
ஆசிரியர் பணி அதிசயம்

இப்போது எனக்கு 65 வயதாகிறது. ஆசிரியராக 20 வருடங்கள் பணியாற்றினேன். இத்தனை வருடங்கள் கழித்தும் என் மனத்தில் புனிதா என்ற குழந்தையின் நினைவு மட்டும் நிலைத்திருக்கிறது. என்னிடம் எல்லோரும் ‘எப்படி இவ்வளவு குழந்தைகளைச் சமாளித்தீர்கள்?’ என்பார்கள். அது ஒரு கலை. குழந்தைப் பருவம் என்பது பேதம் அறியா வயது. நாம் ஒரு துளி அன்பைத் தந்தால்கூட, அவர்கள் ஆயிரம் மடங்காக நமக்கு திருப்பித் தருவார்கள்.
ஒருமுறை பள்ளிக் குழந்தைகளோடு நாங்கள் சுற்றுலா சென்றோம். நாங்கள் சாப்பிட உட்கார்ந்தோம். குழந்தைகள் தங்களுக்கு எடுத்து வந்த உணவு போக, எனக்கும் தனியாக ஒரு பார்சல் கட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். ஆஹா!

ஒரு நாள் உடற்பயிற்சி வகுப்பின்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மைதானத்துக்குப் போனேன். அப்போது என் காலில் சிறுவிரலில் அடிபட்டுவிட்டது. உடனடியாக என் காலணியைக் கழற்றிவிட்டு அந்த விரலைத் தடவினேன். இதைப் பார்த்த புனிதா, உடனடியாக என் காலில் அடிப்பட இடத்தை ஊதிவிட்டு முத்தம் கொடுத்தாள். பொதுவாகக் குழந்தைகள் கீழே விழுந்துவிட்டாள், நான் அவர்களுக்கு அப்படிச் செய்வது வழக்கம். அதையே அவள் எனக்கும் செய்ததும் நெகிழ்ந்து போய் கண்ணீர் ஊற்றெடுக்க நின்றேன். அதைப் பார்த்த அந்தக் குழந்தை, “இன்னும் வலிக்குதா மிஸ்... மறுபடியும் ஊதட்டுமா...” என்றபோது அவளை அப்படியே கட்டியணைத்துக் கொண்டேன்.
ஆசிரியர் பணி எனக்குக் கடவுள் கொடுத்த வரம் என்பதை உணர்ந்த நன்னாள் அதுதான். புனிதா இதைப் பார்த்து, தொடர்புகொண்டால் மிகவும் மகிழ்வேன்.
பானு பெரியதம்பி சேலம்-30