
பாசமலர்கள்

எட்டு வருடங்களுக்கு முன்பு சகோதரி கணவரின் தம்பி அகால மரணம் அடைந்தார். அப்போது என்னுடைய ஒரு சகோதரன் தவிர, மற்ற அனைவரும் வந்து துக்கம் விசாரித்தனர். அந்த இறப்புக்கு முதல் நாள்தான் என் சகோதரனுக்கு பேரன் பிறந்திருந்தான். அந்தக் குழந்தையைப் பார்க்க மறுநாள் என் சகோதரி செல்வதற்குள் இறப்பு நிகழ்ந்துவிட... இரண்டு தரப்பும் ஒருவரையொருவர் நல்ல நிகழ்ச்சியிலும் துக்க நிகழ்ச்சியிலும் சென்று பார்க்க முடியாமல் போனது.
‘அவர்தான் முதலில் வந்து பார்த்திருக்க வேண்டும்’ என்கிற மனஸ்தாபம்... சண்டையாக மாறி, நேரில் பார்த்து பேசிக்கொள்ளாமலே இருவரும் முறுக்கிக் கொண்டார்கள். குடும்ப நிகழ்ச்சிகளில்கூட ‘நீ யாரோ நான் யாரோ’ என்பதுபோல நடந்துகொண்டார்கள். உறவுகள் எல்லாம் சமரசம் பேசியும் பயனில்லாமல் போனது. இந்த எட்டு வருடப் பிரிவை நீக்கும் வகையில் கொரோனா எனும் கிருமி வந்தது. ‘வாழ்வு நிலையானதில்லை’ என்பதை 65 வயதுக்கு மேலான இருவருக்கும் உணர்த்தியிருக்கிறது.

அண்மையில் எங்களின் மற்றொரு சகோதரன் மூலமாக ஒட்டுமொத்த சொந்தங்களும் (47 பேர்) வாட்ஸ்அப்பில் இணைந்தோம். முதலில் மெசேஜில் பேசினோம். பிறகு, கடந்த கால கசப்புகளையெல்லாம் மறந்து போன்கால், வீடியோ கான்ஃபரன்ஸ் என நல்லபடியாகப் பேசி வருகிறோம். இதில் என் சகோதரியும் சகோதரனும் அடக்கம்.
ஆச்சர்யம் என்னவென்றால், பெரியவரான அந்தச் சகோதரன்தான் ஈகோ பார்க்காமல் வாட்ஸ்அப்பில் முதலில் சகோதரியுடன் பேச ஆரம்பித்தார். நெகிழ்ந்துபோன சகோதரியும் பேச ஆரம்பித்துவிட்டாள்.
இனி எல்லாம் சுகமே!
ரமா ஜெயராமன்,திருச்சி