Published:Updated:

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?

#PennDiary

ஒரு கட்டத்தில் நானும் கணவரும், கணவர் வேறு தொழில் முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம் எனவும், அவர் வீடு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்றும், நான் வேலைக்குச் செல்வது என்றும் முடிவெடுத்தோம். #PennDiary115

Published:Updated:

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?

ஒரு கட்டத்தில் நானும் கணவரும், கணவர் வேறு தொழில் முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம் எனவும், அவர் வீடு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்றும், நான் வேலைக்குச் செல்வது என்றும் முடிவெடுத்தோம். #PennDiary115

#PennDiary

நாங்கள் மிடில் க்ளாஸ் குடும்பம். கணவர் சுயதொழில் பார்த்து வந்தார். கொரோனாவால் அந்தத் தொழிலை மொத்தமாக மூட வேண்டிய சூழல். நிலைமை சரியானபோதும் தொழில் பிக் அப் ஆகவில்லை. அந்நேரத்தில், பட்டதாரியான நான் வேலை தேட ஆரம்பித்தேன். வீட்டுக்கு மிக தொலையில் ஒரு நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். அப்போது கணவர் வீட்டில் இருந்ததால், 12, 14 வயதில் இருக்கும் எங்கள் இரண்டு குழந்தைகளையும் அவர் பார்த்துக்கொண்டார்.

Family
Family

என் கணவர் தொடர்ந்து ஒரு பக்கம் தொழிலுக்கான முயற்சிகள் எடுத்து வந்தார். இன்னொரு பக்கம், என் கணவர் தொழிலில் வந்த வருமானத்தை விட அதிகமாக என் சம்பளம் இருந்ததால், குடும்பம் சுமுகமாகச் சென்றது. ஒரு கட்டத்தில் நானும் கணவரும், ஒரு முடிவெடுத்தோம். வீட்டில் இப்போது இருக்கும் சூழல் நான், கணவர், குழந்தைகள் என அனைவருக்கும் சௌகர்யமாக இருந்ததால், குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை என் கணவர் வேறு தொழில் முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம் எனவும், அவர் வீடு, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்றும், நான் வேலைக்குச் செல்வது என்றும் முடிவெடுத்தோம்.

அந்த முடிவை எடுத்தபோதே, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் என்ன பேசுவார்கள் என்பதை நாங்கள் அறிந்தே இருந்தோம் என்றாலும், இப்போது அந்தச் சூழலை நேரடியாகச் சந்திக்கும்போது மனம் சமநிலையை இழக்கிறது. என் கணவரிடம், ‘பொண்டாட்டி சம்பாதிக்கிறா, நீ ஜம்முனு வீட்டுல இருக்கிற’ என்பது, ‘பொண்டாட்டியை சம்பாதிக்க விட்டுட்டு நீ இப்படி சொகுசா வீட்டுல இருக்கலாமா?’ என்று குற்றம் சொல்வது, ’இப்ப நல்லாதான் இருக்கும். ஆனா பின்னாடி உன் பொண்டாட்டி எதுக்கும் உன்னை மதிக்க மாட்டா, அப்போது தெரியும் உனக்கு...’ என்று பயமுறுத்துவது என என் கணவரிடம் பலவிதமாகப் பேசுகிறார்கள்.

பணிபுரியும் நான், வீட்டை பார்த்துக்கொள்ளும் கணவர்; மனஉளைச்சல் தரும் சுற்றத்தை சமாளிப்பது எப்படி?
Representational image

அதேபோல, என்னிடமும் எதிர்மறையாகத் தொடர்ந்து பேசி வருகின்றனர். ’நீ ஏன் கஷ்டப்படணும்?’, ‘வீட்டுக்காரரை வேலைக்காரரா வெச்சிருக்கிறியே’, ’உங்களுக்கு வேணும்னா இது நல்லாயிருக்கலாம், ஆனா பார்க்கிறவங்க எல்லாரும் உன் வீட்டுக்காரரை மதிக்கவே மாட்டாங்க’ என்றெல்லாம் பேசுகிறார்கள். நானும் என் கணவரும், முன்பெல்லாம் இப்படி எங்களிடம் யார் சொன்னாலும், ஒருவருக்கு ஒருவர் அதை பகிர்ந்துகொள்வோம். அந்தப் பேச்சை அங்கேயே முடித்துவிட்டு, எந்த மறு யோசனையுமின்றி நகர்ந்துவிடுவோம்.

ஆனால் இப்போது பிரச்னை என்னவென்றால், எங்கள் பிள்ளைகளுக்கு இந்தச் சமூகம் கொடுக்கும் மனக்குழப்பம். ‘உங்க அப்பா ஹவுஸ் ஹண்பண்ட்’ என்ற ரீதியிலான விசாரிப்புகள், கேலிகள், கிண்டல்கள் எனப் பள்ளி, உறவுகள், ஊர்க்காரர்கள் எனக் கேட்கக் கேட்க... அவர்கள் குழம்புகிறார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

’ஆமா, அதனால என்ன?’ என்று அவர்களைத் திருப்பிக் கேட்கும் தெளிவு இன்னும் அவர்களுக்கு வரவில்லை என்பதால், சில நேரங்களில் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எங்களிடம் வந்து, யார் யார், என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்லி வருந்துகிறார்கள். அவர்களது வருத்தம் எங்கள் உறுதியையும் அசைத்துப் பார்க்கிறது. இந்தச் சூழலைக் கையாள்வது எப்படி?