இந்தியப் படகு இனி எல்லைத் தாண்டாது!
##~## |
இந்திய-இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லும் துயரத்துக்கு முற்றுப் புள்ளியே இல்லாமல் நீண்டுகொண்டு இருக்கிறது. இந்தப் போக்கைத் தடுக்க இந்திய அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக் கையும் எடுக்கவில்லை.
இந்தப் பிரச்னைக்கு மீனவர்களுக்கு உதவ அறிவியலைத் துணைக்கு அழைத்து இருக்கிறார்கள் சென்னை மாணவர்களான நவீன் நெல்சன் மற்றும் பிரின்ஸி பெர்பெச்சுவா. கடலில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் எச்சரிக்கும் கருவியை வடிவமைத்து உள்ளார்கள் இவர்கள்.
''நாங்க செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியின் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரு மென்டேஷன் மாணவர்கள். மூணாவது வருஷப் படிப்பின் சமயம்தான் இந்த புராஜெக்ட்டை கையில் எடுத்தோம். 'இது சாதாரண விஷயம் இல்லை. பெரிய பிரச்னையைக் கைல எடுத்துருக்கீங்க’ன்னு எல்லாரும் எங்களைப் பயமுறுத்தினாங்க!'' என்று பிரின்ஸி தொடங்க... தொடர்கிறார் நவீன்.

''பூமியின் அட்சரேகை, தீர்க்கரேகையைக் கணக்கிட்டு படகின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகை யில் வடிவமைக்கப்பட்டு உள்ளது இந்தக் கருவி. 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ அடிப்படையில் இந்தக் கருவியின் இயக்கம் இருக்கும். குறிப்பிட்ட எல்லையின் அட்ச, தீர்க்க ரேகைகளை இக்கருவியில் பதிவேற்றி விசைப் படகுகளில் பொருத்திவிட வேண்டும். படகின் இன்ஜினை இயக்கத் தொடங்கியதும் ஸ்க்ரீனில் பாதுகாப்பான பகுதி, மீன்பிடிப் பகுதி, அபாயப் பகுதி என எச்சரிக்கைக் குறிப்புகள் இருக்கும். இலங்கைக் கடல் எல்லைக்கு அரை கிலோ மீட்டர் முன்னரே அபாயப் பகுதிக்கான எச்சரிக்கை மணி ஒலிக் கத் தொடங்கும். உடனே உஷாராகி எல்லையைக் கடக்காமல் படகைச் செலுத்த வேண்டும். மீறியும் படகைச் செலுத்தினால் இன்ஜின் தானாகவே இயக்கத்தை நிறுத்திவிடும். குறிப்பிட்ட அட்ச-தீர்க்க ரேகையைப் படகு கடந் தால் இன்ஜினுக்கு டீசலை அளிக்கும் குழாயில் அடைப்¬ப ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக் கிறது. மீண்டும் படகை இயக்கத் தொடங்கினால், அடைப்பு நீங்கி படகு இயங்கும். ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி எல்லை மீறி பயணித்தால், இன்ஜின் 'லாக்’ ஆகி படகு மொத்தமாக இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். அதேசமயம் கடற்படைக்கு அந்தக் கருவியே தகவல் அனுப்பிவிடும். அவர்கள் வந்து நிராதரவாக நிற்கும் படகை மீட்பதற்கு வசதியாக இருக்கும்!'' என்று கருவியின் செயல்பாட்டை விளக்குகிறார் நவீன்.
''தேசிய அளவிலான பல அறிவியல் மாநாடுகளில் இந்தக் கருவிக்கு சிவப் புக் கம்பள மரியாதை. கருவிக்கு பேடன்ட் ரைட்ஸும் உறுதி செய்யப் பட்டுவிட்டது. கருவியை மீனவர்கள் மத்தியில் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக தமிழக மீன்பிடித் துறையை அணுகியபோது, 'மேலிட உத்தரவை வாங்கி வாருங்கள்’ என்று மட்டும் பதில் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பல மீனவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை என்ற முக்கியத்துவம் கருதி யேனும் தமிழக அரசு உடனடி ஒப்புதலை அளிக்க வேண்டும்!'' - என்று ஒருமித்த குரலில் ஆதங்கத்துடன் முடிக்கிறார்கள் நவீனும் பிரின்ஸியும்.
இந்த மாணவர்களின் அக்கறையில் 50 சதவிகிதம் இருந்தால்கூட, ஆவன செய்ய வேண்டும் தமிழக அரசு.
செய்யுமா?
பா.பற்குணன்,படங்கள்:பா.காயத்ரி அகல்யா