Published:Updated:

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

Published:Updated:

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

சிறுகதை வரலாற்றின் முதல் மூவரில் ஒருவர் மாதவய்யா!- கதைசொல்லிகளின் கதை பாகம் 2

"கதைசொல்லிகளின் கதை" - முந்தைய அத்தியாயம்

 
  1. வ.வே.சு.ஐயர்... தமிழின் முதல் சிறுகதை சொல்லி!

``திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து செங்கோட்டை - கொல்லம் வழியாக மலையாளம் செல்லும் பிராமணப் பிரயாணிகளுக்கு, ஆரியன் காவில் மலையாளத்து மகாராசா ஏற்படுத்தியிருக்கும் `ஊட்டுப்புரை' எனும் கோயில், வழித்தங்கலுக்கு வசதியான இடம். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் `சாஸ்தா பிரீதி' என்னும் விசேஷச் சடங்குக்கும் விருந்துக்கும், பிராமணர்கள் திரளாகக் கூடுவதுண்டு. பிரக்கியாதி பெற்ற சாஸ்தாவின் தரிசன மகிமையும், அன்று நிகழும் விருந்துச் சாப்பாட்டின் சிறப்பும் யாவரும் அறிந்தனவே.

செல்வச்சுருக்கமும் சீரணசக்திப் பெருக்கமும் ஒருங்கே வாய்ந்து, ஆங்காங்கே உள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து, அந்தந்த இடங்களில் ஏற்பட்டிருக்கும் ஊட்டுப்புரை, சத்திரம், கோயில்களில் பணச்செலவின்றி வயிறு புடைக்க உண்டுகளித்து, தாம் கண்ட பற்பல தெய்வங்களின் ஏற்றத்தாழ்வையும் வரசக்திகளையும் பற்றிக் கதை பேசியும் வாதாடியும் ஒருநாள்போல பல நாள்களையும் ஆண்டுகளையும் கழிக்கும் பிராமணோத்தம கோஷ்டிகள் எல்லாம், கிழக்கே உதிக்கும் ஞாயிறு மேற்கே உதிக்கணும், ஆரியன் காவு சாஸ்தா பிரீதியன்று, அங்கு கூடாதொழியார். இத்தகைய கோயில் பெருச்சாளிகளின் யதார்த்தமான தெய்வபக்தியும் விசுவாசமும் ஆழ்ந்து பரிசோதிக்கத் தக்கதன்று. `பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.'

- அ.மாதவய்யாவின் `சாஸ்தா பிரீதி' என்கிற கதையிலிருந்து...

சாதி எதிர்ப்புப் போரின் முக்கியமான ஓர் அம்சமாக, சொந்த சாதிக்குத் துரோகம் செய்வது பற்றி இன்று நாம் உரையாடல் நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், தான் பிறந்த பார்ப்பன சமூகத்தின் போலிகளை நூற்றாண்டுக்கு முன்னரே, இன்ன மட்டும் என்றில்லாமல் தன் கதைகளில் பகடி செய்த அ.மாதவய்யா, `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் மூவர்' என அழைக்கப்படுவோரில் (வ.வே.சு.அய்யர், அ.மாதவய்யா, பாரதி) முக்கியமானவர். இந்த மூவருமே 1926-ம் ஆண்டுக்கு முன்பே மறைந்துவிட்டார்கள். ஆகவே, 1925 வரையிலான காலகட்டத்தை `தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் கட்டம்' எனக் குறிப்பிடலாம்

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பெரும்புலமை பெற்றவரான அ.மாதவய்யா, இருமொழிகளிலும் நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும், நாடகங்களும், இசைப்பாடல்களும் எழுதியவர். இங்கு, அவரது சிறுகதைகளைப் பற்றியும் அவரது வாழ்வைப் பற்றியும் படிப்போம்.

1872-ம் ஆண்டு ஆகஸ்ட்16-ம் நாள் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் (இன்று தூத்துக்குடி மாவட்டம்) ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள பெருங்குளம் கிராமத்தில் அப்பாவையன் என்கிற அனந்தநாராயண ஐயருக்கும் மூனாட்சியம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் அ.மாதவய்யா. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் மெட்ரிக்குலேஷன் படித்து, சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ படித்து, உப்பு-சுங்க இலாகாவில் அரசு அதிகாரியாகச் சேர்ந்தார். இடையில் அவரது 15-வது வயதில் அந்தக் கால வழக்கப்படி 11 வயதேயான மீனாட்சியை, மணம் முடித்தார்.

தன்னுடைய 20-வது வயதில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினார். `விவேக சிந்தாமணி' இதழில் மதிப்புரைகளும் தொடர்கதையும் தொடர்ந்து எழுதினார். விதவா மறுமணத்தை வலியுறுத்தும் `சாவித்திரி சரித்திரம்' என்ற நாவலின் சில இயல்கள் `விவேக சிந்தாமணி'யில் வந்தன. பிறகு இந்த நாவல் முழுமைபெற்று `முத்துமீனாட்சி' என்ற பெயரில் 1903-ம் ஆண்டில் வெளியானது.

தொடர்ந்து பல நாவல்களும் சிறுகதைகளும் ஆங்கிலத்திலும் பிறகு அவற்றைத் தமிழில் அவரே மொழிபெயர்த்தும் வெளியிட்டார். `பத்மாவதி சரித்திரம்', `முத்துமீனாட்சி', `விஜய மார்த்தாண்டம்', `தில்லை கோவிந்தன்', `சத்தியானந்தன்', `கிளாரிந்தா' போன்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்தார். `குசிகர் குட்டிக்கதைகள்' என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டார்.

சாதி எதிர்ப்பு, இந்து மதச் சீர்கேடுகளைச் சாடுதல், பெண் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், விதவா விவாகம் என அன்றைய நாளில் மிக முற்போக்கான படைப்புகளை முன்வைத்தார். ஆகவே, `கமலாம்பாள் சரித்திரம்' என்ற ஒரு நாவலை எழுதிய ராஜம் அய்யரைக் கொண்டாடியதுபோல இவரைச் சாதிய சனாதனிகள் கொண்டாடவில்லை; புறக்கணித்தனர். ராஜம் அய்யரைக் கொண்டாடக் காரணம், `கமலாம்பாள் சரித்திரம்' நாவலின் பிற்பகுதி முழுக்க வேத விசாரத்தில் இறங்கியதுதான்.

கடுமையான சமூக விமர்சனங்களை முன்வைத்த கதைகள் தந்த மாதவய்யாவைப் பற்றி கண்டனம் தெரிவித்த `தி இந்து' நாளிதழ், ஒரே வருடத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டு, தானே முன்வந்து தன் நாளிதழில் கதைகளை ஆங்கிலத்தில் எழுத அவரை வேண்டிக்கொண்டது.

தான் வாழும் காலச்சூழலை, தன் படைப்புகள் வழியே விமர்சனத்துக்கு உட்படுத்திய எழுத்தாளர் அ.மாதவய்யா. அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிய காலம் 1890-1925க்கு உட்பட்ட 35 ஆண்டுகள். இந்தக் காலம், தமிழ்ச் சமுதாயத்தில் ஆங்கில ஆட்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலம். பொருளாதாரத் தளத்தில் மரபாக வந்த வேளாண்மை சார்ந்த அரசியல் பொருளாதாரமும், கைவினைத் தொழில்களும் வணிகமும், வழக்கிலிருந்த பழைய தொழில்நுட்பங்களும் பெருத்த சவாலைச் சந்தித்துக்கொண்டிருந்தன.

தொழிற்புரட்சியின் விளைவாக இங்கிலாந்தில் எழுந்து நின்ற நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப்பொருள்களை உற்பத்திசெய்யும் நிலப்பரப்பாக இந்தியா ஆக்கப்பட்டிருந்தது. லங்காஷியரில் உற்பத்தியாகும் பண்டங்களுக்கான சந்தையாக இந்தியா ஆகிக்கொண்டிருந்தது. உற்பத்தியாகும் பொருள்களை வாங்கும் நுகர்வோராக இந்தியர்களை மாற்ற பண்பாட்டுத்தளத்தில் அதிரடியான தாக்குதல்களை ஆங்கிலேயர் தொடுத்துக்கொண்டிருந்த காலம். பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பித்த இந்து மரபுக்கு 1833-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற கொள்கைப் பிரகடனம் சவுக்கடியாக அமைந்தது. பிறப்பால் உயர்ந்த சாதியினர் பழைய சட்டங்களின்படி மிகக்குறைந்த தண்டனை பெற்றுத் தப்பிக்கொண்டிருந்தனர். அந்த நடைமுறைக்கு இந்தப் பிரகடனம் ஆப்பு வைத்தது.

அ.மாதவய்யா உள்ளிட்ட அன்றைய உயர்சாதி அறிவுஜீவிகளின் முற்போக்கான பிரிவினர் இதை வரவேற்றனர். அ.மாதவய்யாவின் பல கதைகளும் நாவல்களும் இதைப் பாடுபொருளாக்கின. `தந்தையும் மகனும்' என்ற சிறுகதையில், தன் தந்தை வசதி படைத்தவராக இருந்தும் `சாணான்' என்ற சாதியிப்பிறப்பின் காரணமாக அக்கிரகாரத் தெருவில் நடப்பதற்கு, பார்ப்பனர்கள் தடை விதித்ததைக் கண்டு மனம் கொதித்த அந்தச் சாணாரின் மகன் ஆங்கிலக் கல்வி கற்று கிறிஸ்தவனாக மதம் மாறி, தாசில்தார் பதவி ஏற்று, அதே அக்கிரகாரத் தெருவில் குதிரை ஏறி பவனி வரும் காட்சியை அந்தக் கதையில் மாதவய்யா மிகுந்த குதூகலத்தோடு வர்ணிக்கிறார்.

இதேபோல, `குதிரைக்காரக் குப்பன்' என்கிற சிறுகதையில் கிறித்துவத்துக்கு மதம் மாறி வெள்ளைக்காரத் துரையிடம் குதிரைக்காரனாக வேலைசெய்த பறையரிடம் பார்ப்பனர்களின் ஜம்பம் ஒன்றும் பலிக்காமல்போவதை மாதவய்யா பலத்த கிண்டலும் கேலியுமாக விவரிக்கிறார்.

`தில்லை கோவிந்தன்' என்ற ஆங்கில நாவலில் வரும் தில்லை சாம்பவசிவ தீட்சிதர் என்பவர் கொலைகாரன் என்றாலும்கூட பார்ப்பனன் என்பதற்காகவே மதிப்பவர்; பிற சாதியர்களைச் சாதியின் பெயரால் அவமதிப்பவர். இவருக்கு எதிரில் வந்த சாணார் இளைஞர் ஒருவர் சாதி வழக்கப்படி ஒதுங்கிப் போகாததால், அவருடைய காலில் முள் தைத்துவிடுகிறது. அதற்காக சில மறவர்களைக்கொண்டு அந்தச் சாணார் இளைஞரை நையப்புடைக்கிறார். ஆனால், அந்தச் சாணார் இளைஞரோ கிறித்துவராதலால் பாதிரியாரின் துணையுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, பார்ப்பன நீதிபதியாலேயே தீட்சிதருக்கு அபராதம் வாங்கித் தருகிறார். இப்படி, தன் பல படைப்புகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற புதிய ஏற்பாட்டை உற்சாகத்துடன் கொண்டாடும் ஜனநாயகவாதியாக மாதவய்யா வாழ்ந்திருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலத்தில் காந்தியுகம் தொடங்கியிருந்தது. பெரியார், அம்பேத்கர் போல சமூக விடுதலையை முன்னெடுத்த பெரியவர்களும் சகபயணிகளாக வாழ்ந்துகொண்டிருந்தனர். அரசியல் விடுதலையா, சமூக அக விடுதலையா என்ற கேள்வி முன்னுக்கு வந்துகொண்டிருந்தது. அ.மாதவய்யா, அக விடுதலைக்காகத் தன் வாழ்வைக் கழிக்க விரும்பினார்.

``சம்பூர்ண சுயராஜ்யம், அரசியல்ரீதியில் பெறுவதல்ல... வறுமை, அறியாமை நீக்கித் தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலை பெற்றுச் சமமாகிறபோதுதான் அந்தச் சுயராஜ்யம் கிடைக்கும்” என்று தன் பார்வையை அன்றே தெளிவாக முன்வைத்தவர் மாதவய்யா. தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிய அவரது கருத்தும் மனங்கொள்ளத்தக்க வகையில் தெளிவானது.

`ஆரியர், திராவிடர்களுக்கு முன்பே இந்த நாட்டுக்கு உரியவர்கள். இவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்” எனப் பொட்டில் அடித்தவர். `தீண்டத்தகாதாரை மனிதரிலும் கீழாய் நடத்திக்கொண்டு நாம் (பார்ப்பன - வேளாளர்), நம்மை ஆள்பவர்களிடமிருந்து (ஆங்கிலேயர்) சம உரிமை கேட்பது வெட்கத்துக்குரியது' என்று எழுதினார்.

நல்ல உத்தியோகத்தை, நல்ல சம்பளத்தை தன் 50-வது வயதில் உதறித் தள்ளிவிட்டு அச்சகம் ஒன்றைத் தொடக்கி `பஞ்சாமிர்தம்' என்ற பத்திரிகை வழியே சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கினார். நாட்டு விடுதலைக்கு முன் நிபந்தனை, `சமூக விடுதலை', அந்தச் சமூக விடுதலைக்கு முன் நிபந்தனை, `தனி நபர்களின் விடுதலை' என்ற கொள்கையுடையவராக மாதவய்யா இருந்தார். சூத்திர சாதியரிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்த தந்தை பெரியார்  வாழ்நாள் முழுவதும் பாடுபட்டதைப்போல, தனிப்பட்ட முறையில் மாதவய்யா தான் பிறந்த பார்ப்பன சமூகத்தாரிடையே கருத்துப் போரை நடத்தினார்.

ஆங்கில ஆட்சி நிறைவேற்றிய பல சட்டங்கள் - சதி வழக்கத் தடைச்சட்டம் (1829), கட்டாய அடிமைமுறைத் தடைச்சட்டம் (1843), விதவை மறுமணச் சட்டம் (1856), குழந்தை மணத் தடைச்சட்டம் (1891,1921) போன்றவை உடனடியாக நடைமுறைக்கு வந்ததும் ஆங்கிலக் கல்வி பரவலாகி சமூகத்தில் உருவான சமத்துவச் சிந்தனைகளும் சாதி வேற்றுமைகளை ஏற்காத கிறித்துவ மதபோதனைகளும் இறுகிக்கிடந்த இந்து சாதி சமய அமைப்பை பல முனைகளிலிருந்தும் தாக்கிக்கொண்டிருந்த காலம் அது. இந்து சமூகத்தைச் சீர்திருத்தி கௌரவமான முகத்தை அதற்கு வழங்கிட, பல அறிவாளிகள் முயன்றனர். அவர்களில் ஒருவர்தான் மாதவய்யா. முதலில் திருந்தவேண்டியது பார்ப்பன சாதிதான் என்று அவர் தீர்க்கமாக நம்பினார். `நம்முடைய நாகரிகங்களுக்கெல்லாம் மூலஸ்தானமாகிய பிராமணரது ஆச்சார அனுஷ்டானங்களை வேண்டியவாறு சீர்திருத்துவதே நமது முதற்கடமை' என்று எழுதினார்.

மாதவய்யாவின் படைப்புலகை ஆய்வுசெய்த தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரான ராஜ் கௌதமன் தன்னுடைய ஆய்வில் `மாதவய்யாவைப் பொறுத்தவரை, மனிதனை அளவிடுவதற்கு சாதிப் பிறப்பைவிட, தனிமனிதப் பண்புதான் அளவுகோலாக இருந்தது. குற்றங்கள் மிகுந்த ஒருவனை, அவன் பார்ப்பனன் என்பதற்காக ஏற்றுக்கொள்ளும் பார்ப்பனர்கள், நற்குணமும் நல்லொழுக்கமும் நிறைந்த பார்ப்பனர் அல்லாத உத்தமமான ஒரு மனிதரை, தங்களைவிடத் தாழ்ந்தவர் என சாதியின் பெயரால் ஒதுக்குவதை மாதவய்யா ஏற்கவில்லை. மொத்தத்தில் வாக்குண்மை, மனச்சுத்தி, மெய்யறி ஒழுக்கம் ஆகியவற்றை மதிக்காமல் வெளிவேஷத்தையும் பகட்டையும் பணத்தையும் பெரிதாகப் போற்றும் வாழ்க்கைப் பார்வையை மாதவய்யா கடுமையாக விமர்சனம் செய்தார்' என்று குறிப்பிடுகிறார்.

பெரிய ஒழுக்கமும் தர்மமும் வேதவியாக்கியானமும் பேசும் பிராமணர்களுக்குள் பெண் பித்தர்களும் மனிதாபிமானவற்றவர்களும் இருப்பதை, தன் பல கதைகளிலும் நாவல்களிலும் கதாபாத்திராங்களாக்கிக் கைகொட்டிச் சிரித்தவர் மாதவய்யா. `பஞ்சாமிர்தம்' பத்திரிகையில் தன்னுடைய அரசியல் கருத்துகளையும் தலையங்கத்திலும் கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார்.

அவருடைய சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை `ஏணியேற்ற நிலையம்' என்னும் கதை. சேரன்மாதேவியில் வ.வே.சு ஐயர் ஆரம்பித்த பிரசித்திபெற்ற குருகுல அனுபவத்திலிருந்து கிளைத்தெழுந்த புனைவாக அது அமைந்துள்ளது. அதில் சமபந்தி போஜனம் இல்லாமல் பிராமணப் பிள்ளைகளுக்கு மட்டும் தனி பந்தி வைத்ததால், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையே ஏற்பட்டதை நாம் அறிவோம். அ.மாதவய்யா, தனது இந்த `ஏணியேற்ற நிலையம்' கதையில் உண்மையிலேயே எல்லா சாதிப் பிள்ளைகளுக்கும் ஒரே சமையல், ஒரே சாப்பாடு என்கிற லட்சியத்தோடு ராமலிங்கம் என்கிற தேசபக்தர் ஏணியேற்ற நிலையத்தை ஆரம்பிக்கிறார். இதை இப்போது வாசிக்கும்போது கலைஞரின் சமத்துவபுரம் திட்டத்தை இது ஞாபகப்படுத்துகிறது. கதையை அவர் சொல்லிச் செல்லும் பாங்கில் அன்றைய காங்கிரஸின் சீர்திருத்தத் திட்டங்களையும் வெற்று முழக்கங்களையும் போலிமையையும் பகடிசெய்வதைக் காணலாம்.

ஜாமீன் கொடுக்க மறுத்து, நான்காவது முறை ஜெயிலிலிருந்து திரும்பி வெற்றி மாலைகள் அணிந்து, சொற்பொழிவுகள் சொரிந்து, ஒருவாறு ஆடிப்பாடி அமர்ந்த பிறகு, கதரையும் தீண்டாமையையும் தவிர மற்ற தேசிய பரவர்த்திகள் எல்லாம் தீண்டுவாரற்றுக் கிடப்பதை ராமலிங்கர் உணர்ந்தார். என் செய்வதென்று தெரியாமல் சில நாள் பயனின்றிக் கழிந்த பிறகு, சன்னமான நூலைத் தன்னால் நூற்க முடியாது என்பதை அனுபவத்தில் அறிந்தவராதலின், சாதி மத பேதங்களை வேரோடு களைந்து, தமிழர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்தும் கடமையைக் கைக்கொள்ள நினைத்தார்.

தான் செய்தற்குரிய தேசத்தொண்டு இன்னதென்று துணிந்த பிறகு, தன்னிடம் இருந்த சிறு பொருளையும் பிறர் உதவியைக்கொண்டும் ராமலிங்கர் `ஏணியேற்ற நிலைய'த்தை ஸ்தாபித்தார். அதன் திறப்பு விழா கொண்டாட்டத்தன்று, ஜனநாயகர்கள் பலர் விஜயம் செய்து, சிற்றுண்டி அருந்தி, பிரசங்கமாரி பொழிந்தனர். ராமலிங்கர் சாதி ஏணியிலே கீழ்ப்படிகளில் இருப்பவர்களை மேலேற்றிவிடும் தன்மையினால், அந்த நிலையத்துக்குத் தான் சூட்டிய விசித்திர நாமத்தைப் பற்றி அரிய சொற்பொழிவு ஒன்றை சொரிந்தார்.

ராமலிங்கர் அந்த நிலையத்தை நடத்திவந்த விதமும் விந்தையானது. நடுநிலை உத்தியை அனுசரித்து `மேல்’சாதியரைச் சற்றுக் கீழே இறக்கி, `கீழ்’சாதியரை மேலே உயர்த்திவிட்டால், எல்லோரும் ஒரு பொது மேடையில் சாதிபேதமின்றி வாழலாம் என எண்ணினார். முதலில் மாமிசம் உண்ணும் விஷயம் பெருந்தடையாக இருந்தது. இப்போது ஊன் உண்ணும் சாதியர்கள், `அதை நீக்கிவிட்டால் இந்தியாவுக்குள்ள அரைகுறையான சரீர பலமும் அறவே ஒழிந்துபோகும்' என்று சிலர் அஞ்சினர். ஊன் உண்பது கடவுள் ஆக்கினைப்படி ஒழுகுவதே என்று சிலர் வாதாடினர். முடிவில் தன் ஆசிரமம் சம்பந்தப்பட்ட வரையில் ராமலிங்கர் புலாலை மறுத்துவிட்டார்.

இப்படி ராமலிங்கர் ஆரம்பித்த `ஏணியேற்ற நிலைய'த்தில் பிராமணர், க்ஷத்திரியர், முதலியார், பிள்ளைமார் தலா இரண்டு பேரும், முக்குலத்தோர் மூன்று பேரும், தீண்டா சாதியர் நான்கு பேரும் சேர்ந்திருந்தனர். முதலில் ஒரு பிராமணச் சமையல்காரரை நியமிக்கிறார். எல்லோரும் சாப்பிடுகிறார்கள். பிறகு அது நியாயமில்லை என, ஒரு சைவ வேளாளத் தவசிப்பிள்ளையைத் திட்டம் செய்கிறார். அந்தச் சமையல்காரர் தான் சமைத்ததைத் தானே சாப்பிடுவதில்லை. `மேல்சாதி, கீழ் சாதியர் எல்லாம் சாப்பிட்ட மிச்சத்தை தான் சாப்பிடுவதா?' என்கிற உணர்வில் தவசிப்பிள்ளை சாப்பிட, தன் வீட்டுக்குப் போய்விடுவார்.

அந்த நிலையத்துக்கு சாட்சாத் காந்தி மகானே நேரில் வந்து ராமலிங்கரைப் புகழ்ந்து பேசுகிறார். அன்று இரவு ராமலிங்கருக்குப் புளகாங்கிதத்தில் உறக்கம் வரவில்லை. இரண்டொரு முஸ்லிம்கள், கிறித்தவர்களையும் நிலையத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் திட்டம் தீட்டுகிறார். ஆனால், மறுநாளே பிரச்னை வெடித்துவிடுகிறது. நிலையத்தில் அவரவர் சாப்பிட்ட பாத்திரத்தை அவரவர் கழுவ வேண்டும் என்பது விதி.

பழனி முதலிக்குக் காய்ச்சல். ஆகவே அவர் கஞ்சி குடித்த பாத்திரத்தை சமையல்காரரைக் கழுவி வைக்கச் சொல்கிறார். `நான் வேளாளப்பிள்ளை என்பது தெரியாதோ? என்ன வாய்க்கொழுப்பு இருந்தால், என்னைக் கழுவச் சொல்லுவாய்?' என்று பாய்ந்துவிடுகிறார். ராமலிங்கம் தலையிட்டபோது ``பள்ளனுக்கும் பறையனுக்கும் சாதிகெட்ட பயல்களுக்கும் பொங்கிப் போடுகிற இந்தப் பொல்லாத வேலை வேண்டாம்'' என்று வேலையைவிட்டுப் போய்விடுகிறார். பிறகு இரண்டு பறைச் சிறுவர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு ராமலிங்கர் தானே களத்தில் இறங்கிச் சமைக்கிறார். ஆனால், நிலையத்திலிருந்த 14 பேரில் 9 பேர் அதைச் சாப்பிட மறுத்து, சத்தியாக்கிரகம் இருக்கின்றனர். மாதவய்யா, கதையை முடிக்கும் கடைசிப் பத்தி பகடியும் சோகமும் கவிந்தது.

``ஏணியேற்ற நிலைய'மாகச் சில மாதங்களுக்கு இயங்கிய வீடு, இப்போது ஒரு கடையாகி, பழைய கோணிச்சாக்குகளும், கெரோசின் டின்களும், பீப்பாய் பிதிலிகளும் அதில் விற்கப்படுகின்றன. மூடபக்தி மூட்டைகள், சாதிக்கொழுப்புப் பிதிலிகள், வீண் டம்ப டின்கள், சத்திழந்த ஆசாரக் கழிசடைகள் போன்ற பழைய பண்டங்கள் மட்டும் அங்கே விலையாவதில்லை.”

பிதிலி - எண்ணெய் பாத்திரம்

1925-ம் ஆண்டில் `பஞ்சாமிர்தம்' இதழில் வந்த கதை இது. விடுதலைப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய அந்த நாளிலேயே அதற்குள் குடிகொண்டிருந்த போதாமைகளை விமர்சித்த இந்தக் கதை, பல வரலாற்று உண்மைகளையும், மனித மனதில் மாற்றம் வராமல் சும்மா அமைப்புகளை உருவாக்கினால் மட்டும் மாற்றம் வந்துவிடாது என்பதையும் சாப்ளின் பாணியில் கேலி பூசிய சோகத்துடன் சொல்கிறது.

ஜனநாயக எண்ணம்கொண்டவரான அ.மாதவய்யா, தமிழ்வழிக் கல்வியையும் ஆட்சியில் தமிழையும் வலியுறுத்துபவராக இருந்தார். மொழியும் ஜனநாயகமும் பிரிக்க முடியாதவை என்கிற புரிதல் அவருக்கு இருந்தது. தனித்தமிழ் மீதும் காதல் கொண்டிருந்தார். கலப்பில்லாத தனித்தமிழ் நடையில் சித்தார்த்தன் என்னும் நூலை (புத்தரின் வரலாறு) எழுதினார்.

1925-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் நாள் பிற்பகல் 3.40 மணி அளவில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில், `பி.ஏ பட்டப்படிப்பில் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்'' என ஆவேசமாகப் பேசிவிட்டு அமர்ந்தார். அடுத்த சில நிமிடத்தில் மூளையின் ரத்தநாளங்கள் வெடித்து உயிர் துறந்தார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஓர் ஆளுமையாக தமிழ் மண்ணில் தனித்தடத்தை பதித்தவர் அ.மாதவய்யா. நம் தமிழ்ச் சாதி, அவரை அப்போதும் கண்டுகொள்ளவில்லை; இப்போதும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு துன்பியல் நாடகத்தின் இறுதிக்காட்சிபோல, அவரது வாழ்வு முடிவுக்கு வந்தது.

- வாசிப்போம்