திருமணத்திற்கு பிறகான மனவிலகல் ஏற்படுவதற்கான காரணங்கள்! உளவியலாளர் ஆலோசனை!

கணவன் - மனைவியிடையே வரும் சிக்கல்கள் குறித்து ஆலோசனை தருகிறார் சரஸ்பாஸ்கர்
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. விவாகரத்துக்கான காரணங்களும் அதிகரித்துக்கொண்டே செல்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அடிப்படையில் இரு மனங்கள் ஒத்து குடும்பமாக வாழும் சூழலில் மனவிலகலான காரணங்கள் குறித்து, உளவியல் ஆலோசகர் சரஸ்பாஸ்கர் அவர்களிடம் கேட்டோம்.

மனமுறிவுக்கான காரணங்களின் முதன்மையானது குடும்பச் சூழல் தொடர்பான சிக்கல்கள். பிறந்த வீடு, புகுந்த வீடு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் உண்டு. அதனால் இருவரில் ஒருவருக்கு இந்த இரண்டு வீடுகளில் நல்ல உறவும் நெருக்கமும் இல்லாவிட்டாலும் கணவன் மனைவி விலகலுக்கு வழிவகுத்துவிடும்.
இரண்டாவது, பணம் தொடர்பானது. கணவன் தன் வீட்டுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்; மனைவி வீட்டுக்கான செலவு செய்வதற்கு அனுமதிக்கிறாரா என்பதும் மனவிலகலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பணம் செலவு செய்வதில் இருக்கும் வெளிப்படைத் தன்மையே ஒருவர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது; இல்லையேல் நம்பிக்கையின்மையை ஏற்படச் செய்கிறது. ஏனெனில், அடிப்படை உறவுக்கு அன்பும் நம்பிக்கையும்தான் ஆதாரம். அவற்றில் நம்பிக்கையைத் தளரவிடாமல் பாதுகாத்தல் அவசியம்.
குடும்பச் சூழல் தொடர்பானது.
மூன்றாவது சமூக ஊடகங்களைக் கையாள்வது. தற்போது, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் கணவன் மனைவியிடையே பிரிவு வருவதற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதில் கணவன் மனைவியிடையே அணுகுமுறை வெவ்வேறாக இருக்கலாம். ஒருவர் இவற்றையெல்லாம் பயன்படுத்த தேவையே இல்லை என்று நினைக்கலாம். மற்றொருவர் தூங்கும் நேரம் தவிர்த்து எந்நேரமும் கையில் மொபைலோடு இருக்கலாம். இதனால் கடும் கருத்து வேறுபாடு வரலாம்.

நான்காவது, உணர்ச்சிபூர்வமான பந்தம். ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை, கவனிப்பு, விட்டுக்கொடுத்தல் உள்ளிட்டவற்றால்தான் கணவன் மனைவி பந்தம் வலுவாகிறது. ஏதேனும் தவறு நடக்கும் பட்சத்தில் அதற்கு 'நீதான் காரணம்' என பார்ட்னர் மீது மொத்தக் குறையைத் தள்ளிவிடும்போது இந்த உறவு பந்தம் விரிசலடையும். சிறிதுநேரத்தில் சமாதானமாகும் நிலை இருந்தாலும் உறவினர்கள், நண்பர்கள் உசுப்பேத்திவிட, விரிசல் உறுதியாவிடுகிறது. ஏனெனில், கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை பற்றி அரைகுறையாகத் தெரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளை வேறு கோணத்தில் சொல்லப்படும் யோசனைகள் நல்ல முடிவுக்கு வருவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.
ஐந்தாவது குழந்தை பிறப்பு: இப்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது இயல்பாகிவிட்டது. அதனால் குழந்தையைப் பாதுகாத்துக்கொள்ள வெளிநபர்களை நம்பாமல் கணவன், மனைவி இருவரில் யாரேனும் ஒருவரின் அம்மா அல்லது அப்பாவை அழைத்துவருவர். அவர்கள் முந்தைய தலைமுறையினர். அதனால், அவர்களின் குழந்தை வளர்ப்பு என்பது வேறு; ஆனால், தற்போதைய சூழல் வேறு. அவர்கள் பாலாடையில் மருந்து தருவது, எண்ணெய்க் குளியல் எனச் செய்யும்போது அவற்றில் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்போது நகரத்தில் வசிக்கும் பல குடும்பங்களில் அதுபோல நடந்துவருவதைப் பார்க்க முடிகிறது.

ஆறாவது, இன்றைய தலைமுறையினரிடம் மனவலிமை குறைவாக இருக்கிறது அல்லது தேவையான விஷயங்களில் மனவலிமை இல்லாமல், தேவையற்ற விஷயங்களில் மிகுந்து இருக்கிறது. கணவன் தன்னிடம் பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கவில்லை என்று, அதைச் சரிசெய்வதற்கு இருவரும் முயலாமல் சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடும் நிலையைப் பார்க்க முடிகிறது. இதுவும் மனப் பிரிவுக்கு வித்திட்டுவிடுகிறது.
இவற்றைத் தடுக்க என்ன செய்யலாம்?
கணவன் மனைவிக்கு இடையே வரும் பிரச்னைகளை, மனம் விட்டு இருவரும் எவ்வித ஈகோ இல்லாமல் 10 நிமிடங்கள் பேசினாலே அந்தப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்குத் தயாராக இல்லாததே பிரச்னைகள் பெரிதாகி விவாகரத்து வரைக்கும் சென்றுவிடுகிறது.
ஒரு பிரச்னையின்போது பார்ட்னரின் தவறுகளை முதலில் ஆராய்வதைவிட, தன் தவறு என்னென்ன என்பதைப் பார்க்கத் தொடங்குவதே அப்பிரச்னையைச் சரிசெய்வதற்கான நல்ல தொடக்கம்.

ஒருவேளை கணவன், மனைவி இடையே ஒரு விலகல் வந்துவிட்டது இதைச் சரிசெய்ய வேண்டும் என்று வரும்போது எங்களின் வேலை எளிதாகிவிடும். ஏனெனில், இருவரும் தங்களின் நிலைகளை விருப்பு வெறுப்பின்றி ஆராய முடியாது. அதனால், மூன்றாவதாக ஒருவர் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதால் எங்களிடம் வரும்போது தக்க ஆலோசனைகள் வழங்குகிறோம். கணவன், மனைவியின் உறவினர்கள் மூலமாக வந்து, 'நாங்க சொன்னா கேட்க மாட்டார்கள்; நீங்க சொல்லுங்க' என்று வருபவர்களும் உண்டு.
நாங்கள் முதலில் அவர்களின் உறவு எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்போம். ஏனெனில், உறவு விரிசலால் இருவரும் அல்லது ஒருவர் டிப்ரஸனில் இருக்கிறார் என்றால், முதலில் டிப்ரஸனில் இருப்பவரைத்தான் சரிசெய்வோம். ஏனெனில், அவர் சரியாகச் சாப்பிட, தூங்க மாட்டார். அதனால், அவரை சமநிலைப் படுத்திவிட்டே உறவுச்சிக்கல்களைப் பற்றி ஆலோசனைகளை அளிக்கத் தொடங்குவோம்.
கவுன்சலிங் பெறலாம் என்ற முடிவுக்கு தம்பதிகள் எப்போது வரலாம்?
கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை வந்தால், கவுன்சலிங் செல்ல முடிவெடுப்பது நல்லது. அடுத்தது, வீட்டிலோ அலுவலத்திலோ பணிச்சுமை அதிகரிக்கும்போது மனச்சுமை அதிகரிக்க, அதன் பாதிப்பை தங்களின் பார்ட்னரிடம்தான் கொட்டுவார்கள். எனவே, அதன் சிம்டம்ஸ் தெரிந்தாலே கவுன்சலிங் செல்லலாம்.