``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.
``பட்டாம்பூச்சி தனது ஆயுளை நாள்களால் அல்ல, தருணங்களால் கணக்கிடுகிறது. அதற்கு நேரம் போதுமானதாகவே இருக்கிறது" - தாகூரின் இந்த வரிகளுக்கு மனதைப் பறிகொடுத்தபோது நான் கல்லூரிப் பருவத்திலிருந்தேன். `காபுலிவாலா’, `போஸ்ட் மாஸ்டர்’ போன்ற சிறுகதைகளும் மற்றும் சில கவிதைகள் அளவிலேயே தாகூர் அப்போது பரிச்சயமாகியிருந்தார் என்றாலும், அவரின் எழுத்துகளில் புனைந்துவரும் மெய்யுணர்வுச் சிந்தனை எனது வளரிளம் பருவத்தின் வேட்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவியதென்றே கூற வேண்டும்.

தாகூர், மேற்கு வங்கத்தின் செல்வச் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும், அவர் படைத்த இலக்கியத்தின் செழுமைக்கு அவரின் செல்வாக்கான குடும்பச் சூழலே காரணம் என்ற எந்த ஆராய்ச்சிக்குள்ளும் ஈடுபட்டிராத பருவத்தில் தோன்றிய முதல் காதல் போன்றது, தாகூர் மேல் நான் கொண்ட தீவிரப் பற்று. இலக்கியத்துறையில் மேற்படிப்பை சாந்திநிகேதனில் தொடர வேண்டும் என்று சபதம் ஏற்றிருந்தேன். தாகூரின் கவிதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெறுவேன் என்று காண்போரிடமெல்லாம் சூளுரைத்தேன். வார்த்தைகள் வெற்றுக் கனவின் பிதற்றல் என்று வாழ்க்கை என்னைப் பழித்தது. அதன் எள்ளலுக்கு பயந்து ஓடத் தொடங்கியவள் வெகுதூரம் கடந்து வந்து பெருமூச்சு வாங்க நின்றபோது வயதும் வாய்ப்பும் என் கைநழுவிப் போயிருந்தன.

அவரை வாசிப்பதென்பது பதின்பருவத்து முதல் காதலின் நினைவுகளை மயிற்பீலிகொண்டு வருடி, நினைவுபடுத்திக்கொள்வதற்கு இணையானது.
வாழ்க்கை நீ விரும்பியதையே கொடுக்கும். ஆனால் என்ன... நீ விரும்பும்விதத்தில் கொடுப்பதில்லை அவ்வளவுதான். இந்த உண்மையை நான் புரிந்துகொள்ளவேண்டியே கொல்கத்தாவைச் சுற்றித் திரிந்தபோது எனக்குச் சில அனுபவங்கள் வாய்த்தன.
வங்காள இன மக்களின் அறிவுக்கூர்மையும், கலை ஈடுபாடும், வாழ்வியலும் செழிப்புற்றிருப்பதற்கு அவர்களது பல்லாயிரமாண்டு தொன்மையான பண்பாட்டுப் பின்புலமும், கலாசாரமுமே காரணமென்று கூறலாம். நாட்டின் மற்ற எந்தப் பகுதி மக்களைக் காட்டிலும் வங்க இன மக்கள் தமது செயல்களில் நிதானமும், நேர்த்தியான அணுகுமுறையும் கொண்டவர்களென அவர்களை நெருங்கிப் பழகும்போது எனக்குமே தோன்றியது

மேற்கு வங்கத்தில் நீண்டகாலம் வாழ வாய்ப்பு அமையவில்லையென்றாலும், அங்கு சுற்றித் திரிந்த சில நாள்களே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என அந்த நிலத்தின் மேன்மையை உணர்த்திற்று எனலாம்.
பயணக் குறிப்புகளிலும், கலை இலக்கிய ஏடுகளிலும் வங்காள உலகம் விவரிக்கப்படும் அளவுக்கு வேறெந்த நிலமும் மக்களும் விவரிக்கப்படுவதில்லை என்றாலும், எவ்வளவு விவரித்தாலும் அந்நிலமும் மொழியும் ஒவ்வொரு முறையும் புதியதொரு கோணத்தில் பரிமளிக்கின்றன என்பது புரியும்.

சுந்தரவனக் காடுகள், பழம்பெரும் டிராம் வண்டிகள் இயங்கும் தெருக்கள், ஹூக்லி நதி, ஹவுரா பாலம், விக்டோரியா மாளிகை, காளி கோயில், துர்க்கைகள்போல் வலம் வரும் பெண்கள், பேலூர் மடம், மண்குடுவைத் தேநீரும் ஜிலேபியும், சர்க்கரைக் கரைசலில் மூழ்கிய இனிப்புப் பண்டங்கள், இடதுசாரி அரசியல், சத்யஜித் ரே திரைப்படங்கள் எனக் கூறுபோட்டு ஆய்வு செய்யப் பல விஷயங்கள் இருந்தாலும், கொல்கத்தா எனக்கு இவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்தளித்து என்னை ஆசீர்வதித்ததென்பேன்.

"கேயாஸ் தியரி" என்கிற விதியின் அடிப்படையில் பார்த்தால், இன்று ஏதோ நான் கற்றவரை எழுதுவதற்கு அவ்வனுபவமே காரணமெனவும் கூறலாம்.
வடக்கு கொல்கத்தாவின் புராதனம் மாறாத தெருக்களில் நடந்துகொண்டிருந்தோம். இரண்டு நாள்கள் மட்டுமே அங்கு இருக்கக்கூடிய சூழல். அதற்கேற்றாற்போல் முதல் நாளுக்கென சில இடங்களும், இரண்டாம் நாள் மதியம் வரை சில இடங்களுமெனத் திட்டமிட்டுக்கொண்டு சென்றோம். இதுவரை உலகம் அறிந்திருந்த அதே புகழ்பெற்ற இடங்களை மட்டுமே காண நேர்ந்தது. சாந்தி நிகேதன் செல்லக்கூடிய நேரமும் இல்லை.
இறைமைப் பண்புடன், ஒரு மகத்தான கலாசாரத்தின் பெருமையும் அதேசமயம் பசும்புல்லின் எளிமையும், பருவமழையின் முதல் துளியில் குழைத்தெடுத்த செம்மண் வாசமும் அப்பாடல்களின் ஜீவனாகியிருந்தன.
அன்று ஆகஸ்ட் ஏழாம் தேதி. அந்தத் தேதிக்கு அப்படி ஒரு முக்கியத்துவம் இருந்ததாக நிச்சயம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சாலையின் தொன்மை அத்தனை பிரமிப்பாக இருந்தது. அதை அப்படியேவைத்து அழகுபார்க்கும் மனிதர்களையும் கண்டு வியந்தேன். துரிதங்களாலும், நிலைகொள்ளா பேராசைகளாலும் காற்றில் கலந்துவிட்ட மாசு சற்றே குறைந்து எல்லையிலா அமைதி அங்கு நிலவியது. வேறெங்கோ செல்லவேண்டி அங்கு நின்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் பெரும்பாலான அரசு அருங்காட்சியங்களுக்கும், பூங்காக்களுக்கும் அன்று விடுமுறையாக இருந்தது. அந்த நேரத்தை எங்கு சென்று செலவிடுவது என்று யோசித்தபோது, எங்கள் டாக்ஸி ஓட்டுநர் கூறினார்...
வழிகாட்டிகள் விளம்பரப் பதாகைகளோடு வருவதில்லை என்பதுபோல் அந்த டாக்ஸி ஓட்டுநர் தெரிந்தார். அற்புதங்களும் சப்தமின்றியே அரங்கேறுவன.
அன்று தாகூரின் நினைவுதினம். அதுவும் எழுபத்தி ஐந்தாவது வருட நினைவுதினம். அன்று நான் அங்கு இருக்கப்போகிறேன் என்று சில நிமிடங்களுக்கு முன்னர்கூடத் தெரிந்திருக்கவில்லை.
அவரின் நினைவுதினமாயிருந்ததால், அவரின் இல்லத்தின் ஒவ்வோர் அறையின் கதவும் திறக்கப்பட்டிருந்தது. பொதுவாக வீட்டின் ஒரு பகுதி மட்டுமே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படுமாம். ஆனால் அன்று ஒவ்வோர் அறையும், ஒவ்வொரு சன்னலும் திறந்திருந்தது. அவரின் தனிப்பட்ட அறை அன்று மட்டும் திறக்கப்பட்டு, அவர் அமர்ந்து எழுதிய நாற்காலி, அவர் பயன்படுத்திய பேனா, அவரின் நினைவுக் குறிப்புகள் அடங்கிய ஏடு என அந்த அறை முழுதும் அவரது ஆன்மாவின் வாசம்.

தூய வெண்மை நிற லில்லி மலர்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு கனவுக்குள் தெரியாமல் குதித்துவிட்டது போன்ற மனநிலை எனக்கு. உயிரும் உணர்வும் பேருவகையில் தளும்பின. `என்னை இங்கு ஏன் அழைத்து வந்தாய்... அதுவும் ஒவ்வொரு கதவும் சன்னலும் திறந்திருக்கும்போது?’ என்ற கேள்வி மட்டும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
அடுத்து, இல்லத்துப் பெண்கள் அறைகளும் அவற்றையொட்டி பெரிய சமையற்கூடம் ஒன்று. எல்லா அறைகளும் ஒன்றுபோலிருக்க, அவளது அறையில் மட்டும் இசையும் கவிதையும் நிறைந்திருந்தன. அது 'காதம்பரியின் அறை.’ தாகூரின் பால்ய கால சிநேகிதி, ஆனால் உறவில் அண்ணி. அவர்களிருவரின் உறவின் வெளிப்பாடுதான் தாகூரின் புகழ்பெற்ற கவிதைகள் அனைத்தும். இளமைக் காலங்களில் தாகூர் இயற்றிய ஒவ்வொரு கவிதையின் முதல் வாசகரும் அவளே, விமர்சகரும் அவளே! ``நீங்கள் எழுதிய அந்த மழைக்கவிதையை உலகமே மெச்சுகிறதாமே ரோபி?" என்ற காதம்பரியிடம், "அதைப் பற்றி எனக்குக் கருத்தேதும் இல்லை,
முழுமை பெற்ற காதலுக்கு அஸ்தமனமும் சீக்கிரமே வாய்த்துவிடுமாம். காதம்பரி இறந்த பிறகு பதினான்கு ஆண்டுகள் துறவுநிலை கண்டவர்போல் வாழ்ந்த தாகூர், அதன் பிறகு இயற்றிய கவிதைகளும் ஓவியங்களும் உலகை அசைத்துப் பார்த்தன.
காதம்பரி தேவியும் தாகூரும் தோட்டத்தில் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்துதான் கவிதைகள் இயற்றுவார்களாம். அந்தக் குறிப்பும் அங்கு எழுதியிருந்தது. அந்த மரம் செழுமையாகக் காற்றுக்கு ஏற்ப தலையசைத்தவாறிருந்தது. அந்த மரத்துக்குக் கேட்டுக்கொண்டிருக்கலாம் அவளும் அவரும் சேர்ந்து கவிதை பேசுவது. அதே மரநிழலில் சில நொடிகள் நின்றிருந்தேன். கவிதையும் காதலும் ஒருசேர அரங்கேறிய இடமல்லவா!

தாகூரின் வாசிப்பறையில் அவர் பயன்படுத்திய கையேடும் பேனாவும் இருந்தன. மனமும் உடலும் புல்லரித்துத் துடித்தன. எத்தனை அற்புதமான காவியங்களை இயற்றிய விரல்கள் பிடித்த பேனா அது. தாகூர் அமர்ந்து சிந்தித்த சாய்வு நாற்காலியும் அங்கிருந்தது. தாகூரின் அரூப இருப்பை என்னால் உணர முடிந்தது. நாற்காலியையும் பேனாவையும் ஸ்பரிசிக்க திராணியற்றவளாக அவ்வறையில் உடல் கிடத்தி, சில நொடிகள் படுத்துக்கொண்டேன்.