Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: தலாய் லாமா வருகையும், வரலாறும் மற்றும் சில உண்மைகளும்... | பகுதி 36

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )

தலாய் லாமாவின் தரிசனத்துக்காக அவரின் வீட்டின் முன்பு பல நூறு மனிதர்கள் காத்திருந்தனர். நாங்களும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றோம். கூட்ட நெரிசலில் என் கால்கள் எதன் மீதோ மோதி நின்றன. ஒரு துணி மூட்டைபோல் மடிந்து, சுருண்டிருந்த அதை உற்று கவனித்ததில்...

Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: தலாய் லாமா வருகையும், வரலாறும் மற்றும் சில உண்மைகளும்... | பகுதி 36

தலாய் லாமாவின் தரிசனத்துக்காக அவரின் வீட்டின் முன்பு பல நூறு மனிதர்கள் காத்திருந்தனர். நாங்களும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றோம். கூட்ட நெரிசலில் என் கால்கள் எதன் மீதோ மோதி நின்றன. ஒரு துணி மூட்டைபோல் மடிந்து, சுருண்டிருந்த அதை உற்று கவனித்ததில்...

நாடோடிச் சித்திரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நாடோடிச் சித்திரங்கள் ( pixabay )
நான் இந்தியாவின் நீண்டகால விருந்தினன்
தலாய் லாமா XIV

1959, மார்ச் 30. தலாய் லாமா இந்தியாவின் தவாங் பகுதியை வந்தடைந்தார். சீனா, திபெத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம் அது. சீன ராணுவத்தின் பிடியில் அகப்படாமல் தப்பித்து சுமார் இருபது நாள்கள் இமய மலைப் பகுதிகளில் தலைமறைவுப் பயணம் மேற்கொண்டனர் தலாய் லாமாவும் அவரின் சீடர்களும். இந்திய எல்லைக்குள், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியை வந்தடைந்தபோதுதான் அவர் சுதந்திரக் காற்றை முதன்முறையாகச் சுவாசித்ததாக திபெத்திய மதத் தலைவரான தலாய் லாமா ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.

இந்தியா அவரை நேசக்கரம் நீட்டி வரவேற்று விருந்தினராக வைத்துக்கொண்டது, இந்திய-சீன உறவின் அடித்தளத்தையே அசைத்துப்போட்டது.

1962... இந்தியா சற்றும் எதிர்பாராத நேரத்தில் சீனா இந்திய எல்லைகளைத் தாக்கத் தொடங்கியது. ஏற்கெனவே நிலவிவந்த எல்லை தொடர்பான சச்சரவுகளை அப்போதைய பிரதமர் நேரு தனது சாதுர்யமான அரசியல் கொள்கைகளால் கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். இருப்பினும் சீனா தனது நெருக்கடியை விடாமல் தொடர்ந்தது. இரு நாடுகளும் தங்களைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக இருந்த நேரமாதலால் போர் அச்சுறுத்தல் இருந்தாலும் இரு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சீனா போரில் ஈடுபடாது என்றே நேரு நம்பியிருந்தார். இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல் சீனாவின் நடவடிக்கைகளில் ஒளிந்திருந்த குரூரத்தைக் குறித்து பலமுறை நேருவை எச்சரித்தபோதும் நேரு அதற்கு செவிசாய்க்காமல்போனதன் விளைவே இந்தியா, சீனாவிடம் போரில் கடுமையான தோல்வியைச் சந்திக்கும் காரணமாக ஆனது. தலாய் லாமாவை வரவேற்று புகலிடம் அளித்ததும் அக்காரணங்களில் முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

தலாய் லாமா -  நேரு
தலாய் லாமா - நேரு

தரம்சாலாவின் தெளலதார் மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் திபெத்திய மதகுருவான தலாய் லாமாவின் இருப்பிடம் அமைந்துள்ளது. முசோரியில் சில காலம் வசித்துவந்த தலாய் லாமாவும் அவருடயை சீடர்கள் மற்றும் அவருடன்

இந்தியாவுக்கு வந்த சுமார் பத்தாயிரம் திபெத்தியர்களும், அவர்களது குடும்பங்களும் வசித்துவரும் மெக்லியோட் கஞ்ச் பகுதி ஒரு குட்டி திபெத் என்றே அறியப்படுகிறது.

சுற்றிலும் திபெத்திய மக்களின் குடியிருப்புகளும், பெளத்த மடாலயங்களும் அமையப்பெற்றுள்ள அப்பகுதி இந்தியாவின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. வார இறுதி நாள்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் மெக்லியோட் கஞ்ச் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பு.

நாங்கள் அங்கு வசித்த சில வருடங்களில் பலமுறை தலாய் லாமா வசிக்கும் மடாலயத்துக்குச் சென்றிருக்கிறோம். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பக்சுநாக் என்கிற ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கிறது. மூன்று நாள்கள் பயணமாகத் திட்டமிட்டு அங்கு சென்றுவருவது வழக்கம்.

தலாய் லாமா
தலாய் லாமா

வழிநெடுகிலும் திபெத்தியர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் ஓவியங்களையும், ஆடை ஆபரணங்களையும் விற்பனைக்கு வைத்திருப்பர். கம்பளி ஆடைகள் தயாரிப்பதில் வல்லவர்களான திபெத்தியப் பெண்மணிகளின் கலைப் படைப்புகள் அணிவகுத்திருக்கும் கடைகளை பார்வையிட்டவாறே மடாலயத்தை நோக்கிய பயணம் இருக்கும்.

திபெத்திய உணவு முறைக்கு நான் பரிச்சயமானதும் அப்போதுதான். அவர்களின் உணவின் தன்மையில் ஆரோக்கியம் பேணும் கீரை வகைகள் முக்கியப் பங்காற்றுவதைக் காண முடிந்தது. மாமிச உணவென்றாலும் அவை வறுக்கப்படாமலும், பொரிக்கப்படாலும் வேகவைத்து மட்டுமே உட்கொள்ளப்படுவது தெரிந்தது. திபெத்தியர்களின் நீண்ட ஆயுள்காலத்துக்கு பெருங்காரணமாகத் திகழ்வது அவர்களது உணவுப் பழக்கங்களும் வாழ்வியல் முறைகளும்தான். அவ்வீதியில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்மணியிடம் பேசினேன்.

"உங்கள் உணவுகள் அனைத்தும் வெகு நேரம் சமைக்கப்படுவதுபோல் தெரிகிறதே... அவற்றைத் தயாரிப்பதற்கு வெகு நேரமாகுமல்லவா... எப்படி நேரத்தைத் திட்டமிடுகிறீர்கள்?"

என்றேன். அதற்கு அவர் "நாங்கள் பறவைகளின் வாழ்வியலைக் கடைப்பிடிப்பவர்கள், பறவைகள் எழும்போது நாங்களும் எழுந்துவிடுவோம். அதிகாலை பிரார்த்தனைகள் முடித்துக்கொண்டு அன்றைய நாளுக்கான பணிகளைச் சோர்வின்றி செய்து முடிப்போம். பறவைகள் கூடடையும் நேரத்தில் நாங்களும் அந்நாளை முடித்துக்கொண்டு குடும்பத்தினருடன் ஓய்வெடுப்போம்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

அதிகாலை துயிலெழுதல் எங்கள் ஒழுக்க விதிகளுள் முக்கியமானது" என்று அழுத்தமாகக் கூறினார். அவரின் உணவகத்தில் 'மட்டன் பெட்சே' என்கிற ஆட்டிறைச்சி உணவுக்கு எனது நாவரும்புகள் அடிமையாகின. அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவரின் உணவகத்தில் `மட்டன் பெட்சே’ தவறாமல் உண்பேன். திபெத்திய மனிதர்கள் தங்களது நிலப்பரப்பின் கலாசாரத்தைப் பின்பற்றியே தங்களது வாழ்வியலை அமைத்துக்கொண்டிருப்பது வியப்புக்குரியதாக இருந்தது. சில நாள்கள் அயல்நாட்டில் வாழ்ந்துவிட்டாலே தம் சொந்த மண்ணின் அடையாளங்களை மறந்துவிடுபவர்களை அறிந்திருப்பதால், பல தலைமுறைகளாக வேறு நாட்டில் அகதிகளாக வாழும்போதும் தமது பண்பாட்டையும், மதக் கோட்பாடுகளையும் தீவிரமாகப் பின்பற்றி வாழ்கின்றனர் திபெத்தியர்கள். இன்று நாடு முழுதும் 'திபெத்தியன் சொசைட்டி' ஆங்காங்கே காணப்படுவதும் அதற்கொரு சான்று.

மடாலயத்தின் நுழைவு வாயிலில் இடப்புறம் ஒரு பலகையில் ஒரு சிறுவனின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அவர் அடுத்த பஞ்சன் லாமா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவரை பஞ்சன் லாமாவின் அவதாரமாக லாமா உயர்மட்டக்குழு அறிவித்த சில நாள்களிலேயே சீனா அவரைக் கடத்திச் சென்றுவிட்டதாக அதில் எழுதியிருந்தது. 1989-ம் ஆண்டு பிறந்த அவரை சீன அரசு இன்றுவரை விடுவிக்கவில்லை. அவரின் இருப்பு குறித்த யாதொரு தகவலையும் வெளியிடவில்லை. `நமது பஞ்சன் லாமாவின் நல்வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்’ என்கிற இறுதி வாக்கியம் என் யோசனையைத் தீவிரமாக்கியது. மதமும் அரசியலும் இணையும் புள்ளி ஆபத்தானது.

மதம் அரசியலில் நுழைந்தாலும், மத இயக்கங்களுக்குள் அரசியல் புகுந்தாலும் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதற்கு திபெத்தியர்களின் வாழ்வே ஆதாரம்.
நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

சீனாவின் அரசியல் ஆட்சிக்குள் இடம்பெற விரும்பாத தலாய் லாமா தலைமையிலான திபெத்திய கூட்டமைப்புகள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நிலம் துறந்து, உலகின் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். "திபெத்தியன் ஒவ்வொருவனின் பிரார்த்தனையும் என்றாவது ஒருநாள் தனது சொந்த நிலத்துக்குத் திரும்பி, தனது மதம் மற்றும் தனது நம்பிக்கைகளுடன் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதுதான். அதை நோக்கியே எங்களை வழிகாட்டுகிறார் தலாய் லாமா" என்று ஒரு பெண்மணி ஆங்கிலத்தில் எங்களிடம் கூறினார். அவர் வெகுநேரமாக தனது நேர்த்திக்கடனைச் செலுத்திக்கொண்டிருந்தார். தலாய் லாமா இருப்பிடம் அமைந்திருந்த திசை நோக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பின்பு எழுந்து நின்று ஏதோ மந்திரம் ஜபித்துவிட்டு மீண்டும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அவரின் கடினமான நேர்த்திக்கடன் செலுத்தும் முறையைப் பார்த்து சில நிமிடங்கள் நின்றிருந்தேன். `மனிதன் நம்பிக்கைகளால் ஆனவன்’ என்று மனதில் ஒரு குரல் ஒலித்தது.

மடாலயத்தின் நுழைவுவாயிலையொட்டி மறுபுறச் சுவற்றில் சீனாவுக்கு எதிரான திபெத்திய புரட்சிப் போராட்டங்களில் உயிர் நீத்த மாவீரர்களின் புகைப்படங்களும் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. `அவர்களது தியாகத்தை நினைவு கூறுவோமாக...’ என்று கீழே எழுதப்பட்டிருந்தது. மடத்தினுள் நுழையு முன்னமே ஏராளமான செய்திகள் மனதை நிறைத்துவிட்டிருந்தன. இதற்கு மேல் உள்ளே சென்று வழிபட என்ன இருக்கிறது என்று அமைதியின்மை மனதை நெருக்கியது. உயிர் பலிகளின்றி மதங்களும் புரட்சிகளும் இருந்ததில்லைபோலும்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

தலாய் லாமாவின் தரிசனத்துக்காக அவரின் வீட்டின் முன்பு பல நூறு மனிதர்கள் காத்திருந்தனர். நாங்களும் சிறிது நேரம் அவ்விடத்தில் நின்றோம். கூட்ட நெரிசலில் என் கால்கள் எதன் மீதோ மோதி நின்றன. ஒரு துணி மூட்டைபோல் மடிந்து சுருண்டிருந்த அதை உற்று கவனித்ததில் அது ஒரு மனித உருவம் என்று தெரிந்தது. சட்டென்று விலகி அவரிடம் குனிந்து மன்னிப்புக் கேட்டேன். ஒரு மூதாட்டி அவர். மெல்ல தனது தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தார். அவரின் கரும்பச்சை நிறக்கண்கள் மரகதக் கற்கள் போன்று மின்னின. அப்பார்வையின் ஒளி என்னை நிலைகுலையச் செய்தது. நான் அவரின் பாதம் தொட்டு வணங்கினேன்.

நூற்றாண்டுகளின் ரகசியங்களைச் சுமந்திருந்தன அந்த மூதாட்டியின் கண்கள்.

அவரின் உதடுகள் ஓயாமல் ஏதோ ஜபித்துக்கொண்டேயிருந்தன. அவரின் கைவிரல்களின் நடுவே மணிமாலை ஒன்றிருந்தது. ஒவ்வொரு முறையும் அவர் ஒரு மணியை நகர்த்தியபோது மலைச் சிகரத்தை ஏறிட்டுப் பார்த்து வணங்கினார். அவரருகே நெடுநேரம் அமர்ந்திருந்தேன். மனம் ஒருவாறு அமைதியடைந்தது. மனிதர்கள் கூடுவது ஓரிடமாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் நோக்கமும் வெவ்வேறாக இருக்கின்றன. அதுவரை அமைதியற்றிருந்த என் மனம் அம்மூதாட்டியின் அண்மையால் அமைதிகொண்டது.

மடத்தின் கருவறை நோக்கி முன்னேறுகையில் இருபுறமும் சுழலும் உலோக உரல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உரலின் மீதும் ஏதோ எழுதப்பட்டிருந்தது. `Aum Mani Padme hum’ என்று ஆங்கிலத்தில் அது மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. `இதயத்தாமரையின் நடுவே வீற்றிருக்கும் மணியே’ என்று அதற்கு பொருள். பெளத்த மதத்தில் தாமரை மலருக்கு முக்கியத்துவமுண்டு. கருணையின் வடிவமாக அவர்கள் தாமரையைக் குறிப்பிடுவர்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

`கருணை மிகுந்த இதயத்தில் வீற்றிருக்கும் இறையே... உன்னை வணங்குகிறோம்’ என்று அந்த மந்திரத்துக்குப் பொருள் கூறுகின்றனர். ஆண்மையும் பெண்மையும் சங்கமிக்கும் புள்ளியாகவும் தாமரையின் உருவத்தை ஒருசிலர் உருவகிக்கின்றனர்.

அவலோகிதேஷ்வர் என்னும் இறைவனின் துணைவியான பெண் தெய்வத்தை தாமரை மலராக உருவகம் செய்து வணங்குவதாகச் சிலர் கருதுகின்றனர்.

அம்மந்திரந்தின் உச்சரிப்பே மனதுக்கு பேராறுதல் அளித்தது. சில நிமிடங்களில் அது என் உதடுகளிலும் தொற்றிக்கொண்டது. அதை உச்சரித்துக்கொண்டே கருவறைக்குள் நுழைந்தேன்.

கருவறையின் நடுநாயகமாக ஒரு பெரிய அரியணை அமைக்கப்பட்டிருந்தது. அது மஞ்சள் துணியால் மூடப்பட்டிருந்தது. அது புனித தலாய் லாமாவின் இருக்கை என்று எழுதப்பட்டிருந்தது. தலாய் லாமா அவர்கள் அவ்விருக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு நல்லுரைகள் வழங்குவார்.

தலாய் லாமா
தலாய் லாமா

அரியணையைச் சுற்றிலும் சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த நீர்க் கிண்ணங்களில் நீர் சலனமின்றி நின்றது. வெவ்வேறு மனநிலையில் எண்ணற்ற ஆசைகளையும் தேவைகளையும் ஏந்திவரும் மனிதர்களின் எண்ண அலைகளை சீர்ப்படுத்தி இறைவனை நோக்கித் திருப்பும் அடையாளங்களாக அந்த நீர்க் கிண்ணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. நான் ஒவ்வொரு கிண்ணமாக அருகில் சென்று அதில் என் முகம் பார்த்துக்கொண்டேன். கருவறையைச் சுற்றி முடித்தபோது மீண்டும் கிண்ணத்து நீரில் முகம் பார்த்தேன் அப்போது என் முகம் எனக்குத் தெரியவில்லை. மஞ்சள் விளக்கொன்றின் சுடரொளியே அதில் தெரிந்தது. எனக்கு ஆச்சர்யம் விரிந்தது. அதை கவனித்த இளந்துறவி ஒருவர் "உங்கள் முகமும் மஞ்சள் சுடரும் முன்பும் தெரிந்தன. நீங்கள் முதலில் உங்கள் முகம் காண்பதில் கவனம் செலுத்தினீர்கள். நேரம் கடந்ததும் மஞ்சள் சுடரின் மீது கவனம் செலுத்தினீர்கள்.

எதன் மீது கவனம் செலுத்துகிறீர்களோ அதையே காண்பீர்கள் அல்லவா"

என்றார். நான் அவரை வணங்கினேன்.

அரியணையின் இருபுறத்திலும் மன்னர் அவலோகிதேஷ்வரின் நான்கு முக சிலையும், அதனடியில் சாக்கிய முனி என்று எழுதப்பட்டிருந்த புத்தர் தவ வடிவில் அமர்ந்திருந்த சிலையும் இருந்தன. அவலோகிதேஷ்வரர் சிவனுக்கு நிகரான தெய்வமாகக் கருதப்படுகிறார். சாக்கிய முனி என்பது புத்தரின் இறுதி நாள்களின் தவத் தோற்றம் என்கிறார்கள். சாக்கியம் என்றால் `சாந்தம்’ என்று பொருள் உள்ளதாம். ஊன் உருக்கி, உடலுருக்கி, உயிருருக்கி தவம்புரிந்த புத்தர் மனிதகுலம் தழைக்க கருணை ஒன்றையே மார்க்கமாகக் குறிப்பிடுகிறார். " நீ பிச்சை கேட்டுச் செல்லும்போது ஒருவன் உன் பாத்திரத்தில் எச்சில் உமிழ்ந்தால் அதையும் ஏற்றுக்கொள். அப்படிச் செய்வதால் அவனது செயலுக்கு நீ முழுமையளிக்கிறாய். அவனுடன் வாதிடுவதோ, சண்டையிடுவதோ அவனை மீண்டும் அச்செயலை செய்யத் தூண்டும். சகமனிதனை அவனது செயல்களின் பந்தத்திலிருந்து விடுவிப்பவனே புத்தன்.’’

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
pixabay

மலைகளின் பின்னே சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். மெக்லியோட் கஞ்ச் முழுவதும் அமைதிப் போர்வை விரிந்தது. பறவைகள் கூடடைந்தன.

நாங்கள் மடலாயத்தில் வழிபட்டுத் திரும்பினோம். 'ஓம் மணி பத்மே ஹும்' என்கிற மந்திரம் மலை முகடுகளில் பட்டு எதிரொலித்தது.

மனமெனும் தாமரையில் வீற்றிருக்கும் கருணையே கடவுள். அதுவே நிலங்கள் கடந்து, மதங்கள் கடந்து, மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து மனிதர்களைப் பிணைத்துவைத்திருக்கிறது.

பேருண்மைகள் கூறும் பயணங்கள் தொடரும்...