
குஷி

லாக் டெளன் என்னுள் நிறைய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. எங்கள் குடும்பத்தில் பலருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. வீட்டிலேயே 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒருநாள்கூட அவற்றை எடுத்து வாசிக்க எனக்குத் தோன்றியதே இல்லை. லாக் டெளனில் அதிக நேரம் கிடைப்பதால் ஒருநாள் புத்தக அலமாரியிலிருந்து ஓரு புத்தகம் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அன்று ஏற்பட்ட பழக்கம்... இப்போதெல்லாம் தினமும் காலையில் 40 நிமிடங்களாவது புத்தகம் படித்துவிட்டுதான் மற்ற வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறேன்.
நான் புத்தகம் படிப்பதைப் பார்த்த என் இரண்டரை வயது மகள், தனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துவைத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகிறேன். புத்தகம் படிப்பது மகிழ்வை அளிக்கிறது. இறுக்கமான சூழ்நிலைகளை மறக்கச் செய்து தன்னம்பிக்கை அளிக்கிறது.

மற்றொரு சந்தோஷம்... 15 வருடங்களுக்குப் பிறகு, என் பள்ளித் தோழிகளான கௌரி, கலைவாணியைக் கண்டுபிடித்து மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். இப்போது வீட்டிலேயே புதினா, பாகற்காய், கீரை வகைகள், துளசி, பூ வகைகள் வளர்த்து வருகிறோம். என் குழந்தைக்கு டி.வி, போன் இல்லாமல்... தோட்டக் கலை, வண்ணம் தீட்டுதல், கப்பல் விடுவது, நுங்கு வண்டி, நடனம், பாட்டு, சமையல், கண்ணாம்பூச்சி, நடைப்பயிற்சி, கேரம் போர்டு போன்றவற்றை அறிமுகப்படுத்தி குஷிப்படுத்துகிறேன். மொத்தத்தில் இந்த லாக் டெளன் நாள்கள் மறக்கமுடியாதவை!
ரேவதி, ஈரோடு