
நேற்று இல்லாத மாற்றம்

என் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் கோவையில் வசித்து வருகிறேன். பொதுவாக என் நேரம் சமையலறை மற்றும் புத்தகங்களுடனேயே கழியும். ஊரடங்கு நேரத்திலோ வேலைகள் அதிகமாகிவிட, பொழுதுபோக்கு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது. இந்த நிலையில்தான் வேலைகளை முடித்ததும் தினமும் என் பேரனுக்குக் கதை சொல்வதும் வழக்கமானது.
அன்றும் அப்படித்தான் அவனுக்குக் கதை சொல்லிக்கொண்டு இருந்தேன். இதைப் பார்த்த என் மாப்பிள்ளை, என்னைக் கதை சொல்லவைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்தார். பிறகு அவற்றுடன் படங்கள், இசை, இன்ன பிற சமாசாரங்களைச் சேர்த்து அழகான வீடியோ கதைத்தொகுப்பாக்கிவிட்டார். அதை யூடியூபில் வெளியிட்டும் விட்டார். அட... நான் ஒரே நாளில் பலர் அறிந்த பிரபலமாகிவிட்டேன்!

இப்போது என்னுடைய கதைகளை என் பேரனோடு சேர்த்து எண்ணற்ற குழந்தைகளும் கேட்கின்றனர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மாப்பிள்ளைக்கு என் நன்றிகள் பல. https://bit.ly/3fLcibL இந்த லிங்க்கில் என் கதைகள் வெளியாகின்றன. நீங்களும் கதை கேளுங்களேன்!
எஸ்.ஜோதிலட்சுமி கோவை