``எனக்குக் கல்யாணமாகி ஆறு மாசமாகுது. என் வீட்டுக்காரர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் நடுத்தரக் குடும்பத்துப் பொண்ணு. பெற்றோர் பார்த்து பண்ணிவெச்ச கல்யாணம்தான். ஆனா, மேரேஜ் ஃபிக்ஸாகி ஆறு மாசம் டைம் இருந்ததால, எங்களுக்குள்ள காதலும் வந்துச்சு. என்னோட கணவர் ஐ.டி-ல வேலை செய்கிறார். எனக்கு பேங்க்ல வேலை. ரெண்டு பேருமே கை நிறையச் சம்பாதிக்கிறோம். கல்யாணத்துக்குப் பிறகு அவர் லேப்டாப், போன்லதான் நேரத்தையெல்லாம் செலவு செஞ்சாரே தவிர, என்கிட்ட சரியா பேசுறதே கிடையாது. எனக்குன்னு அவரு நேரம் செலவிடறதும் இல்ல.

அவருக்கு ஓ.சி.டி-ங்கிற மனநல பிரச்னை இருக்குங்கிறதுகூட கல்யாணத்துக்குப் பிறகுதான் எனக்குத் தெரியவந்துச்சு. அவர் எடுத்துக்கிட்ட மாத்திரையைப் பார்த்துதான் அதையும் கண்டுபிடிச்சேன். அவரோட இயல்பும் ஓ.சி.டி பிரச்னையும் சேர்ந்துக்கிட்டு நெறையவே கஷ்டப்பட்டுட்டேன்.
இப்போ சமீபகாலமா அவரு என்னை வெளில கூட்டிட்டுப்போறதே இல்ல. அப்படியே போனாலும் எனக்குன்னு அஞ்சு ரூபாகூட செலவு பண்ண மாட்டேங்கிறார். வேற வழியில்லாம செலவு பண்ணாலும் அதைத் திரும்ப தரச்சொல்லிக் கேக்குறார். கல்யாணத்துக்கு முன்னாடி சில தடவை நாங்க வெளியே போயிருக்கோம். அப்படிப் போறப்போ ஆகுற செலவை ஆளுக்குப் பாதியா ஷேர் பண்ணிப்போம். ஆனா, கல்யாணத்துக்குப் பின்னாலும் அதேமாதிரி நடந்துக்கிட்டா எப்படி?

இன்னொரு விஷயத்தை எப்படிச் சொல்றதுன்னே தெரியலை. எங்களுக்குள்ள இதுவரைக்கும் நெருக்கமான உறவும் ஏற்பட்டதில்ல. தாம்பத்யத்துல அவருக்கு சுத்தமா ஆர்வமில்ல. `உன்னோட உடல் பருமனா இருக்கறதால, எனக்கு அந்தமாதிரியான ஆர்வம் வரல’ன்னு பழியை என் மேலயே போடறாரு. இதே மாதிரி நிறைய பிரச்னைகள் வந்ததால நான் என்னோட அம்மா வீட்டுக்கே வந்துட்டேன். அவரை எப்படியாவது மாத்திடலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணியும் பிரயோஜனம் இல்ல. சரி விவாகரத்து பண்ணிக்கலாம்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிறார். இப்போ நான் என்ன பண்ணட்டும். ப்ளீஸ் என்னோட பிரச்னைக்கு சரியான தீர்வு சொல்லுங்க.'’
சமீபத்தில் விகடனின் uravugal@vikatan.com மெயிலுக்கு, தன் பிரச்னைக்கான தீர்வு கேட்டு வந்திருந்த மெயில் இது. வாசகியின் வேண்டுக்கோளுக்கிணங்க அவருடைய அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
தீர்வு சொல்கிறார் உளவியல் ஆலோசகர் சிந்து மேனகா...

``நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்தே அவருக்கு இருப்பது OCD (Obsessive Compulsive Disorder ) தான் என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஓ.சி.டி என்பது ஒருவகை மனநோய்தான். இது மரபுரீதியாகவும் பிறவி நோயாகவும் வருவதுண்டு. இல்லை என்றால் வாழ்க்கையில் எப்போதோ ஏற்பட்ட அருவருப்பான உணர்வினால், மனதளவில் நேர்ந்த பாதிப்பினாலும் இந்த நோய் ஏற்படலாம். இந்த நோய் உள்ளவர்கள் வெளியுலகப் பார்வைக்கு இயல்பான மனிதர்களாகவே தெரிவார்கள். ஆனால், அவர்களுடன் நெருங்கிப் பழகி அன்றாட வாழ்க்கை நடத்துவது சாதாரணமான விஷயமல்ல. இந்த வகை நோயாளிகள் தனக்கு இப்படி ஒரு நோய் உள்ளது என்று ஏற்றுக்கொள்ளவோ, மற்றவர்களிடம் வெளிப்படையாகச் சொல்லவோ மாட்டார்கள், இவர்கள் எதன்மீதும் நம்பிக்கையற்றவர்களாகவே இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஓ.சி.டி உள்ளவர்கள் மற்றவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வார்கள்.
ஆனால், ஒரு மனைவியாக, இந்நோய் உள்ளவருடன் வாழும்போது அதில் அதிகமான நடைமுறை சிக்கல்கள் ஏற்படவே செய்யும். தனக்குத் தாம்பத்யத்தில் ஆர்வம் வராமல் போனதற்கு நீங்கள் பருமனாக இருப்பதுதான் காரணம் என்று உங்களுடைய கணவர் கூறியதை நினைத்து நீங்கள் துளிகூட கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், அது அவர் நிதானமான மனநிலையிலிருந்து சொன்ன கமென்ட் இல்லை. அவருக்கு முன் உலக அழகியையே கொண்டுபோய் நிறுத்தினாலும்கூட ஏதாவதொரு காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கவே பார்ப்பார். இப்போது விவாகரத்துவரை யோசித்த நீங்கள் திருமணத்துக்கு முன்பு அவரோடு பழகிய காலத்தில் அவருடைய நடவடிக்கையைக் கொஞ்சம் கூர்மையாகக் கவனித்திருந்தால், இத்தனை சிரமங்கள் இல்லாமல் போயிருக்கும்.

இந்த நோய் உள்ளவர்களுடன் வாழ்வதற்கு அளவு கடந்த பொறுமையும், ஓ.சி.டி குறித்த புரிந்துணர்வும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நோயில் ஆரம்ப நிலை, தீவிர நிலை என்று இரண்டு படிநிலைகள் உள்ளன. நீங்கள் சொல்கிற அறிகுறியை வைத்துப் பார்க்கும்போது உங்களுடைய கணவருக்கு நோய் தீவிரமாகவே இருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு நோய் உள்ளதை அவரே ஒத்துக்கொள்ளும்பட்சத்தில், தனிமையில் மனம் விட்டுப் பேசுவது பலனளிக்கும். உங்கள் வாழ்க்கைதான் முக்கியம் என்று நீங்கள் நினைத்தால், `இப்படி ஒரு நோய் உள்ளதை மறைத்து திருமணம் செய்துகொண்டார்’ என்று சட்டப்படி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர் மீதான காதல்தான் முக்கியம் என்றால் நீங்கள் நிறையவே போராடவும், தியாகங்களைச் செய்யவும் வேண்டும். நிறைய மெனக்கெடல் மூலம் உங்கள் கணவரை ஒரே சீரான மனநிலையில் பராமரிக்க முடியும். அதற்கு உங்களுக்கு ஓரளவு மருத்துவர்களுடைய ஆலோசனைகளும் மருந்து மாத்திரையும் உதவி செய்யும், அதற்கு உங்களுக்கு அளவுகடந்த மனவுறுதி தேவை. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், ஓ.சி.டி என்பது முழுமையாகக் குணமாக்கக்கூடிய நோய் இல்லை. முழுமையாகக் குணமானதுபோலவே இருந்தாலும் திடீரென எட்டிப்பார்க்கும்.

நீங்கள் சட்டப்படி பிரிவது, அவருடைய நோயை சகித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது என இரண்டு வழிகள் உங்கள் முன்னால் இருக்கின்றன.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்டு முடிவெடுக்க வேண்டாம். நீங்களாகவே யோசித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கை.'’