (எந்த நிலையிலும் மனதிற்கு நம்பிக்கை தரும் பாடலான...) அழகாய் "நலம் வாழ என் வாழ்த்துகள் "என்றுபாடல்ஒலிக்க மற்ற மேஜைகளில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரிக்க... ஆறு பேரும் ஒன்றாக கேக்வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டு சின்னச்சின்ன பரிசுகளை பகிர்ந்து கொள்ள.. மனம் முழுவதும் மகிழ்ச்சி! அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்!

புகைப்படங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கொண்டே இருந்தோம் .(புகைப்படங்கள் மட்டும் இல்லை என்றால் நம் வாழ்வின் பல இனிமையான தருணங்கள் மறந்து போய்விடும்)
ஒரு வழியாக இரவு வீடு வந்து சேர்ந்தோம். திரும்பவும் விட்ட கலாட்டாவை தொடர்ந்தோம்.... பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம்.
" மறுநாள் விடியவே கூடாது என்றே ஒவ்வொருவரின் மனதிலும் எண்ணம் ஓடியதென்னவோ நிச்சயம்.

ஆனால் என்ன செய்ய மறுநாள் பொழுது புலந்தது ... காலை உணவை அருமையாக தயார் செய்து கொடுத்ததோழி லலிதா.. மதிய உணவை ரயிலில் சாப்பிடுவதற்கும் 'பேக் 'செய்து கொடுக்க ...(லலியின் வடிவில் "அம்மாவைக்" கண்டோம்) அன்பான கவனிப்பு ..அழகான விருந்தோம்பல்... பெற்ற மகள்கள் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டு திரும்ப புகுந்த வீட்டிற்கு செல்வதை போல்இருந்தது. அவள் கண்களிலும் ஈரம் எட்டிப் பார்த்தது .
"யாருடைய நிறுத்தம் எங்கே என்று யாருக்கும் தெரியாது? தெரிந்து கொள்ளவும் முடியாது ?!
அதனால் பயணத்தை அன்பால் தொடர்வோம் என்று சொல்லிக் கொண்டே கண்களை வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு (பிரிய மனம் இல்லாமல் விடை பெற்றோம்.)
இதோ இரண்டு நாட்களைக் கடந்தும் பேசாத போதும்...
பேசிக்கொண்டே இருக்கிறது
பேசிய நினைவுகள்.!

"மென்மையான இதயத்தை கொண்ட, நம்மை புரிந்து கொள்ளும் பக்குவமுள்ள ,நம் கோபத்தை அன்பினால் தணிக்கும் முதிர்ச்சியுள்ள, நம் குழந்தைத்தனத்தை ஏற்றுக் கொள்ளும் அன்பான உள்ளத்தை கொண்ட, நம் குறைகளை சரியான முறையில் சரிப்படுத்தும் புரிந்துணர்வுள்ள தோழமைகளளை எப்போதும் அருகில் வைத்துக் கொண்டு... இன்னும் கொஞ்சம் கூடுதலாய்.. மகிழ்வாய் வாழ்ந்திடுவோம்.! அவ்வளவு தான் வாழ்க்கை.
மீண்டும் இப்படி ஒரு இனிமையானதொரு சந்திப்புகாக
காத்துக் கொண்டிருக்கும் அன்பு தோழிகள் மகா கிரேஸ் லலி சாந்தி ஜெய் (ஆதியாகிய நான்...) அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பு முத்தங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.