
உயில்
ஒருவர் தன் இறப் புக்குப் பின் அவர் சேர்த்த சொத்துகளுக்காகக் குடும்ப உறுப்பினர்கள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என நினைத்தால் உயில் (Will) எழுதி வைப்பது அவசியம். அப்படி எழுதும் போது கவனமாக எழுத வேண்டும். சிறிய தவறுகூட உயிலை செல்லாமல் ஆக்கி விடும். ஓர் உயில் என்னென்ன காரணங்களால் செல்லாமல் போக வாய்ப்பு உண்டு?

1. இரண்டு சாட்சிகள் கையெழுத்திடவில்லை எனில்...
எந்த ஓர் உயிலிலும் இரண்டு சாட்சிகள் கையெழுத்திட்டு சான்றளித் திருக்க வேண்டும். அப்படி இல்லை எனில், அந்த உயில் செல்லாது. வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட், ஓர் உயில் ஒரு சாட்சி மட்டுமே கையெழுத் திட்ட நிலையில் அந்த உயில் செல்லாது எனத் தீர்ப்பளித்து உள்ளது. சாட்சிகளாக கையெழுத்திட்டிருப்பவரின் வயது 18-க்குமேல் இருக்க வேண்டும். மேலும், சாட்சி யாகக் கையெழுத்திட் டிருப்பவர், உயில் மூலம் பலன் அடைபவராக, உயிலை செயல்படுத்துபவராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்த உயில் செல்லாத நிலை உருவாகும்.
2. முந்தைய உயில்களை அழிக்கவில்லை எனில்...
ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை உயில்களை வேண்டுமானாலும் எழுத லாம். அப்படி எழுதும்போது பழைய உயிலைக் கட்டாயம் அழித்துவிட வேண்டும். ஒருவரின் மறைவுக்குப் பிறகு, அவர் கடைசியாக எழுதிய உயில்தான் செல்லுபடி யாகும். கடைசியாக எழுதிய உயில் கிடைக்காத நிலையில், பழைய உயில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

3. உயிலில் கையொப்பம் இடப்படாமல் இருப்பது...
உயில் எழுதியவர் அதில் கையெழுத்திடுவது மிகவும் முக்கியம். உயில் எழுதியவர் கையெழுத்திடவில்லை எனில், அது செல்லாது. குறைந்தபட்சம் உயில் எழுதிய வரின் கட்டைவிரல் பதிவா வது இருக்க வேண்டும்.
4. தெளிவில்லா மனநிலையில் உயில் எழுதப்பட்டிருந்தால்...
ஓர் உயிலானது தெளி வில்லா மனநிலையில் எழுதப் பட்டிருந்தால் அது செல்லாது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மது போதையில் இருக்கும்போது, போதை மருந்து பயன்படுத்திய நிலையில் ஓர் உயில் எழுதப் பட்டது நிரூபிக்கப்பட்டால், அந்த உயில் சட்டப்படி செல்லாது.
5. மைனர் உயில் எழுதியிருந்தால்…
சில குடும்பங்களில் பாரம்பர்ய சொத்துகள் 18 வயதுக்குட்பட்ட இளவல்களுக்கு (Minors) வந்திருக்கும். இந்த நிலையில், அவர்கள் உயில் எழுதினால் அது செல்லாது.

6. உயிலில் தேதி குறிப்பிடாதது...
உயிலில் இரண்டு சாட்சிகள் கையெழுத்திட்டு இருந்தாலும் , அதில் தேதி குறிப்பிடவில்லை எனில், அது சட்டப்படி செல்லாது. காரணம், அந்த உயில் எப்போது எழுதப்பட்டது என்று தெரியாது. மேலும், அந்த உயிலுக்குப் பிறகு, புதிய உயில்கள் எழுதப்பட்டிருக்கலாம். அதைக் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அழித்திருக்கக்கூடும் எனச் சட்டம் சந்தேகப்படுவதே காரணம்.
ஒருவர் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் உயிலில் குறிப்பிட்டு எழுதாதது, ஓர் உயிலை செல்லாததாக மாற்றாது என்றாலும், அதை நடை முறைப்படுத்துவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதாவது, விடுபட்ட சொத்தைக் குடும்ப உறுப் பினர்களிடையே பிரிப்பது எப்படி என்பதில் தேவை இல்லாத பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, உயில் எழுதும்முன் உங்களுக்கு என்னென்ன சொத்துகள், முதலீடுகள் இருக்கின்றன என்பதைப் பட்டியல் போட்டு வைத்துக்கொள்வது நல்லது!
7. மோசடியாக எழுதப்பட்ட உயில்
ஓர் உயில் போலியாக உருவாக்கப்பட்டிருப்பதாக குடும்ப உறுப்பினர்களில் யாராவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிரூபிக்கப்பட்டால் அந்த உயில் செல்லாது. இதேபோல், வற்புறுத்தி அல்லது மிரட்டி மோசடியாகப் பெறப்பட்ட உயில் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அந்த உயில் செல்லாது. அதேபோல், கடன்கள் இருந்தாலும், அது எப்படி அடைக்கப்பட வேண்டும் என்பதையும் உயிலில் குறிப்பிட்டால், குடும்ப உறுப்பினர்கள் இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும்.