
சவரக்கத்திகள்!
`மின்சாரக் கனவு' பிரபு தேவாவா இருக்கட்டும், `பாஸ் என்கிற பாஸ்கரன்' சந்தானமா இருக்கட்டும், `குசேலன்' வடிவேலு கணக்கா பலூன பதம் பார்த்த அனுபவம் மட்டுமில்லாம எப்படியெல்லாம் கஸ்டமர சமாளிச்சுருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டோம்.

செந்தில், மதுரை: 1987ல பதினாறு வயசுல முடி வெட்ட கத்துக்கிட்டேன். சொந்த மாமாதான் கத்துக்குடுத்தாரு. ஆரம்பத்துல ஒருத்தருக்கு ஷேவிங் பண்ணப் போயி காதுகிட்ட கத்தி ஆழமா பதிஞ்சுருச்சு. மாமா அடி பொளந்திட்டாப்ள. இந்த மாதிரி அடி வாங்கிதான் கத்துக்கிட்டேன். இன்னைக்கு கூட காலையில ஒருத்தரு நாலு முடிய வச்சுக்கிட்டு பார்த்து வெட்டுடான்னு சொல்லுறாரு. ``என்ன அண்ணே இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லயான்னு” கேட்டா, `இருக்குற நாலு முடியாச்சும் பத்திரமா பாத்துக்கணும்ல' என்றார். ஆரம்ப காலத்துல பேபி ஷாலினி கட்டிங் ரொம்ப ஃபேமஸ். ஒரு குழந்தைக்கு ஷாலினி கட்டிங்னு வெட்டப்போயி அது வேற எதோ மாதிரி ஆயிடுச்சு. அப்புறம் அது டயானா கட்டிங்னு சொல்லி சமாளிச்சுட்டேன் பாஸ்.
இப்ப எல்லாம் அஞ்சான் சூர்யா கெட்டப், விராட் கோலி அண்டர் கட்னு வர்றாங்க பாஸ். பொண்ணுங்களுக்கு வேணும்னா நதியா தோடு, குஷ்புவோட ஜாக்பாட் ஜாக்கெட்னு ஏகப்பட்ட ஐடியா இருக்கு. பசங்க என்ன பண்ண முடியும் என்கிறார்.
வாஸ்தவம்தானே.

மாசிலாமணி, கோவை: வயசு அறுபத்தி நாலு ஆகுது. 1978ல இருந்து முடி வெட்டிக்கிட்டு இருக்கேன். பாகவதர் கட்டிங், மிலிட்டரி கட்டிங், ஸ்டெப் கட்டிங்குனு ஆரம்பிச்சு இப்போ சூர்யா கட்டிங்ல வந்து நிக்குறேன்.
அப்போதான் `டை'னு ஒண்ணு புதுசா விட்ருந்தாங்க. எவ்வளவு கலக்கணும் எவ்வளவு சேர்க்கணும், யாருக்கு அலர்ஜி, யாருக்கு அலர்ஜி இல்ல அதெல்லாம் ஒண்ணும் தெரியாது. விடிஞ்சா கல்யாணம், டை அடிச்சு விடுன்னு பித்த நரையோட ஒருத்தரு வந்தாப்ள. நானும் அடிச்சு விட்டேன். டை அடிச்ச அரை மணி நேரத்துல மூஞ்சி எல்லாம் வீங்க ஆரம்பிச்சு கல்யாணமே நின்னு போச்சு. நா ஒரு வாரம் அந்த ஏரியா பக்கமே தலை வச்சுப் படுக்கல. அப்புறம் சரி ஆனதுக்குப் பிறகு கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லிக்கிட்டாங்க.
கமல் கெட்டப் வேணும்னு ஒரு ஆளு வந்தாப்ள. அவரு முடிக்கு அது வராதுன்னு எவ்வளோ சொல்லியும் அடம் பிடிச்சாரு. வெட்டும்போது முடி சின்னதாகிருச்சு. அவருக்குப் பிடிக்கல. சரின்னு வேற ஸ்டைல்ல வெட்டிக் காமிச்சேன் அதுவும் பிடிக்கல. இப்படியே மாத்தி மாத்தி வெட்டி கடைசில மொட்டை அடிக்க வேண்டியதாப் போச்சு!

பாரதி ராஜா, மதுரை: நான் பன்னிரண்டு வயசுலேயே வந்துட்டேன். பதினைஞ்சு வருஷமா இருக்கேன். நானும் என் கூட்டாளியும்தான் ஒண்ணா வேலைக்குச் சேர்ந்தோம். வேலைக்குச்சேர்ந்த புதுசுல ஒரு லாரி டிரைவர் ஷேவிங்குக்கு வந்தாப்ள. கூட வேலை பார்த்தவுங்க எல்லாம் சாப்டப் போறேன்னு போயிட்டாங்க. ஷேவிங் பண்ண வந்த மனுஷன் அசதில தூங்கிட்டாப்ள. என் கூட்டாளியும் அவரு மூஞ்சிக்கு சோப்பு போட்டுக்கிட்டே அவர் மேல சாஞ்சு தூங்கிட்டான். இது மாதிரி எல்லாம் ஆரம்ப காலத்துல நடந்துருக்கு. ஆரம்பத்துல ஒரு பயம், பதட்டம் எல்லாத் தொழில் மாதிரிதான் இருந்துச்சு.போகப்போக பயம் குறைஞ்சு பொறுப்பு வந்துருச்சு.
பின்குறிப்பு: எனக்கு ஒரு குருதிப்புனல் கமல் கட்டிங் கேட்டிருக்கேன். கட்டுரை வர்றதப் பொறுத்து ஓபனிங் கமலா, கிளைமாக்ஸ் கமலான்னு முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்கோ!
- ந.புஹாரி ராஜா