எஸ்.சிவபாலன் எம்.ஜெ.கௌதமன்
##~## |
'நான் விவசாயிகளின் நண்பன்’ என்பதுபோல் சூரிய ஒளியில் இயங்கும் பூச்சிமருந்துத் தெளிப்பானை உருவாக்கி உள்ளார், முகேஷ் நாராயணன்.
காரைக்காலில் உள்ள, கீழகாசகுடியில் ஆத்மாலயா பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கிறார் முகேஷ் நாராயணன். இவர், தரங்கம்பாடியில் உள்ள ஹைடெக் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்றவர்.
''என் தந்தை லஷ்மி நாராயணன் ஒரு விவசாயி. அவருக்கு முதுகுவலி பழகிப்போன ஒன்றாகிவிட்டது. என் தந்தையைப்போல் முதுகுவலியுடன் அதிக எடை உள்ள மருந்துத் தெளிப்பானை சுமக்கும் விவசாயிகளை நினைத்து வருந்தியபோது உதயமானதுதான் இந்தக் கண்டுபிடிப்பு.'' என்கிறார் முகேஷ்.
இந்த மருந்துத் தெளிப்பான் மற்ற அனைத்துத் தெளிப்பான்களையும்விட விலை மற்றும் எடை குறைவாக இருக்கிறது.
'இந்த சோலார் மருந்துத் தெளிப்பானுக்கு சக்தியைத் தருவது 10 வாட்ஸ் சோலார் பேனல். இந்த சோலார் பேனலில் இருந்து வரும் மின்சாரம் 12 வோல்ட் மின்கலனில் சேமிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் தெளிப்பானுக்குத் தேவையான அழுத்தத்தை உருவாக்கக்கூடிய டிசி மோட்டார் பம்புக்குச் செல்கிறது. இந்த மோட்டார் பம்பு, நீரின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தித் தெளிப்பானைச் செயல்பட வைக்கிறது.'' என்கிறார்.

இதில் ஒரு முறை மின்கலன் நிறைந்தால், ஆறு மணி நேரம் வேலை செய்யுமாம். அது மட்டுமா?

''தெளிப்பானுக்கு உரிய சாதனங்களை மாற்றி, மின்கலனில் உள்ள மின்சாரத்தை ஒரு காருடைய ஃபேன் மோட்டாரோடு இணைத்து, ஒரு புல் வெட்டியையும் இதே முறையில் செயல்படவைக்கலாம். புல் வெட்டியை ஆறு மணி நேரம் பயன்படுத்தலாம்' என்று அதையும் செய்துகாட்டி அசத்தினார்.
''இந்தத் தெளிப்பானின் கூடுதல் சிறப்பு, சோலார் பேனலில் உருவாகும் மின்சாரத்தை நேரடியாகவும் பயன்படுத்த முடியும். மின்கலனில் மின்சாரம் அதிகமாக இருந்தால், தெளிப்பான் மின்கலனில் இருந்து மின்சாரத்தைப் பெறாமல், நேரடியாக சோலார் பேனலில் இருந்தே பெற்றுக்கொள்ளும். மின்கலனில் இருக்கும் மின்சாரத்தைச் செல்போன் சார்ஜ் செய்ய, மின் விசிறியைச் சுழலவைக்க, ஒரு 45 வாட்ஸ் மின் விளக்கை எரியவிடவும் செய்யலாம். மேலும் இதை ஒரு மினி இன்வெர்ட்டராகவும் பயன்படுத்தலாம். நான்கு வாட்ஸ் மின் விளக்கையும், கார் மோட்டார் ஃபேனையும் ஒரே சமயத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பயன்படுத்தலாம்'' என்கிறார் முகேஷ்.
முகேஷின் அடுத்த இலக்கு, சோலார் நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களை வடிவமைப்பது.
''நல்ல ஸ்பான்சர் கிடைத்தால், உடனே களத்தில் இறங்க நான் ரெடி. யாராவது இருந்தால் சொல்லுங்க அங்கிள்' என்று புன்னகை பூக்கிறார்.
சிறப்பு அம்சங்கள்
டீசல் என்ஜின் தெளிப்பானின் எடை (மருந்தில்லாமல்) 10 முதல் 11 கிலோவும் கைப் பம்பு

தெளிப்பானின் எடை 6 முதல் 7 கிலோவும் இருக்கும். ஆனால், இந்த சோலார் தெளிப்பான் மருந்து இல்லாமல் அதிகபட்சமாக மூன்று கிலோ எடைதான் இருக்கும். இதையே டியூரா அலுமினியம் என்கிற பொருளில் செய்தால், இன்னும் பாதியாகக் குறையும்.
சுற்றுச்சூழல் மாசு இல்லை. இரைச்சல் இல்லை. ஒரே முறை 6,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். 15 வருடத்துக்கு செம்மையாகச் செயல்படும். இதில் லிணிஞி விளக்குகளைப் பயன்படுத்தினால், இன்னும் அதிக நேரம் உபயோகிக்கலாம்.