பீப்பீ... பீப்பீ... பூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கும் மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்குக் கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும் காய்க்கும் முக்கியப் பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள்.

குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு மரம் நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்கு வந்த பிறகு, மாடுகளும் காணாமல் போயின. பூவரசு மரங்களும் அருகிவிட்டன. அற்புதமான மருத்துவகுணங்கள் நிறைந்த பூவரசு மரங்களின் அழிவும் புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணம்.
பல்வேறு காரணிகளால் வளிமண்டல மெங்கும் விரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்கவேண்டிய முக்கியமான மரம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்த மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது. அப்படியே சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே கிளைக்கும். பீரோ, கட்டில் போன்ற பொருள்கள் செய்வதற்கு, அந்தக் காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரசை சீண்டுவாரில்லை. ஆனாலும், இன்றைக்கும் இதன் மகத்துவம் அறிந்தவர்கள் இதனைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பூவரசு வெறும் மரம் மட்டுமல்ல; அது இல்லத்தில் இருக்கும் இலவச மருத்துவமனை. மிகச் சிறந்த தோல் மருத்துவர். தோல் தொடர்பான பல நோய்களுக்கான தீர்வு இந்த மரத்தில் இருக்கிறது. சாதாரணமாகத் தோலில் ஏற்படும் எச்சில் தழும்பு தொடங்கி, தொழுநோய் வரையான பல்வேறு சரும நோய்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பூவரசம் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் கசியும். அதை எச்சில் தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவி வந்தால் முற்றிலும் குணமாகும். நூறாண்டுகள் ஆன முதிர்ந்த பூவரச மரத்தின் பட்டையைப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும். முதிர்ந்த பூவரசு மரத்தின் பட்டையை இடித்து, அந்தச் சாற்றில் தினமும் வாய் கொப்பளித்தால் வெண்குஷ்ட நோயால் வாயில் ஏற்பட்ட வெண்புள்ளிகள் மாறும். இந்தச் சாற்றை கொப்பளித்துத் துப்பிவிட வேண்டும். விழுங்கிவிட கூடாது. இத்தனை மகத்துவம் வாய்ந்த மரம் என்பதால்தான் இதைக் ‘காயகல்ப மரம்’ என அழைக்கிறார்கள்.
