வழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும். ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும் நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின் குட்டை ரக தென்னை மரங்களையும் அவரது தோப்பில் பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும் மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் சூட்டியுள்ளார். முதலில் தனது வயலில் அந்த புதிய ரக தென்னை நாற்றுக்களை நடவு செய்து முறையாக பராமரித்து, 5 ஆண்டுகள் கடந்த பிறகு, கையில் எட்டிப்பறிக்கும் உயரத்தில் தென்னையா? திராட்சையா? என்கிற விதமாக குலை குலையாக காய்ப்பு தொங்கி பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.
இந்த புதிய ரக தென்னை கண்டிபிடிக்கும் ஐடியா எப்படி வந்தது என்று உமாபதியிடம் கேட்டோம்.. மனிதர் ஆர்வமுடன் பதில் சொல்ல தொடங்கினார்..
‘‘தென்னையில் அதிக மகசூல் தேவை என எனது நண்பரான முன்னோடி தென்னை விஞ்ஞானி O.V.R சோமசுந்தரத்திடம் கூறினேன். அவர்தான் கங்காபாண்டம் என்கிற குட்டை ரக தென்னை மற்றும் மேற்கு கடற்கரை நெட்டை ரகம் இரண்டையும் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுத்தந்தார். ஆனா, மேற்கு கடற்கரை நெட்டை ரகம்தான் தமிழ்நாட்டில் அதிகம் இருக்கு. இதில் காய்ப்பு குறைவு ஆனால், இளநீர் ருசியா இருக்கும். கங்காபாண்டத்தில் இளநீர் அதிகம் கிடைக்கும் ஆனால் ருசி மந்தமாக இருக்கும்...அதனால, இந்த இரண்டு ரகத்தையும் இணைச்சு, ருசியான அதிக இளநீர் கிடைக்ககூடிய ஒரு புதிய ரகத்தை உருவாக்கினோம்.
பனை மரத்தில் ஆண் மரம் பெண்மரம் என்று பால் வேறு பாடு உண்டு. ஆனால், தென்னை மரங்கள் இருபாலினம் வகையைச் சேர்ந்தது. ஆண்பூவும், பெண்பூவும் ஒரே மரத்தில் இருக்கும்.. ஆனால், செய்த தொழில்நுட்பம் வேறு விதமானது, ஆந்திராவின் கங்கா பாண்டம் தென்னை மரங்களை பெண் மரங்களாகவும், மேற்கு கடற்கரை நெட்டை மரங்களை ஆண் மரங்களாகவும் வைத்து ஒன்றின் மகரந்தங்களை இன்னொன்றில் செயற்கையாக வைத்து அதன் மூலம் வரும் தேங்காய்களில் இருந்து புதிய ரகத்தை உருவாக்கி வருகிறேன். அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்று பெயரை சூட்டியுள்ளேன். இந்த ரகத்துக்கு கொச்சியில் உள்ள மத்திய தென்னை வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் என்னை அணுகி கன்றுகளை வாங்கி நடவு செய்து வெற்றிகர இளநீர் விவசாயி என்று பெயர் வாங்கியுள்ளார்கள். தண்ணீர் தேங்கி நிற்காத அனைத்து மண்ணிலும் இந்த ரகம் சிறப்பாக வளரும். மரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மழையில்லாத நாட்களில் குறைந்த பட்சம் 90 முதல் 150 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தால் தரமான காய்ப்பு கிடைக்கும்.இது இயற்கையான முறையில் செய்யும் தொழில்நுட்பம்தான்" என்றார்.
தொடர்புக்கு: உமாபதி - 97153 71717
உமாபதியிடம் தென்னை கன்றுகள் வாங்கி நடவு செய்துள்ள விவசாயிகளில் ஒருவர் பொள்ளாச்சி வட்டம் நெகமம் பகுதியை சேர்ந்த மணி கூறும்போது...
''குழந்தைகள்கூட எட்டிப்பறிக்கும் உயரத்தில் இளநீர் குலை குலையாக காய்த்து தொங்குகிறது. தலா இளநீர் தேங்காய் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக 300 - 750 மில்லி லிட்டர் வரை இளநீர் கிடைக்கிறது. மற்ற ரகங்களில் குறைவாக கிடைக்கும்.
இந்த ராம்கங்கா ரகத்தை நான் 6 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன். குலை முறிந்து விழும் அளவுக்கு காய்கள் பிடித்திருப்பதால், அதை கயறு போட்டு இழுத்து கட்டியுள்ளேன்.என்றார். தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கும் இந்த ரகம் உகந்தது. இதில் 100 தேங்காய்க்கு 18 கிலோ வரை கொப்பரை கிடைக்கும்'' என்றார்.
- ஜி.பழனிச்சாமி