Published:Updated:

முதன் முதலாக: வீடு திரும்புதல்

முதன் முதலாக: வீடு திரும்புதல்
பிரீமியம் ஸ்டோரி
News
முதன் முதலாக: வீடு திரும்புதல்

தீபச்செல்வன், படம் : ஈழவாணி

ரண்டாயிரமாம் ஆண்டு. அப்போது, இடம்பெயர்ந்து கந்தபுரம் என்ற ஊரில் வசித்துக்கொண்டிருந்தோம்.

முதன் முதலாக: வீடு திரும்புதல்

போர்க்களத்தில் போராளிகளுக்கு உதவுவதற்கு ஒவ்வொரு கிராமமாக மக்கள் செல்வது வழக்கமானது. பதுங்குகுழி அமைத்தல், உணவு சமைத்தல் போன்ற உதவிகள், ஒத்தாசைகளைச் செய்வதற்காகச் செல்வதுண்டு. அப்படிச் செல்பவர்கள் சண்டைகளில் சிக்கி இறப்பதும் உண்டு. பின்னர், அவர்கள் எல்லைப்படை வீரர்களாகப் புலிகளால் கௌரவிக்கப் படுவார்கள். அப்போது, எங்கள் ஊரில் இருந்தும் பலர் போர்க்களத்திற்குப் புறப்பட்டார்கள். எனக்கு அப்போது 17 வயது, இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. நானும் என்னுடைய நண்பன் ஒருவனும் எப்படியோ அந்தக் குழுவில் புகுந்து லாரிக்குள் ஏறிக்கொண்டோம்.

என் சகோதரன் இயக்கத்தில் இருப்பதால் அவனைப் பார்க்கலாம் என்பதற்காகவுமே புறப்பட்டேன். அப்போது, ஆனையிறவை புலிகள் இயக்கம் கைப்பற்றத் தயாராகியிருந்த நாள்கள். பூநகரி, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பூநகரியின் கௌதாரி முனை என்ற பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் இருந்தன. கௌதாரிமுனை மிகுந்த முக்கியமான மையமாகச் செயற்பட்டது. அங்கு சண்டைகள் மூள்வதுடன், யாழ்ப்பாணத்திலிருந்தும் ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவதுண்டு. என்றாலும், கௌதாரிமுனை ஊடாகப் புலிகள் யாழ்ப்பாணத்துக்கும் ரகசியமாக ஊடுருவி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

முதன் முதலாக: வீடு திரும்புதல்

கந்தபுரத்திலிருந்து புறப்பட்ட, மக்களை ஏற்றிய லாரி, பூநகரி நோக்கி விரைந்தது. பூநகரி, மக்கள் யாருமற்று பாழடைந்து காணப்பட்டது. பழைமையான அந்த நகரத்தின் கடைத்தெருக்கள் எல்லாம் பற்றை மண்டியிருந்தது. எங்கு பார்த்தாலும் உருக்குலைந்த மண்மேடுகளும் ராணுவ முகாம்களுமாய் ஆளரவமற்றிருந்தது. நெடுங்காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து. 1993-ல் புலிகளால் கைப்பற்றப்பட்டபோதும், 1996-ல் கிளிநொச்சியின் ராணுவத்திடம் வீழ்ந்த பின்னரும்  யாழ்ப்பாணம், ஆனையிறவில் நிலைகொண்ட ராணுவத்தினரால் அங்கு மக்கள் வாழ முடியாத நிலை நீடித்தது.

அங்கு நேற்றும் கடுமையான சண்டை மூண்டதென லாரியில் இருந்தவர்கள் பேசிக்கொண்டனர். அண்ணா, அங்கே நிற்கக்கூடும் அல்லது அவனைப் பற்றிய தகவல்கள் எதையாவது பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். போராளிகள், எல்லைகளில் காவல் இருந்தனர். போராளிகளின் முன்னரங்குகளும் தெரிந்தன. எதிர்த்திசையில் ராணுவத்தினரின் காவலரண்களும் நடமாட்டங்களும் தெரியும். திடீரென விமானங்கள் வந்து தாக்கும். ராணுவத்தினரின் படகுகள் கடல்வழியில் தென்படும். போராளிகள் கரையிலிருந்து தாக்குவார்கள். போராளிகளின் படகுகள் கடலுக்குள் சென்று ராணுவத்தைத் தாக்கும்.

முதன் முதலாக: வீடு திரும்புதல்

என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம். “பாடியாய்த்தான் வீட்ட போகப் போறம்...” என்று என் நண்பன் ஒருபுறம் கிலியை ஏற்றுவான். அம்மா, தங்கச்சி எல்லோரையும் நினைக்க, திரும்பிப் போய்விடலாம் பொறுப்பாளரிடம் சொல்லிவிடலாம் என்றும் தோன்றியது. போராளிகளின் சிரிப்புச் சத்தம் போர்க்களத்தைக் கலகலப்பாக்கியது. ஒருவரை ஒருவர் கிண்டலடித்தும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் இருந்தனர்.

 போர்க்களத்தின் நெருக்கடிகளைக்கூட மகிழ்ச்சியாக அனுபவித்துப் பேசும் அவர்களைப் பார்க்கையில், எனக்குள் இருந்த பயம் கொஞ்சம் தணிந்தது. அண்ணாவைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.

கடுமையான சண்டைக்குள், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீன்களை அள்ளிவந்து போராளிகளுக்குக் கொடுக்கும் மீனவர் களிடமும் “அண்ணாவைக் கண்டீர்களா?” என்று விசாரித்தேன். நானும் என் நண்பனும் போராளிகளுக்குச் சமைத்த உணவுகளை எடுத்துச் சென்று கொடுப்பதுண்டு. போராளிகள், “தம்பிக்கு எத்தினை வயது?” என்று கேட்கவும், “18 முடிந்துவிட்டது!” என்றேன். அவர்கள் என் பதிலில் நம்பிக்கையின்றிப் பார்த்தனர். எங்களுடன் வந்தவர்கள், மணல்மலைகளை அண்டிய பிரதேசங்களில் பதுங்குகுழிகளை அமைத்தார்கள். அவர்களுக்கு உதவி, ஒத்தாசைகளைச் செய்வதுமாய் நகர்ந்தன நாள்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிந்துவிட்டது.

ஒருநாள் நானும் என்னுடைய நண்பனும் பதுங்குகுழி அமைத்துக்கொண்டிருப் பவர்களுக்கு உணவு எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அன்று, பாரிய சமருக்கு ராணுவம் தயாராகிக்கொண்டிருந்தது. மணல்மலைகளிலிருந்து கடற்கரையை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, வானத்தில் விமானங்கள் வந்து குவியத் தொடங்கின. வெட்டை வெளியான அந்தப் பகுதியில் ஒரு பதுங்குகுழியும் இல்லை. எங்கு பதுங்குவது என்று தெரியாது நானும் அவனும் ஓடினோம். போராளிகள் கடற்கரைகளிலும் மணல்மலைகளிலும் உசாராகிக்கொண்டிருந்தனர். மற்றொரு புறத்தில் யாழ்ப்பாணக் கரைகளிலிருந்து செல்கள் வந்து விழத் தொடங்கின. நானும் என் நண்பனும் தூர்ந்துபோன கிணறு ஒன்றுக்குள் குதித்தோம்.

முதன் முதலாக: வீடு திரும்புதல்

வான்வழியாகவும் தரைவழியாகவும் கடும் தாக்குதலை நடத்தியது ராணுவம். போராளிகள், பதிலுக்கு யாழ்ப்பாணம் நோக்கிக் கடல் வழியாகப் பீரங்கித் தாக்குதலை நடத்தினார்கள். போராளிகளின் நகர்வுகளும் வானங்களின் நகர்வுகளும் நிறுத்தப்படவில்லை. விமானங்கள் குண்டுகளைக் கொட்டி அந்த இடத்தையே சின்னா பின்னமாக்கியிருந்தன. காயப்பட்ட போராளிகள் மணல்மலை முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டனர். இரண்டு போராளிகள் வந்து, அந்தக் கிணற்றிலிருந்து எங்களை அழைத்துச் சென்றார்கள். ‘நான் உயிரோடுதான் இருக்கிறேனா?’ என்று யோசித்தேன். நான் நன்றாகவே பயத்தில் அதிர்ந்துபோனேன். வார்த்தை ஒன்றும் வாயில் வரவில்லை. என் நண்பன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தான். மணல்மலைகளில் சுற்றித் திரிவதை நிறுத்திவிட்டு, பாசறையின் அறை ஒன்றுக்குள் பேசாமல் படுத்திருந்தேன்.

கிராமங்களிலிருந்து மக்களை அழைத்துவரும் செயற்பாடுகளுக்கான போராளிப் பொறுப்பாளர், பாசறை வந்ததும் என்னையும் என் நண்பனையும் கண்டு அதிர்ந்துபோனார். “ஆர் இவர்களை அழைத்து வந்தது?” என்று கேட்டுக்கொண்டி ருந்தார். “எந்தப் பாடசாலையில் கல்வி கற்கிறீர்கள், எத்தனையாம் வகுப்பு?” என்று கேட்டார். நான் அண்ணாவைத் தேடி வந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனேயே எங்களைத் தன்னுடைய ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார். அண்ணா பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொண்டார். விரைவில் அண்ணாவை விடுமுறையில் வீட்டுக்கு அனுப்புவதாகவும் சொன்னார். நாளையே பாடசாலை போக வேண்டும் என்றும், பாடசாலைக்கு வந்ததை உறுதிப்படுத்த வகுப்பாசிரியரின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் சொல்லி வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார் அந்தப் போராளி. வெகு நாள்கள் அண்ணாவுக்காகக் காத்திருக்க, ஒருமுறை விடுமுறையில் வீடு வந்தான். அதன் பிறகு, வீரமரணம் அடைந்து வித்துடலாய்த்தான் வீடு திரும்பியிருந்தான்.