
‘ட்ரெண்ட்' பெட்டி!

தோனிடா!
‘கூல் கேப்டன்’ தோனியின் வாழ்க்கை வரலாறு தற்போது ‘எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகியுள்ளது. நீரஜ் பாண்டே இயக்கி, சுசந்த் சிங் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெயிலரை தோனி, ரசிகர்கள் முன்னிலையில் சமீபத்தில் வெளியிட்டார். இந்த ட்ரெயிலர் வெளியான அடுத்த நாளே, யூடியூப் தளத்தில் 33 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. #dhonitrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. செப்டம்பர் மாதத்தில் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எல்லாம் சரி. தோனிக்கு அம்மாவா பூமிகாவை நடிக்க வெச்செதெல்லாம் ஓவர் பாஸ்!

மகிழ்ச்சி!
ஐ.பி.எல். போட்டிகளில் சி.எஸ்.கே. அணி பங்கேற்க முடியாத வருத்தத்தில் இருந்த தமிழக மக்களை ஆறுதல்படுத்தும்விதமாக எட்டு அணிகள் கலந்துகொள்ளும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை தமிழக மக்களிடம் அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் வந்த ஹைடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வேஷ்டி, சட்டையோடு போய் அசத்தினார். தனது நெருக்கடியான பயணத்தின் இடைவெளியில் நெல்லைக்குச் சென்றபோது இருட்டுக்கடை அல்வாவை டேஸ்ட் பார்த்தவர், சென்னைக்கு வந்து ‘கபாலி’ படத்திற்குச் சென்றார். தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பயன்படுத்திய ‘#magizhchi’, ‘#OndraTONWeightDa’, ‘#TherikkaVidalama’, ‘#Semmaley’ போன்ற அனைத்து வார்த்தைகளும் நேஷனல் ட்ரெண்ட் ஆகின. மேத்யூ ஹைடன் இனி மாரிமுத்து ஹெய்டன்!

பொங்கியெழுந்த மக்கள்!
மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் மக்கள் நெருக்கடியும், காலதாமதமும் ரொம்பவே சகஜம். இந்நிலையில் கடந்த வாரத்தில் புறநகர் ரயில் வர 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதமானது. பொறுமையிழந்த மக்கள் கூட்டம் ரயில்வே தடங்களில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் சிறியதாய் ஆரம்பித்த இந்தப் போராட்டம், பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வகையில் வலுத்தது. ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பாபு காலதாமதம் இன்றி இனி ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்தார். #BadlapurAgitation என்ற பெயரில் ட்விட்டரிலும் இந்த விவகாரம் தேசிய ட்ரெண்டில் இடம்பிடித்தது. நம்மைவிடக் கோபக்காரங்களா இருக்காங்க!
உலக இளைஞர்கள் தினம்!
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களைக் கெளரவிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் இளைஞர் தினத்தைக் கொண்டாடி வருகிறது. இதனையொட்டி கடந்த வாரம் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமரில் இருந்து பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை #InternationalYouthDay டேக்கில் தெரிவித்தனர். அதே தினத்தில்தான் உலக யானைகள் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இரண்டுமே இப்போ பிச்சை எடுத்துதான் வாழ வேண்டியிருக்கு எனத் தங்களைத் தாங்களே கலாய்க்கவும் நெட்டிசன்ஸ் தவறவில்லை. இந்த நேர்மை எங்கயோ கொண்டு போகப்போகுது பாஸ்!
பாக்ஸ் ஆபீஸ் சுல்தான்!

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’, இந்தியாவிற்குள் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைப் படைக்கும் மூன்றாவது பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னால் அமீர்கான் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான ‘பிகே’ திரைப்படமும், கடந்த ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘பஜ்ராங்கி பாய்ஜான்’ திரைப்படமும் இந்தச் சாதனையைப் படைத்துள்ளன. சும்மாவே ஆடும் சல்லுபாய் ரசிகர்கள் #SALMANTheSULTANOf300crClub என்ற டேக்கில், காலில் சலங்கை கட்டிவிட்டதுபோல ஆடியதில் இந்திய ட்ரெண்ட் ஸ்தம்பித்தது. சபாஷ் சல்லு!
வதந்தி!
சோஷியல் மீடியாவில் யாராவது பிரபலத்தைப் பற்றிய வதந்தி வேகமாகப் பரவி, பின்னர் அந்தப் பிரபலமே மறுப்பு தெரிவிப்பது சகஜம். ஆனால் இந்த முறை வதந்தியில் ட்விட்டரே சிக்கியது. ஏதோ ஒரு விஷமி 2017-ம் ஆண்டோடு ட்விட்டர் தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக வதந்தியைக் கிளப்பிவிட, பதறிப்போன நெட்டிசன்ஸ் #savetwitter என்ற டேக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்களைக் குவித்தனர். பின்னர் அந்நிறுவனம் இது வெறும் வதந்தி எனத் தெரிவித்த பின்னர்தான் நெட்டிசன்ஸ் பெருமூச்சு விட்டனர். வயித்துல பாலை வார்த்தீங்க!

ஜெய்ஹிந்த்!
இந்தியாவின் 70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் தேசியக்கொடி ஏற்றினர். நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உலகத் தலைவர்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ட்விட்டரில் #IndependenceDayIndia என்ற டேக்கில் லட்சக்கணக்கான ட்வீட்கள் குவிந்ததை அடுத்து உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. வருடம் ஒருமுறை!

பறவையே எங்கு இருக்கிறாய்?
இருமுறை தேசிய விருதுகளும், பலமுறை பிலிம்ஃபேர் விருதுகளும் வென்றது மட்டுமில்லாமல் பல கோடிப்பேரின் இதயங்களை வென்றவரான பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் திடீர் மரணம் அனைவரையும் உலுக்கியது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் #ripnamuthukumar #நாமுத்துகுமார் போன்ற டேக்குகளில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தனர். அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உனது கதையை காலமும் சொல்லும்!
-ட்ரெண்டிங் பாண்டி