திருமணம்... இந்திய சமூக அமைப்பிலும், குடும்ப அமைப்பிலும் அச்சாணி. ஆனால் இப்போது அதற்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அதன் விளைவாக விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், ஒரு தம்பதி தங்கள் பணி நேரம் காரணமாக திருமண வாழ்க்கைக்கு நேரமில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயர் தம்பதி, திருமண வாழ்க்கைக்குத் தங்களுக்கு நேரமில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம் ஜோசப் மற்றும் பி.வி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, “திருமணத்துக்கு நேரம் எங்கே? இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். ஒருவர் பகலில் பணிக்குச் செல்கிறார். மற்றொருவர் இரவில் செல்கிறார். விவாகரத்துக்காக அவர்களுக்கு வருத்தம் இல்லை. இருந்தும் ஏன் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கக்கூடாது?’ என்றனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது சட்டப்படி பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் பிரிய ஒப்புக்கொண்டதாகவும், நிரந்தர ஜீவனாம்சமாக மனைவிக்கு கணவன் தரப்பில் ரூ.12.51 லட்சம் தர சம்மதித்து, உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் பெஞ்சில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் 1955-ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் 13பி பிரிவின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதே நாளில் ராஜஸ்தான் மற்றும் லக்னோவில் வரதட்சணை தடை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் மற்றும் அது தொடர்பான பிற வழக்குகளின் கீழ் கணவன்- மனைவி தாக்கல் செய்த பல்வேறு வழக்குகளுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.