
சந்தோஷ் நாராயணன்
அன்னப்பறவையின் முதுகில் இருந்து இறங்கிய பிரம்மா, சாவகாசமாக அமர்ந்து நான்கு கைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, தன் கணினியை ஆன் செய்தார்.
திரேதா யுகத்துக்கு முன்னால் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள்... என தான் படைத்தவற்றை நினைத்துப் பூரிப்படைந்தார். நான்கு முகங்களிலும் புன்னகை அரும்பியது. தன் மனதில் இருந்து அத்திரி முதல் ஆங்கிரசர் வரை சப்தரிஷிகளையும், சுவயம்பு மனு என்கிற முதல் ஆணையும், சதரூபை என்கிற முதல் பெண்ணையும் தான் பூமியில் படைத்ததைப் பெருமையாக நினைத்தபடி, தன் கணினியில் பாஸ்வேர்டை அடித்து என்டர் தட்டித் திறந்தார்.
திரேதா யுகம் வழியாக துவாபர யுகம் கடந்து சென்றுகொண்டிருக்கிற காலத்தை தான் படைத்தது, சிறு பூச்சிகள் முதல் பெரும் காடுகள் வரை தன் படைப்பின் எல்லையின்மையை வியந்தபடி இமெயில் அக்கவுன்ட்டுக்குச் சென்றார்.

பிரபஞ்சத்தின் வேண்டுதலுக்கு ஏற்ப, தன் படைப்புகளை உற்பத்தி செய்வதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆயிரம் யுகங்களைக்கொண்ட கல்பம் என்பது, பிரம்மாவின் ஒரு பகல். இந்தக் கலியுகத்தின் முதல் மின்மடலைத் திறந்தார். 'எப்படிப்பட்ட பிள்ளைகள் வேண்டும்?’ என்ற பெற்றோர்களின் ஒட்டுமொத்த வேண்டுதல்கள், சுருக்கப்பட்ட வடிவத்தில் வந்திருந்த மின்மடல் அது.
பல்வேறு திறன்களும் முகங்களும் ஞானமும்கொண்ட பல்லாயிரம் மனிதர்களைப் படைக்கப்போகும் ஆர்வத்தில் மின்மடலைப் படித்தவர், கைகளால் தன் நான்கு தலைகளையும் ஒரு கணம் பிடித்துக்கொண்டார்.
'டியர் பிரம்மா... பத்தாயிரம் இன்ஜினீயர்கள், அஞ்சாயிரம் டாக்டர்கள், மூவாயிரம் சார்ட்டட் அக்கவுன்டன்ட்கள் பார்சல்...’ என்ற ஒரே ஒரு வரி மட்டும்தான் அதில் இருந்தது!
டெரகோட்டா எனும் சுடுமண் கலை, உலகம் முழுவதும் பிரபலம். இது, கிட்டத்தட்ட மனிதர்களின் ஆதி கலைகளில் ஒன்று. வரலாற்றை உறைந்த வடிவில், சுடுமண் கலைகளின் எச்சங்களில் இருந்து, தொல்லியல் ஆய்வாளர்கள் இன்றும் கண்டுபிடித்தபடி இருக்கிறார்கள்.
இன்று நவீனக் கலை என்பது, பெரும்பான்மையான மக்களுக்குச் சம்பந்தமே இல்லாத... ஏதோ கேலரிகளில் காட்சிக்கு வைத்து, குறைந்த மக்களால் மட்டுமே பார்க்கப்படும், வாங்கப்படும்... ஒரு பணக்கார புராடெக்ட் போல தோற்றம் அளிக்கிறது.

ஆனால், நமது ஊரில் பெரும்பான்மையான கலைகள் கோயில்களுடனும் வழிபாடுகளுடனும் இணையாக வளர்ந்துவந்தவை. அதிலும் மக்களின் கலையான சுடுமண் சிற்பங்கள், சிறுதெய்வ வரலாற்றுடன் நெருக்கமானவை. மக்களின் வாழ்க்கையுடன் கலந்துவிட்டவை. தேர்ந்தெடுத்த களிமண்ணில் செய்யப்பட்ட சிலைகளை, கிட்டத்தட்ட
1,000 டிகிரி செல்சியஸில் சூளையில் சுடவைப்பதன் மூலம் சுடுமண் சிற்பங்கள் கிடைக்கின்றன. அவற்றின் மீது தேவைக்கு ஏற்ப வண்ணம் பூசப்பட்டது.
இசக்கி அம்மன், சுடலைமாடன், அய்யனார்... போன்ற நாட்டார் தெய்வங்கள் முதல் குதிரை, யானை போன்ற இன்னபிற விலங்குகளின் சிலைகள் வரை, இந்தச் சுடுமண் சிற்பங்களின் அழகு, தமிழ்ச் சமூகத்தின் தனிக் கலை அடையாளம் கொண்டவை.
உக்கிரமும் கருணையும் ஒரே நேரத்தில் மாறி மாறித் தெரிவதைப் போன்ற இசக்கி அம்மன் சுடுமண் சிலைகளை, சிறுவயதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்த்திருக்கிறேன். வெயில் தகிக்கும் கோடைக்காலங்களில், அம்மனின் திறந்த கண்கள், நாக்குகள், கைகள், வண்ணமயமான குள்ளமான உருவ அமைப்பு என, கனவிலும் துரத்தும் உருவங்கள்.
வேண்டிக்கொண்டு மண்குதிரைகளை கோயிலுக்கு வழங்குவார்கள். பல்வேறு அளவுகளில் செய்யப்படும் இந்தக் குதிரைகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து, வண்ணங்கள் அழிந்து, திறந்த கண்களுடன் கூட்டமாக நிற்கும் காட்சி, பார்ப்பவர்களுக்கு ஒரு விஷ§வல் விருந்து.
ஆனால், இன்று நுட்பமாகப் பின்னப்படும் அரசியல், பொருளாதாரம் இந்தச் சுடுமண் சிற்பங்களை இடம்பெயரச் செய்துவிட்டு, காங்கிரீட் எனாமல் சிற்பங்களாக கிராமக் கோயில்களுக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றன. சுடுமண் சிற்பங்கள், வரலாற்றைத் தேக்கிவைத்துக்கொண்டு காலத்தில் கரைந்துகொண்டே இருக்கின்றன!
'வைரல்’ என்ற வார்த்தை, வைரஸ்கள் பரவும் விதத்தைக் குறிக்கும் ஆங்கிலக் கலைச்சொல். வைரஸ்கள் தங்களைத் தாங்களே மல்ட்டிபிள் செய்துகொண்டு, கணிக்க முடியாத வேகத்தில் பெருகும் வல்லமைகொண்டவை. அதேபோலத்தான் இன்றைய இன்டர்நெட் வெர்ச்சுவல் உலகத்தில் ஒரு செய்தியோ, வீடியோவோ, புகைப்படமோ கிட்டத்தட்ட வைரஸ்கள்போல பரவிச் செல்வதை 'வைரல்’ என்கிறோம். இந்த வைரல் என்ற பதம், உண்மையில் 1990-களில் விளம்பரத் துறையில் ஆரம்பித்த, மார்க்கெட்டிங் தந்திரங்களில் ஒன்று.

ஆனால், இன்றைய சமூக வலைதள யுகத்தில் வைரல்களின் 'அட்டாக்’குக்கு ஆளாகாதவர்களே இல்லை. 'பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்பது நம் முன்னோர் வாக்கு. பக்கத்து மனிதனுக்கு 10 ரூபாய் ஷேர் பண்ண மனம் இல்லாதவர்கள்கூட, சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்கு ஷேரிங் செய்கிறார்கள். அரசியல் புரட்சி முதல் அந்தரங்க வீடியோக்கள் வரை வைரல்களின் சைரன் ஒலிக்காமல், இன்றைய இன்டர்நெட் நாட்கள் கடந்துபோவது இல்லை. இது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால், நான் சொல்லவந்தது இது அல்ல. இந்த வைரல் ஷேரிங் பற்றி சில நவீன மூடநம்பிக்கை நமக்கு உண்டு. இன்டர்நெட்டில் வாசிப்பவர்கள் நீண்ட கட்டுரைகளை வாசிப்பது இல்லை. 'குறுகத் தறித்த குறள்’போல குட்டிக் குட்டியாக எழுதினால்தான் வாசிப்பார்கள் என்பது அதில் ஒன்று. ஙிuக்ஷ்க்ஷ்suனீஷீ என்பது, இணையத்தில் எழுதப்படும் விஷயங்களைத் தொகுக்கும் விற்பனையும் ஆராய்ச்சியும் செய்யும் ஓர் இணையதள நிறுவனம்.

இவர்கள், உண்மையில் சின்னதாக எழுதப்படும் கட்டுரைகளைவிட பெரிதாக, ஆழமான தரவுகளுடன் எழுதப்படும் நீண்ட கட்டுரைகளே அதிகமாக நெட்டிசன்களால் ஷேர் செய்யப்படுகிறது என்பதை, லட்சக்கணக்கான கட்டுரைகளை ஆய்வுசெய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். 1,000 வார்த்தைகளில் எழுதப்படும் கட்டுரையைவிட 10 ஆயிரம் வார்த்தைகளில் எழுதப்படும் கட்டுரையே, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக ஷேர் செய்யபடுகிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறார்கள்.
அதுபோலவே ஷேரிங்கில் பயமுறுத்தும் கட்டுரைகள் 25 சதவிகிதம், நகைச்சுவைக் கட்டுரைகள் 17 சதவிகிதம் என்றும் இன்ஃபோகிராபிக்ஸ் எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், கோபமான கட்டுரைகள் வெறும்
ஆறு சதவிகிதம்தானாம். இது எதற்கு எடுத்தாலும் கோபத்தில் பொங்கல்வைக்கும் நமது

ஃபேஸ்புக் போராளிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விஷயம்தான்!
''மாம்பழம் டேஸ்ட்டா இல்லை'' என்றாள் மனைவி.
''காய்த்த மாங்காய் 'கார்ஃபைடு’ கல்லடி படும்...'' என்றான் கார்ப்பரேட் சித்தன்!