பனிக்காலத்தில் 'பளிச்'னு மின்னலாம்..!
பனிக்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க ஆலோசனைகள் தருகிறார், தேனியைச் சேர்ந்த அரோமா தெரபிஸ்ட் துர்காதேவி...

‘‘சரும வறட்சிதான் பனிக்காலத்தின் பிரதான பிரச்னை. அதற்கான தீர்வுகளை வெளிப்பூச்சாக மட்டுமில்லாமல், உள் உணவுகளாகவும் பார்ப்போம்.
• பனியால் பிளவுபட்டிருக்கும் சருமத்தில், தக்காளிப் பழக்கூழுடன் தயிர் கலந்து தடவி, சிறிது நேரம் காயவிட்டுக் கழுவினால்... வறட்சி நீங்கும்.
• தினமும் 500 மில்லிகிராம் விட்டமின் `சி' சத்து, உடலில் சேர வேண்டும். பனிக்காலத்தில் இது மிகமுக்கியம். ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காயில் விட்டமின் `சி' சத்து உள்ளது.
• குறிப்பாக, குளிர் சீஸனில் கிடைக்கும் கமலா ஆரஞ்சைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மேனி பளபளக்கும். அதன் தோலைக் காயவைத்து பவுடராக்கி, தண்ணீரில் குழைத்து முகம், கை, கால்களில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
• பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து... முகம், கை, கால்களில் தேய்த்து, ஊறிய பிறகு குளித்தால், சருமம் பளபளப்பாகும்.
• பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம், கை, கால்களில் பூசி, சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால்... சருமம் மென்மையாகும்.
• மக்காச்சோள மாவுடன் தயிர் கலந்து தினமும் உடம்பில் தடவி காயவிட்டு, பின்னர் கழுவி வர... சருமம் மின்னுவது சர்வநிச்சயம்.
• இந்த சீஸனில் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவல்ல கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பைப்

பயன்படுத்தலாம், அல்லது சோப்பைத் தவிர்த்து பால், தயிர் போன்றவற்றை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.
• பனிக்காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் எடுத்துவிடும்.
• மிகவும் வறண்ட சருமம் உடையவர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக் குளித்து வரலாம்.
• சரும நோய்களைத் தவிர்க்க, மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
• பனிக்காலத்தில் வறண்ட சருமத்துக்கு ஏற்றதாக சிம்பிள் மேக்கப் செய்துகொள்வது நல்லது.
• ஒரு டம்ளர் வெந்நீரில் அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஓரிரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேனி மினுமினுப்பாவதோடு தேவையற்ற சதை குறைந்து உடம்பும் ‘சிக்’ ஆகும்.
• இந்த சீஸனில் பொதுவாக ஜீரணம் தாமதமாகும் என்பதால், கொழுப்புமிக்க உணவுகளைத் தவிர்க்கலாம். பால், பழங்கள், காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறி சூப், கோழி சூப், மிளகு ரசம் அருந்தலாம்.
• பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதும், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்துக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, வறண்ட சருமத்தினருக்கு இது மிக உகந்தது.’’
ச.மோகனப்பிரியா படம்:வீ.சக்தி அருணகிரி