Published:Updated:

மனசுக்குள் பனித்துளி

கவிதை: சேயோன் யாழ்வேந்தன்,

ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் 

கூட்டிவருவதைப்போல்

இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம்

கொண்டுவந்துவிட்டு

விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம்.

நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி

முழு வயலையும் வானத்தையும்

தலைகீழாகப் பிரதிபலிக்கிறது.

மனசுக்குள் பனித்துளி

அது கொஞ்சம் கொஞ்சமாக

கதிரின் வெம்மையில் ஆவியாகிறது.

மறுநாளும் அதே நெற்பயிரில்

அதேபோல் பனித்துளி

வானத்தையும் வயலையும் பிடித்துவைத்திருக்கிறது.

பருவத்தே பூத்துவிடுகிறது

மனசுக்குள்ளும் பனித்துளி

இழப்பின் சுவடின்றி

புத்தம் புதிதாக!