
ஷாஜி - ஓவியங்கள் : ரவி

நான்கே நாள் படப்பிடிப்புடன் நின்றுபோன ‘ஒரு கிராமத்தில் ஒரு வசந்தகாலத்தில்’ வீடியோ சினிமாவில், பலவகையான பணிகளைப் புரிந்து அனுபவமிக்க என்னையும் தனது வீடியோப் படத்தில் பங்கேற்க வைக்கலாமென்று என்னைத் தேடினார் அதன் இயக்குநர் கலாராஜன். தேடி வீட்டுக்கு வந்த அவரது ஆள்களை என் அம்மா உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டார். அதை அறிந்து பதைபதைப்புடன் நான் ஓடிச்சென்று கலாராஜனைப் பார்ப்பதற்குள் எல்லாமே தாமதமாகிப்போயின.

“இத்தின நாள் நீ எங்கே போய் தொலஞ்சே? இப்ப வந்து என்ன லாபம்? ஷூட்டிங் தொடங்கியாச்சு.”
“அப்டி சொல்லாதீங்க மாஷே... எதாவதொன்னுக்கு என்னயும் சேத்துக்குங்க.”
“செட்டுல இப்பவே ஆள் அதிகம்ன்னாரு பிரொட்யூசரு. இனிமே சொல்லிப் ப்ரோஜனமில்ல. எதுக்கும் நீ நாளைக்கி சும்மா சோலா ஓட்டலுக்கு ஷூட்டிங் பாக்க வந்திரு.”
அடுத்த நாள் நான் அங்கே செல்லும்போது, வெள்ளைநிறச் சேலை கட்டிய, மெலிந்த ஓர் இளம்பெண் நடந்துவருவதுபோன்ற காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தனர். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கக் கூட்டம் குழுமியிருந்தது. அவர்கள் முன்னால் துணை இயக்குநர் என்கிற தோரணையில் அசத்த வேண்டிய நான், இதோ கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருக்கிறேன். காலக்கேடு! கதாநாயகியின் அம்மா என்று நினைக்கிறேன், தடித்த ஒரு பெண்மணி ஏதோ துர்நாற்றத்தைச் சகித்துக்
கொண்டிருக்கும் முகபாவனையுடன் அலட்சியமாகக் கால்மேல் கால்வைத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். திரைப்பட இயக்குநர்கள் அணிவதுபோன்ற தொப்பி ஒன்றைக் கலாராஜன் அணிந்திருந்தார். அத்தகைய சினிமாத் தொப்பிகளும் கறுப்புக் கண்ணாடிகளும் அணிந்த வேறு சிலரும் அங்கு நடமாடிக்கொண்டிருந்தனர். நாயகியின் அப்பாவாக நடிப்பவர் சதுரங்கப்பாறை ஏலத்தோட்டத்தின் முதலாளி ஜோஸ்.

“மகளே.. நீ எங்கே சென்று வருகிறாய்?”
“நான் தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன் அப்பா.”
“நன்றாக ஜபித்தாயா மகளே?”
“நன்றாக ஜபித்தேன் அப்பா.”
“கட்” என்று கத்திக்கொண்டு திரும்புகையில் கலாராஜன் என்னைப் பார்த்தார். உடன் “ஷாஜீ, வாடோ” என்று அவர் பக்கம் என்னை அழைத்தார். “இந்த பையன் நம்ம ஃபிரண்டு. முந்தி ஒரு வீடியோ சினிமால அஜிஸ்டன்டா ஒர்க் பண்ணியிருக்கான்” என்று ஒளிப்பதிவாளருக்கு என்னை அறிமுகம் செய்தபின் போய்விட்டார்.
அக்கறையுடன் எனது கையைக் குலுக்கிய ஒளிப்பதிவாளர், “இப்ப எடுத்த ஷாட்டை கொஞ்சம் பாருங்க” என்று கேமராவின் நோக்குக் கருவியை என்னிடம் திருப்பினார். அதில் ஒரு கண்ணை ஆழ்த்தி, கதாநாயகி நடந்து வருவதன் சிறிய கறுப்பு வெள்ளைக் காட்சியாகப் பார்த்துக்கொண்டிருந்த எனது முதுகில் அழுத்தமான ஓர் அடி விழுந்தது, நடுங்கித் திரும்பினேன். கறுப்புக் கண்ணாடியும் சினிமாத் தொப்பியும் வைத்து, நீலவண்ண ஜீன் பேன்டும் வெள்ளைச் சட்டையும் அணிந்த குட்டையான ஒருவர் “யாருடா நீ? ஒனக்கிங்க என்ன வேல?” என்று கடுமையாகக் கேட்கிறார். அந்த நடிகையும் அவளது அம்மாவும் படப்பிடிப்பைப் பார்க்கவந்த கூட்டமும் அதை வேடிக்கை பார்க்கின்றனர். நடந்தது என்னவென்று ஒளிப்பதிவாளர் விளக்க முயன்றார். அது எதுவும் அந்த ஆளின் காதில் விழவில்லை. “கண்டகண்ட வழிப்போக்கனும் தெருப்பொறுக்கியும் ஏறி மேஞ்சு எட்டிப் பார்க்க என் கேமராவும் செட்டும் அவங்க அப்பா வீட்டுச் சொத்துக் கெடயாது.” அவர் சத்தமாகக் கத்துகிறார்.
கலாராஜன் கூப்பிட்டதால்தான் வந்தேன் என்றும் ஒளிப்பதிவாளர் அழைத்துக் காட்டியதால்தான் கேமராவுக்குள் பார்த்தேன் என்றும் பலவீனமாகச் சொல்ல முயன்றேன். “அவங்கல்லாம் இல்ல, நான்தான் இங்கே முடிவெடுக்கிறேன். நான்தான் இந்தப் படத்தோட புரொட்யூசரு. இங்கே வந்து எவனுமே ஆட்டம்போடக் கூடாது...” எந்தவொரு தவறுமே செய்யாமல் அனைவரின் முன்னும் அவமானப்படுகிறேன்! எனது தன்மானம் ஆழமாகப் புண்பட்டது. நான் அங்கிருந்து வெளியேற முயன்றதும் அவர் எனது சட்டையைப் பிடித்து இழுத்து, “நீ எங்கப் போறே? எல்லாத்தயும் பண்ணிப்புட்டு லேசா இங்கேர்ந்து நழுவப் பாக்கிறியா?” என்று கத்தினார். என்னை மேலும் அவமானப்படுத்துவதுதான் அவரது நோக்கம்.
சண்டைச் சத்தங்களைக் கேட்டு ஓடிவந்த கலாராஜன், நான் ஒரு கச்சேரிப் பாடகன் என்பதையும் முன்பு ஒரு வீடியோ சினிமாவில் பணிபுரிந்தவன் என்பதையும் எடுத்துரைத்தபோது தயாரிப்பாளர் சற்று அடங்கினார். அவர் தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றியபோதுதான் எனக்கு அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் களப்புர அந்தோணி. துபாயில் வேலை செய்பவர். எனது அம்மாவின் அக்கா அம்மிணிப் பேரம்மாவின் பக்கத்து வீட்டுக்காரர். கடும் அவமானத்தில் வெளிறிப்போய் அங்கே நின்றுகொண்டிருந்த நான் யாரென்று என்னை அறிமுகப்படுத்தவோ அவரிடம் உரையாடவோ முயலாமல் அங்கிருந்து வெளியேறினேன். “ஷாஜீ நில்லெடோ” என்று கலாராஜனும் “எடோ நில்லெடோ, சொல்றேன்...” என்று அந்தோணியும் பின்னாலிருந்து கூப்பிடுவதைப் பொருட்படுத்தாமல் வேகமாக நடந்தேன்.

சில மாதங்கள் கடந்து ஒருநாள், ‘சேம்பளம்’ எனும் ஊரில் பேருந்தை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தேன். ஒரு அரதப் பழைய ஜீப் என்னைக் கடந்து போனது. சற்று தொலைவு சென்று, நின்று பின்பக்கம் வரத்தொடங்கி, எனதருகே வந்து நின்றது. உள்ளே அதோ லுங்கியும் கட்டம்போட்ட சட்டையுமாக களப்புர அந்தோணி! அவரைப் பார்த்ததும் எனக்குக் கோபம் தலைக்கேறியது. “எடோ... எழுகும் வயலுக்குத்தானே போறே? ஜீப்புல ஏறிக்கோ.” அதைக் கேட்டதாகவே பாவிக்காமல் மறுபக்கம் பார்த்து சிலைபோல் நின்றேன். “ஹா... வண்டியில எறுங்க மாப்ளே... சொல்றேன். நீ நரிக்குழை அம்மிணிச் சேச்சியோட தங்கச்சி மவன்தானே?” ‘அதனால என்ன? அந்த நடிகையையும் அவளது அம்மாவையும் கரக்ட் பண்ண, அவங்களுக்கு முன்னே ஒரு பெரும் புடுங்கின்னு காட்ட, நீ அத்தனைப் பேர் முன்னால் என்னை அவமானப் படுத்தினியே… அப்போ ஒனக்கு இது தோணலயா?’ என்று சத்தமாகக் கேட்க நாக்கு அரித்தது. இருந்தும் திரும்பியே பார்க்காமல் மௌனமாக நின்றேன். அந்தோணி ஜீப்பைவிட்டு இறங்கிவந்தார். எதுவுமே நடக்காததுபோல் அருகில் வந்து எனது தோளில் கைவைத்தார். நான் பலவீனமாக அவரைத் தள்ளி அகற்ற முயன்றேன். “ஹா... இப்டி கோவப்பட்டால் எப்டி? அன்னிக்கி ஏதோ ஒரு மூடுல ஆளறியாம அப்படி நடந்துபோச்சு. மன்னிச்சிரு மாப்ளே... வாங்க. நாம ஒரு கோல்ட் ஸ்பாட் குடிக்கலாம்.”
கோல்ட் ஸ்பாட்! இரண்டு மூன்று ரூபாய் விலை இருக்கும் புட்டிக் குளிர்பானம். ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையான ரேகா போன்றவர்கள்தாம் அதன் விளம்பரங்களில் வந்தனர். ‘லிவ் எ லிட்டில் ஹாட், சிப் எ கோல்ட் ஸ்பாட்’ போன்ற பாடல்களுடன் வந்த அதன் விளம்பரப் படங்களை எத்தனையோ திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஒருமுறையாவது அதைக் குடிக்க வேண்டுமே என்று வாயில் எச்சில் ஊறியிருக்கிறது. அந்தோணியின் கோல்ட் ஸ்பாட் ஆசைகாட்டலில் நான் குப்புற விழுந்தேன். மட்டுமல்ல, ‘திருந்தித் திரும்பி வந்தவனைத் திட்டக் கூடாது’ என்றுதானே நாட்டுப் பழமொழி.

தனக்கு நன்கு அறிந்த ஒரு வீட்டிலிருந்து வரும் பையனை ஆளறியாமல் வசைபாடியதில் அவருக்கு மனவுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம். அச்சம்பவத்தை யாரிடமுமே நான் சொல்லாதது அவருக்குக் கூடுதல் குற்றவுணர்வை உருவாக்கியிருக்கலாம். கோல்ட் ஸ்பாட்டின் கமலாப்பழச் சுவையைக் குடித்து ரசித்த பின் அந்தோணியுடன் ஜீப்பில் கிளம்பினேன். அவர் தயாரித்த அந்த மகத்தான வீடியோ சினிமா என்னவாயிற்று என்று அவரிடம் கேட்டேன். “ஓ... அது அந்த மாங்கா மடையங்க ஒரு மண்ணும் தெரியாமப் பண்ண கூத்து. எல்லாமே நாசமாப் போச்சு. அதுக்குப் பின்னால சுத்தி, நேரத்துக்கு துபாய் திரும்பிப் போக முடியல. வேலையும் போச்சு. கையில இருந்த காசும் போச்சு. என்னோட கணக்குல ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி ஊத்தி படத்தோட டேப்பை நீங்களே கொளுத்துங்கடான்னு அந்த நாயிங்கக்கிட்டே சொல்லிட்டு வந்தேன். அவன்டெ அம்மேடெ வீடியோ சினிமா...”
கொச்சி ஸ்ரீராக்
கட்டப்பனையில் உள்ள புத்தகக் கடையில் புதிய சினி ப்ளிட்ஸ், ஸ்டார் டஸ்ட், பிலிம் பேர், ஸ்க்ரீன் என எல்லா இதழ்களுமே வந்துவிட்டன. வாங்க வேண்டும். ஆனால், கடன் கேட்பதற்கும் ஓர் எல்லையிருக்கிறதே! அங்கே நின்றுகொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவற்றைப் புரட்டிப் படிக்கலாம். கடைக்காரர் மறுக்க மாட்டார். ‘பதிற்றாண்டுகள் இந்திய சினிமாவின் கோபக்கார இளைஞனாகயிருந்த அமிதாப் பச்சனின் எல்லாப் படங்களும் தற்போது பெரும் தோல்வியைத் தழுவுகின்றன. படங்கள் எதுவுமே இல்லாமல் வீட்டிலேயே காலங்கழிக்கும் நிலைமைதான் அவருக்கு வந்துகொண்டிருக்கிறது’ போன்ற கருத்துகள் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மனச்சோர்வுடன் படித்துக்கொண்டி ருந்தேன். அப்போது ஜோஸுகுட்டி மாஸ்டர் பதற்றத்துடன் அங்கே வந்தார். எங்களூருக்கு பிரேம் நஸீர் வந்த நாளில் நடந்த இசை நிகழ்ச்சிக்குச் சொதப்பலாக ஒலியமைப்பை வழங்கிய அதே நபர்தான்.
“எடா... நீ இங்கே நிக்கிறியா? உன்னைத் தேடாத எடமே இல்ல. வா... வேகம் வந்து வண்டியில ஏறு”.
“என்னாச்சு மாஷே..? என்ன விசயம்?”
“நீ எங்கூட வாடா… சொல்றேன்.”
நான் அவருடன் சென்றேன்.
இசைக்குழு, கிட்டார் வாசிப்பு, இசைப் பள்ளி, ஒலி ஒளி அமைப்பு, பெண்களின் மார்பக உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனம் எனப் பல தொழில்களை நடத்திவந்த ஆள் ஜோஸுகுட்டி மாஸ்டர். அவரது இசைக்குழுவில் பாட என்னையும் சிலமுறை அழைத்திருக்கிறார். “இன்னிக்கு ஒரு கச்சேரி இருக்கு. கொச்சி ஸ்ரீராக் இசைக்குழு. டிக்கெட் புரோகிராம். வா... நாம போலாம்”. கொச்சி ஸ்ரீராக்! அப்படியொரு இசைக்குழு இருப்பதாகக் கேள்விப்பட்டதே இல்லையே!

எதுவும் ஆகட்டும், கொச்சியிலிருந்து வரும் இசைக்குழு நடத்தும் கச்சேரியைக் கேட்க என்னைத் தேடிப்பிடித்து காரில் ஏற்றிக்கொண்டுபோகிறார் மனிதர்! இவரைப்போல் நல்ல மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்? ஆனால், அவர் என்னைக் கொண்டுசென்று நிறுத்தியது ஒரு பெரிய மூடிவண்டியின் அருகே. அதன்மேல் ‘கொச்சி ஸ்ரீராக் இசைக்குழு’ என்று பெரிதாக எழுதிய துணிப்பதாகை! நான் சந்தேகத்துடன் அவரைப் பார்த்தேன். “கொச்சி ஸ்ரீராக் நாமதான்டா. நான் பொறந்து வளந்தது கொச்சியில்தானே. வண்டியில இருக்கிறவங்க அத்தனபேரும் கொச்சிக்காரங்கதான்... தமிழு பாட மட்டும் ஆளு கெடைக்கல. நீ தான் இன்னிக்கு தமிழு பாடறே. வண்டியில ஏறு. போலாம்.”
இது என்ன கூத்து! ‘கோட்டயம் பல்லவி’ என்ற ‘இல்லா இசைக்குழுவின்’ பெயரில் கச்சேரிக்குப் போனதற்கு நடு மண்டையில் கிடைத்த அடியின் ரீங்காரம் இன்னும் காதைவிட்டு நீங்கவில்லை. வாழ்நாளிலே மறக்கமுடியாத அந்த சிவராத்திரிக்குப் பின் எந்தவொரு திரையிசை நிகழ்ச்சியிலும் நான் பாடவில்லை. இசை என்பது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி, ஒவ்வொரு பாடலையும் நான் அணுவணுவாகக் கூர்ந்து ஆராயவும் ரசிக்கவும் தொடங்கிய காலம் அது. எனது பாடல் என்னாலேயே சகிக்க முடியவில்லை என்றாகிவிட்டிருந்தது. நடுவே சில நாள் ‘றாந்நி’ எனும் ஊரிலுள்ள ஒரு கிறிஸ்தவ இசைக்குழுவில் தமிழ், ஹிந்தி பக்திப் பாடல்களைப் பாடப் போயிருந்தேன். அதோடு பாடுவதையே நிறுத்திவிட்டேன். புதிய தமிழ்த் திரைப்பாடல்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. “இந்தக் கச்சேரி எங்கே நடக்குது?” என்று நான் ஜோஸுகுட்டி மாஷிடம் கேட்டேன். தூக்குப்பாலம் ஊரிலுள்ள பட்டம் காலனி எக்ஸெல் எனும் திரையரங்கில்தான் என்று அவர் சொன்னதும் எனது மனம் சஞ்சலப்படத் தொடங்கியது.
ஏழு கட்டை எட்டு கட்டை தெரிஞ்சா நான் படிச்சேன்?
இடுக்கி மாவட்டத்தின் ஆரம்பகால சினிமாக் கொட்டகைகளில் முக்கியமானது பட்டம் காலனி எக்ஸெல். பொந்தன்புழை விஜயன் போன்ற எங்களூரின் முன்னோடி சினிமா வெறியர்கள் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கு அது. நானும் அங்கிருந்து பல படங்களைப் பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ பார்த்து, அதை மீண்டும் பார்க்க ஆசைப்பட்டு இரண்டாம் ஆட்டத்திற்கும் ஏறினேன். அன்றிரவு முழுவதும் ஓயாமல் பெய்த பேய்மழையில் வெளியே வரமுடியாமல் அந்த அரங்கின் வாசலிலேயே குத்தவைத்து விடியலுக்குக் காத்திருந்தது நினைவுக்கு வந்தது. சத்தியனும் நஸீரும், எம்.ஜி.ஆரும் சிவாஜியும், கமலும் ரஜினியுமெல்லாம் மின்னி விளங்கிய அந்தத் திரைச்சீலைக்கு முன்னால் நின்று திரைப்பாடல்களைப் பாடுவதை எண்ணிப் பார்த்தபோது எனக்கு லேசாக மெய்சிலிர்த்தது. ஆனால், தமிழ்நாட்டு எல்லையில் இருக்கும் ஊர் அது. புதிய தமிழ்த் திரைப்பாடல்களைச் சிறப்பாகப் பாடினால் மட்டும்தான் அங்கே எடுபடும். இல்லை. இது நமக்கு ஒத்து வராது.
“நான் வரல மாஷே. என்ன விட்டிடுங்க.”
“அப்படிச் சொல்லாதே, ஒன்ன நான் எத்தன மேடை ஏத்தியிருக்கேன்? இன்னிக்கி ஒருநாள் நீ எனக்கு உதவித்தான் ஆகணும்.”

“அப்டீன்னா நான் இந்தி பாடட்டுமா? இந்தீன்னா கொஞ்சம் பழைய பாட்டானாலும் பிரச்னையில்லையே!”
“இந்தி பாட ஆளிருக்கு. நீ தைரியமா தமிழு பாடு. நீ பின்னிடுவ. நான் சொல்றேன்.”
அவர் என்னைப் பிடித்து இழுத்து மூடி வண்டிக்குள் ஏற்றினார். கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டைப்போல் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். வண்டிக்குள்ளே கீ போர்ட் இசைக்கருவியை இசைப்பவரான ப்ரைஸ் அமர்ந்திருந்தார். எனக்குப் பரிச்சயமானவர், சிறு ஆசுவாசம். “ப்ரைஸூ, நீங்களும் இருக்கீங்களே... தப்பிச்சேன்... கொஞ்சம் பழசானாலும் நாம முன்னாடி பாத்து வெச்சிருக்கிற தமிழ் பாட்டுகள் பாடலாமே.”
“ஐயோ... நான் இன்னிக்கு வாசிக்க வரல. ரோட்டோரமா ஒக்காந்திருந்த என்ன மாஷ் சும்மா இழுத்திட்டு வந்தாரு. நான் சும்மாதான் வந்தேன்.”
“என்னோட பாட்டுக்காவது நீங்க வாசிங்க. ப்ளீஸ்...”
அப்போது, ஒரு ரகசியம்போல் ப்ரைஸ் என்னிடம், “அந்த நீல ஜிப்பாக்காரர பாத்தியா? அவுருதான் கீ போர்ட் ஸ்ரீபாலன். ஒரு மார்க்கமான ஆளு. அவுரு வாசிக்கிற கீபோர்ட யாரையும் தொடக்கூட விடமாட்டாரு.”
நீளமான தனது கறுப்புத் தாடியைச் சொறிந்தவாறு கீ போர்ட் ஸ்ரீபாலன் இழுத்துப் புகைக்கிறார். அந்தப் புகைக்குக் கஞ்சாவின் காட்டவாசம். ‘இன்றைக்கு தமிழ் பாடப்போகும் பையன்’ என்று மாஸ்டர் என்னை ஸ்ரீபாலனுக்கு அறிமுகம் செய்தார்.
“புதிய எந்தெந்த தமிழ்ப் பாட்டு தெரியும் ஒனக்கு?”
“புதிய பாட்டு எதுவுமே தெரியாது.”
“பின்ன என்ன பாடப்போறே நீ? அபூர்வ சஹோதரங்ஙளில் வரும் ‘அண்ணாட்ட ஆடுறா’ தெரியுமா?”
“இல்ல.”
“அதுகூடத் தெரியலன்னா நீ பின்ன என்ன தமிழு பாட்டுக்காரன்?”
“அந்தப் படத்தோட ‘ராஜா கைய வச்சா’ கேட்டிருக்கேன்...”
“அப்பொ அத மொதல்ல பாடு. மத்ததெல்லாம் மேடயில பாத்துக்கலாம்.”
மேற்கொண்டு எதுவுமே பேசாமல் ஸ்ரீபாலன் கஞ்சாப் புகையில் மூழ்கினார். ‘ராஜா கைய வச்சா’ கமல்ஹாஸன் சொந்தக் குரலில் பாடிய பாடல். ஆண்கள் பாடுவதற்கு மிகவும் கடினமான ‘A’ அதாவது 6 கட்டை சுருதியில் இளையராஜா இசையமைத்த பாடல் அது. கமல்ஹாஸனே சிரமப்பட்டுத்தான் அதைப் பாடியிருக்கிறார் என்று கேட்டால் தெரியும். முறையான இசைப்பயிற்சி எதுவும் இல்லாத, சராசரிக்கும் கீழான என் போன்ற ஒரு பாடகன் அதை எப்படிப் பாட முடியும்?
திரையரங்கின் முன்னால் நாங்கள் சென்று இறங்கும்போது அங்கே ஏராளமானோர் குழுமியிருந்தனர். பழைய வீடியோ சினிமா நாள்களில் எனது நண்பர்களாக மாறிய கெ.கெ.பஷீர், டி.சலின் போன்ற பலர் அங்கிருந்தனர். கொச்சி மாநகரிலிருந்து வந்த ‘மாபெரும்’ இசைக்குழுவுடன் நானும் இருப்பதை அறிந்து அவர்கள் மட்டற்று மகிழ்ந்தனர். “கச்சேரி கேக்க நம்ம குரூப்புப் பயலுகளே நெறய வந்திருக்காங்க. நீ கலக்கு மாப்ள.” ‘ஆமா! இனி கலங்குவதற்கு என்ன இருக்கு?’ எனக்கு நெஞ்சில் நெருப்பு எரிகிறது. யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து ஓடிப்போய்விடலாமா என்றுகூட யோசித்தேன். எதுவுமே செய்ய முடியவில்லை.
மேடையின் பின்னாலிருக்கும் சிறு திண்ணையில் பிரைஸும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். ரஜினிகாந்த் படமான ‘ராஜாதிராஜா’வின் ‘மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி’ பாடலின் இசைக்குறிப்புகள் அவருக்குத் தெரியும். எனக்கும் அப்பாடல் ஓரளவு தெரியும். பிரைஸை கீ போர்ட் வாசிக்க அனுமதித்தால் எனது முதல் பாடலாக அதைப் பாடலாம். நான் ஸ்ரீபாலனிடம் பலவீனமாக அதைச் சொன்னேன். அவர் எதுவுமே காதில் வாங்கவில்லை. இசை நிகழ்ச்சி தொடங்கியது. ஓரிரு மலையாளப் பாடல்கள் பாடப்பட்டன.
“அடுத்து வருவது ஒரு தமிழ்ப் பாடல். கமலாஹாஸனின் புத்தம் புதிய படமான ‘அபூர்வ ஸஹோதரங்ஙள்’ படத்தின் ‘ராஜா கை வெச்சால்’ பாடுவதற்காக கொச்சி ஸ்ரீராகின் தமிழ்ப் பாடகரும் உங்கள் ஊர்க்காரருமான ஷாஜி கட்டப்பனையை மேடைக்கு அழைக்கிறேன்.” என்னை அறிந்திருந்த நண்பர்கள் ஏற்பாடு செய்த ஆரவாரங்களுக்கும் கைதட்டல்களுக்கும் நடுவே நடுங்கும் கால்களுடன் நான் மேடைக்குச் சென்றேன். அரங்கம் நிரம்பி வழியும் கூட்டம். அரங்கில் வெளிச்சம் குறைவு என்பதனால் எதையுமே சரிவரப் பார்க்க முடியவில்லை. பாடலின் முதல் வரி ஒரு சின்ன உரையாடலும் சிரிப்பும்தான். ‘ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்ல, ஹ ஹ ஹ ஹா...’ அது முடிந்தவுடன் ‘தகதம் தக்கத் தகதம்’ என்ற டிரம் தாளக்கட்டுடன் பாடல் ஆரம்பம். நான் மைக்கைக் கையிலெடுத்தேன்.
“ரெடி... ஒன் டூ த்ரீ ஃபார்...”
நான் முதல் வரியைப் பேச ஆரம்பிக்கும் முன் ‘தக்கம் தகதம்’ என்று தப்பாக டிரம் தாளம் வந்தது. அந்தக் குழப்பத்தில் சரியான இடத்தில் பாடலை ஆரம்பிக்க என்னால் முடியவில்லை. சற்றே தாமதமாகத் தொடங்கினாலும் முதல் நான்கு வரிகளை ஒருவழியாகப் பாடி முடித்தேன். அப்போதுதான் அந்தத் திடுக்கிடும் உண்மை எனக்கு விளங்கியது. அப்பாடலின் இயல்பு சுருதியான A அதாவது, 6 சுருதியில் அல்ல, அதிலும் உயர்ந்த B அல்லது 7 சுருதியில் ஸ்ரீபாலன் வாசித்துக்கொண்டிருக்கிறார்! யாராலும் நெருங்க முடியாத சுருதி. கருவியிசை ஓடிக்கொண்டிருக்கிறது. வரப்போகும் சரணம் எட்டமுடியாத மேல் ஸ்தாயியில் இருக்கிறது. எனது கண்கள் இருட்டாயின.
மூச்சுமுட்டி கண்கள் தள்ளி சரணத்தின் முதல் வரியைப் பாடினேன். அங்கிருந்து மேலேறும் ‘வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு...’ எனும் இடம் வந்தபோது, ஒரு மாட்டுக்கன்று பிராணவேதனையில் கதறிக் கூவுவதுபோல் எனது குரல் உடைந்து பிசிரடித்து ஓர் அலறலாக மாறியது. நாலாபக்கமும் பார்வையாளர்களின் ஓங்கிய கத்தல்களும் கூச்சல்களும். எனது உடல் வெந்து ஆவியாகிப்போவதுபோன்ற ஓர் உணர்வு என்னைத் தாக்கியது. இங்கே விழுந்து இந்த கணமே நான் ஏன் இறக்கக் கூடாது? மைக்கைக் கீழே போட்டுவிட்டு வேகமாக மேடையிலிருந்து வெளியேறி ஓடினேன். திரையரங்கிற்கு வெளியே எல்லாப் பாதைகளிலும் கும்மிருட்டு பரவிக்கிடந்தது. முடிவற்ற அந்த இருட்டில் மூழ்கி இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினேன்.
(தொடரும்)