
சந்தோஷ் நாராயணன்
Frogetarian
கி.பி. 3,000-ல் இருந்து கால இயந்திரத்தில் ஏறி, 2015-ம் ஆண்டுக்கு வந்திருக்கிறான் அந்த மனிதன். அவன் இடுப்புக்குக் கீழே தவளையின் உடலைக்கொண்டிருந்தான்.
அவனைப் போலவே தவளை உடல்கொண்ட, அவன் காலத்தின் சகமனிதர்களின் பிரதிநிதியாக இப்போது இங்கே வந்திருக்கிறான். அந்தப் பெரிய வீட்டின் பின் பக்கமாகச் சென்று சாலையில் இருந்து, தன் பச்சைக் கால்களால் ஒரே தாவலில் தாவி மாடி மீது குதித்தான்.

அறைக்குள் நுழைந்தபோது, வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் இவனைக் கண்டு பீதியில் அலற முற்பட்டபோது அவன் கேட்டான்... ''நீதான் தவளையின் மரபணு கலந்த தக்காளிக்கு, அனுமதி கொடுத்த அமைச்சரா?'
பீதியுடன், 'ஆம்’ என தலையை ஆட்டினார் அமைச்சர். ஆப்பிரிக்கக் கருந்தவளையின் கொடும் விஷம்கொண்ட நாக்கைக் காற்றில் சுழற்றி, அவன் பெரும்கோபத்துடன் அமைச்சர் கழுத்தை நோக்கிக் குனிந்தான்!

அசிங்கத்தின் கலை!
சிற்பங்களும் ஓவியங்களும் மனிதர்களின் அழகுணர்ச்சியைப் பிரதிபலிக்கும் கலை என்பதை, நவீனக் கலைஞர்கள் உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அழகு மட்டும் அல்ல, அழகின்மையும் கலைதான் என்பது அவர்கள் தரப்பு. டச் நாட்டு சிற்பக் கலைஞர் ரோசா வெர்லூப், அதில் ஒருவர்.
நைலான் ஸ்டாக்கிங்ஸ் என்பது, ஐரோப்பியப் பெண்கள் தங்களின் தோற்றத்தை மேலும் அழகாக்கப் பயன்படுத்தும் காலுறை. இன்று உலகம் முழுக்கப் பிரபலமாக இருக்கும் அந்தக் காலுறைகளைக்கொண்டு, வெர்லூப் செய்யும் அழகு இல்லாத சிற்பங்கள், பார்வையாளர்களைக் கொஞ்சம் திடுக்கிடவே வைக்கின்றன.

ஸ்டாக்கிங்ஸை மடித்து, பின்களால் குத்தி இணைத்து, போகிறபோக்கில் அதுவாகவே ஓர் உருவம் ஆகும் வரை வேலைசெய்கிறார். 'இதில் என் வேலை ஸ்டாக்கிங்ஸை இணைப்பது மட்டுமே. மற்றபடி அந்தச் சிற்பங்களே தங்கள் தோற்றத்தைத் தானாக அடைகின்றன’ என்கிறார்!
'இந்தச் சிற்பங்கள் முழுமை அடையாத மனித உருவங்களாக இருப்பதாக, பார்ப்பவர்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், என் பார்வையில் அவை முழுமையான சிற்பங்களே. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மனித அவஸ்தைகளையே நான் படைப்பாக மாற்றுகிறேன்’ எனச் சொல்லும் வெர்லூப் கூடவே, 'ஒருவகையான மக்கள் இந்தச் சிற்பங்களை வெறுக்கும்போது, இன்னொரு வகையினர் இதை விரும்புகிறார்கள். இந்தச் சிற்பங்களைத் தொட்டுப்பார்க்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அது புறக்கணிக்கப்பட்ட மனித மனதின் ஆழத்தில் எங்கோ ஓர் இடத்தில் தொடுவதுபோலத்தான் அல்லவா?!’ என்கிறார்.

அழகுக்கும் அழகின்மைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் என, நம்மை தத்துவம் பேசவைத்துவிடுவார்போல!
வார்த்தைகள்
ஒரே வார்த்தை... ஆனால், அது வரும் இடங்களைப் பொறுத்து உணர்ச்சி எப்படி மாறுகிறது என்பதை ஒரு (அல்லது இரு) அதிவேகக் குறுங்கதையாக எழுதிப்பார்த்தேன்.
''ரமேஷூக்கு போனைப் போடு'' என்றார் அண்ணாச்சி.
ஓர் அடியாள், ரமேஷை அவசரமாக போனில் அழைத்தான். 'டேய்... ஆள் அனுப்பிக் கூப்பிட்டா, நீ 'வர மாட்டேன்’னு சொல்லிட்டியாமே? அதான் நானே இப்போ நேர்ல வர்றேன்.'
எதிரில் ரமேஷ் சொன்னான், 'நான் இப்போ உன்னைப் பார்க்க விரும்பல.'

'உன்னை இப்பவே பார்க்கணும்போல இருக்குடா செல்லம்மா' என்றான் கண்ணன்.
சின்ன ஊடல். இரண்டு நாட்களாக அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். இப்போது இவனாக இறங்கிப்போகத் தீர்மானித்துவிட்டான்.
எதிர்முனையில் சந்தியா சொன்னாள், 'நான் இப்போ உன்னைப் பார்க்க விரும்பல.'



சரேலென பிரேக் பிடித்து வண்டி நிற்கவும், அண்ணாச்சி ஆவேசமாக இறங்கிக் கேட்டார். 'மேலதானே ரமேஷ் இருப்பான்?' 'ஆமாம்’ என ஓர் அடியாள் தலையாட்டவும், அண்ணாச்சி அவசரமாக மாடிப்படிகளில் தடதடத்து ஏறினார். அடியாட்களும் அதே தடதடப்புடன் ஏறினார்கள். கதவு மூடியிருந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு கண்ணன் கேட்டை திறந்தான். மேல் போர்ஷனில்தான் சந்தியா இருக்கிறாள். அவள் அறைத்தோழி இந்நேரம் ஆபீஸ் கிளம்பியிருப்பாள். மாடிப்படிகளில் மெள்ள ஏறிப்போய்ப் பார்த்தான். கதவு மூடியிருந்தது.

''டேய் ரமேஷ்... கதவைத் திறடா. மவனே..!' - அண்ணாச்சிக்குப் படபடப்பு ஏறியிருந்தது. ரமேஷ் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டுக் கதவைத் திறந்தான்.
'என்ன இப்ப... மிரட்டுறியா? எனக்கு சுந்தரம் அண்ணாச்சி இருக்கார். நான் உனக்குப் பயப்பட மாட்டேன்' என்றான்.
அண்ணாச்சிக்குக் கோபம் தலைக்கு ஏறியது. 'என் சோத்தைத் தின்னுட்டு இப்போ சுந்தரம்கிட்ட சேர்ந்ததும், எனக்கே துரோகம் பண்ணப் பார்க்கிற இல்ல?' - அண்ணாச்சிக்கு மூச்சு வாங்கியது.
'உன்னை சும்மா விடப்போறது இல்லடா...'

''சந்தியா... கதவைத் திறம்மா...' - ஜன்னல் வழியாகப் பார்த்த சந்தியா, அதே கோபத்துடன் கதவைத் திறந்தாள். முகம் 'உம்’ என இருந்தது. ''நான் பண்ணினது தப்புதான். மன்னிச்சிடு... இனிமே இப்படிப் பண்ண மாட்டேன்' என, அவள் கையைப் பிடித்தான். அவள் திமிறலுடன் கைகளை விலக்கிக்கொண்டு நடந்தாள். இப்படித்தான் முதலில் முரண்டு பிடிப்பாள். சட்டென அவள் முன்னால் சற்று தூரத்தில் போய் நின்றுகொண்டு, கண்ணன் சொன்னான்...
'உன்னை சும்மாவிடப்போறது இல்லடா...'

ரமேஷூக்குக் கோபம் தலைக்கு ஏறியது. திமிராக அண்ணாச்சியின் முகத்தை உற்றுப்பார்த்துவிட்டுச் சொன்னான்...
'போடா நாயே!'

சந்தியாவின் முகத்தை தன் கைகளால் ஏந்திப் பிடித்த கண்ணன், 'ப்ளீஸ் என்னை மன்னிச்சிரும்மா' என்றான். அவள் வழக்கமான செல்லக் கோபத்துடன் சொன்னாள்...
'போடா நாயே!'

சடாரென அரிவாளை எடுத்து ரமேஷின் கழுத்தில் போட்டார் அண்ணாச்சி. ஒரு கணம் கழுத்து சில்லென்றாவதை அவன் உணர்ந்தான். மறுகணம் அப்படியே சாய்ந்தான்.

சந்தியாவைச் சட்டென அணைத்து முத்தமிட்டான் கண்ணன். கோபம் கலைந்து சந்தியா கைகளை கண்ணனின் கழுத்தில் சுற்றிச் சிரித்தாள். ஒரு கணம் கழுத்து சில்லென்றாவதை அவன் உணர்ந்தான். மறுகணம் அப்படியே சாய்ந்தான்.
'ஃபேஸ்புக்ல சாதி சங்கம் ஆரம்பிக்கிறானுங்க' என்றான் நண்பன்.

'மார்க் ஸ¨க்கர்பெர்க், ஃபேஸ்புக்கால் உலகத்தையே இணைக்கிறான். நீங்க உள்ளூரையே பிரிக்கிறீங்களேடா?!' என்றான் கார்ப்பரேட் சித்தன்!