
எதுவும் சாத்தியம்

திருமணம் நடந்த புதிதில் நான் மதுரையில் குடியிருந்தேன். ஒன்பது ஆண்டுகள் குழந்தை பேறு இல்லாமல் தவித்தோம். அவர் வேலைக்குக் கிளம்பி விடுவார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. என் கவனத்தையெல்லாம் எனக்குத் தெரிந்த சமையலில் திருப்பினேன். மதுரையில் எங்கு உணவுத் திருவிழா நடப்பதாகத் தெரிந்தாலும் அதற்கு விண்ணப்பித்து விடுவேன். ஒருகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் தெரிய ஆரம்பித்தேன்.
பல சமையல் போட்டிகளில் பரிசு பெற ஆரம்பித்த நான், பின்னர் நடுவராகவும் செயல்பட்டேன். சமையல் போட்டிகளில் கலந்து கொள்பவர்களின் ரெசிப்பிகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட உதவினேன். 2006-ல் ஃபுட் பிளாக், 2012-ல் யூடியூப் சேனல் என்று என் பாதை வளர்ச்சி கண்டது.

இவற்றுக்கு நடுவில் நானும் தாயானேன். குழந்தை இல்லையே என நான் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தால், இதெல்லாம் சாத்தியம் ஆகியிருக்க வாய்ப்பில்லைதானே?
அன்னம் செந்தில்குமார், சென்னை-91