சினிமா
Published:Updated:

ஒரு பூனையின் கண்கள்

கவிதை: பழநிபாரதி, ஓவியம்: ஹாசிப்கான்

பாசி படர்ந்த

மழையீரச் சுவர் மீது

சூரியனை வேண்டும்

ஒரு பூனையின் கண்கள்

உன்னை

உற்றுக் கவனிக்கின்றன.

உன் வெயில் பரவும் நிலம் நோக்கி

அதன் ஈரச் சுவடுகள்

நெருங்கி வருகின்றன.

ஒரு குழந்தையைப்போல

அது என்னைத்

திரும்பிப் பார்த்துக்கொண்டே வந்தது

நீ கைகளில் அள்ளிக்கொண்டாய்.

ஒரு பூனையின் கண்கள்

அது உன் கழுத்தை

முகர்ந்தபோது

உன் வாசம்

ஒரு பூனைக்குட்டியாக

காற்றில் அலைந்தது.

அதன் மீசைமுடி

உன் மார்பைத் தீண்டியபோது

கண்மயங்கி ஒலித்த மியாவ்

ஒரு தீராத பாடலாகிவிட்டது!