மற்ற எபிசோடுகள்
Published:Updated:

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

கலை - சிற்பம் - கலகம் எழுத்தாக்கம்: இளமுரசு - படங்கள்: அ.குரூஸ்தனம்

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

“சின்ன வயசுல இருந்தே நான் கலகக்காரன்... யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. 13 வயசுலயே நாத்திகன் ஆயிட்டேன். வீட்ல எல்லோரும் என்னை `பெரியார்’னுதான் அழைப்பாங்க. அண்ணனுங்கள்லாம் பெரியப் பெரிய வேலைகள்ல இருந்தாங்க. எனக்கு, செருப்பு தைக்கிறவர், லாடம் அடிக்கிறவர், கூடை முடையிறவர், பானை சட்டி செய்யிறவங்கதான் உலகமா இருந்தாங்க. அவங்க பக்கத்துல உட்கார்ந்து, பார்த்துக்கிட்டே இருப்பேன். பி.யூ.சி முடிச்சதும், `மேல படி’ன்னாங்க. நான், `சுவாமிமலைக்குப் போய் சிற்பத் தொழில் கத்துக்கப்போறேன்னு சொன்னேன். `சுவாமிமலைக்குப் போனா, இந்த வீட்டுப்பக்கமே வரக் கூடாது’ன்னாங்க. மோதிரம், கடிகாரம், செருப்பு எல்லாத்தையும் கழட்டி அப்பா முன்னாடி வெச்சுட்டு, என் பி.யூ.சி சர்டிஃபிகேட்டை கிழிச்சுப் போட்டுட்டு, `உங்க பேரையோ, நீங்க கொடுத்த படிப்பையோ எங்கேயும் பயன்படுத்த மாட்டேன். இனிமே இந்த வீட்டுக்குள்ள வர மாட்டேன். நீங்களும் என் வீட்டுக்கு வரக் கூடாது’ன்னு சொல்லிட்டு கைலி, சட்டையோட வெளியே வந்தேன். இன்னியோட 47 வருஷம் முடிஞ்சு ஒன்பது மாசம் ஆச்சு... இன்னைக்கு வரைக்கும் நானும் போகலே. அவங்களும்  வரலே...”   குழந்தையைப் போலச் சிரிக்கிறார் சிற்பி ராஜன்.

மடியில் உலோகச் சூடு வடியாத முக்கால் பாகத்தில் புத்தர் கிடக்கிறார். கைகளில் புகைந்துகொண்டிருக்கிறது சிகரெட். இடையிடையே அறம் வைத்துத் தேய்த்து புத்தரை உயிர்ப்பிக்கிறார்.

 `சிற்பி ராஜன்’ என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. இறை மறுப்பாளரான ராஜன் கைபட்டு உருவாகும் சிற்பங்களில் தெய்வீகம் ததும்புகிறது. பாரம்பர்ய செறிவு மாறாமல், நவீன உத்திகள்கொண்டு அவர் உருவாக்குகிற இறைச் சிற்பங்கள், உலகின் பெரும்பாலான மியூசியங்களில் இந்தியக் கலாசாரத்தின் சின்னங்களாக இருக்கின்றன. காஞ்சி சங்கர மடம் முதல் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் கோயில் வரை இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான கோயில்களின் உற்சவர்கள் தயாரானது, இந்த பெரியார் தொண்டரின் பட்டறையில்தான்.

பரம்பரை ஸ்தபதிகளே நிறைந்திருக்கும் சிற்பத் தொழிலுக்கு, தறி ஓட்டுபவரையும், விவசாயத் தொழிலாளரையும், செங்கல்சூளையில் வேலை செய்தவரையும் கொண்டுவந்து, ஒளிவுமறைவில்லாமல் முழுக் கலையையும் கற்பித்து தனி அடையாளங்கள்கொண்ட சிற்பிகளாக ராஜன் அவர்களை உருவாக்கியிருக்கிறார். ராஜனின் பட்டறையில் தொழில் பழகிய 216 சிற்பிகள் சுவாமிமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சோழர் காலத்துச் சின்னங்களான ஐம்பொன் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தலித்துகள். சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையே சமஸ்கிருதம்தான். ராஜன், அதைப் பயின்றிருக்கிறார். அவரது மாணவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார்.

“நிறைய பேர் கேட்பாங்க... `கடவுளே இல்லைனு சொல்ற பெரியார் கட்சி ஆளு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’னு. நான் எந்தத் தொழிலுக்குப் போயிருந்தாலும் பெரியார் தொண்டன்தான். ஐம்பொன் சிற்பம் செய்றது என்னோட தொழில்.  என் பார்வைக்கு இது, கலை வடிவான சிலை. இதை வாங்குறவர் கடவுளாகப் பார்க்கிறார். என் பட்டறையோட முகப்பிலேயே பெரியார், அம்பேத்கர் படங்களைப் பெருசா ஃபிரேம் பண்ணி மாட்டிவெச்சிருக்கேன். நாத்திகம் பேசித்தான் சிற்பத்தை வியாபாரம் பண்ணுவேன். ஆயுதபூஜை, தீபாவளியெல்லாம் எங்க பட்டறையில கொண்டாடுறதே இல்லை. பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள், மே தினம் இந்த மூணு நாளையும் ரொம்பவே சிறப்பா கொண்டாடுவோம். அன்னைக்கு எல்லாருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடக்கும். முக்கியமான ஆளுமைகள் வந்து, எங்க பிள்ளைகள் மத்தியில பேசுவாங்க. என்கிட்ட சிற்பம் கத்துக்கிட்டுப்போன 216 பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க மூலமா உருவாகுற அடுத்த தலைமுறையும் அப்படித்தான் இருக்கும்” - புத்தனைச் செதுக்கியபடி புன்னகை மாறாமல் பேசுகிறார் ராஜன்.

உலகில் எந்த நாட்டில் கண்காட்சி நடந்தாலும் ராஜனையே பிரதிநிதியாக அனுப்புகிறது இந்திய அரசு. லண்டன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி என உலகம் சுற்றுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சிற்பத் திறனைப் பாராட்டிக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்களை எல்லாம், `இது எனது தொழில்; நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை’ என்று புறம் தள்ளியிருக்கிறார். 
 
“நான் ஐம்பொன் சிற்பக் கலைஞனா ஆனது ஒரு விபத்து. எனக்கு லாடம் அடிக்கிற தொழில்ல நிறைய விருப்பம் உண்டு. முதல்ல அந்தத் தொழில்தான் செய்யணும்னு நினைச்சேன். ஆனா, அதை எனக்குக் கத்துக்கொடுக்க யாரும் தயாரா இல்லை. நான் சுவாமிமலைக்கு வந்ததுக்குப் பின்னால ஒரு கதை இருக்கு.

எங்களோடது ரொம்பவே செழிப்பான குடும்பம். அப்பா பெரிய விவசாயி. மொத்தம் 12 பிள்ளைங்க. நான் பதினோறாவது ஆளு. எல்லாப் பசங்களும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போனாங்க. ஒருத்தன் பேராசிரியர். ஒருத்தன் பெல் நிறுவனத்துல பெரிய அதிகாரி... நானும் நல்லாப் படிக்கணும்னு வீட்டுல எதிர்பார்த்தாங்க. பி.யூ.சி இங்கிலீஷ் மீடியத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். `இன்னும் ஒரு வருஷம் மட்டும் படிடா’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எனக்குப் படிப்புல நாட்டம் இல்லை. எனக்குனு ஒரு வாழ்க்கை... மனசுக்குப் பிடிச்ச தொழில்னு தேட ஆரம்பிச்சுட்டேன். அந்த வயசுலயே, ரோட்டுல இருந்து எடுத்த தார்ல, களிமண்ணுல உருவங்கள் செஞ்சு ஸ்கூல்ல வைப்பேன்.

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

சின்ன வயசுல, பெரியார்னு ஒரு மனிதர் இருக்கிறதே எனக்குத் தெரியாது. பிள்ளையாருக்கும் எனக்குமான ஒரு டீல்ல அவரோட சுயரூபம் எனக்குத் தெரிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் என்னைத் தவிர வேறெதையும் நம்பக் கூடாதுனு முடிவுக்கு வந்துட்டேன். அந்த வயசுல நான் பண்ணின சேட்டைகளை எல்லாம் சகிச்சுக்கிட்டு என்னை வீட்டுல சேர்த்துக்கிட்டவங்க, நான் ஒரு கைவினைக் கலைஞனா மாறணும்கிறதை மட்டும் பொறுத்துக்கலை. `நீ தெருவில் நின்னு பிச்சைதான்டா எடுப்பே’னு அண்ணன் சாபம்விட்டார். ஆனா, இன்னைக்கு வரைக்கும் அந்த மாதிரி நிலை வரலை. இந்த 67 வயசுலயும் இன்கம்டாக்ஸ் கட்டிக்கிட்டு இருக்கேன்.  

அப்போ சினிமாவுல `கலைகங்கா’னு ஒரு ஆர்ட் டைரக்டர் இருந்தார். அவரோட சகலைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நான் தார் உருண்டையில செஞ்சு வச்சிருந்த சிலையைப் பார்த்துட்டு, `இவனை கலைகங்காக்கிட்ட சேர்த்துவிடுறேன். பெரிய கலைஞனா வருவான்’னு சொன்னார். `இனிமே நீ வீட்டுப்பக்கம் வரக் கூடாது’னு அவரை விரட்டி விட்டுட்டாங்க. நான் தனியாப் போய் அவரைப் பார்த்து, `எப்படியாவது என்னை அவர்கிட்ட சேர்த்து விட்டுடுங்க’னு கெஞ்சினேன். கூட்டிட்டுப் போனார். 

நான் பண்ணின சிற்பத்தையெல்லாம் பார்த்த கலைகங்கா, `நான் உன்னை இப்ப சினிமாவுல சேர்த்துவிட்டா, மாசம் 600 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனா, நீ வளர முடியாது. நேரா சுவாமிமலை போ... அங்கே ஐம்பொன் சிற்பம் செய்யக் கத்துக்கொடுக்கிற கல்லூரி இருக்கு. அதுல சேர்ந்து முழுசா கத்துக்கோ, நல்லா வருவே’னு சொன்னார்.

அப்போ எனக்குப் பதினாறரை வயசு. சுவாமிமலையில பூம்புகார் பயிற்சி நிறுவனத்துல, `எங்க அப்பா விஸ்வகர்மா’னு பொய் சொல்லி சேர்ந்தேன். இல்லைன்னா சேர்க்க மாட்டாங்க. ஆனா, நான் விஸ்வகர்மா இல்லேன்னு தெரிய வந்தபிறகு, என்னைப் பட்டறைக்குள்ளேயே விடலை. `பேங்க்குக்குப் போ’, `கறி வாங்கிட்டு வா’ன்னு வெளிவேலைக்கு அனுப்பினாங்க. ஆனா, எனக்கிருந்த வேகமும் வெறியும் ரொம்ப சீக்கிரமே கலையைக் கத்துக் கொடுத்திடுச்சு. மாசம் 30 ரூபா உதவித்தொகை. பயிற்சி முடிஞ்சதும், ஒரு பட்டறையில போய் வேலை செய்வேன். அங்கே தினமும் ஒண்ணரை ரூபா கொடுப்பாங்க. மொத்த மாத வருமானம் 75 ரூபா. வளமான வாழ்க்கையை மறந்துட்டு அதுக்குள்ளயே வாழப் பழகிட்டேன். அந்த அளவுக்கு கலை தாகம்.

பயிற்சி முடியுற தருணத்துல, ஆர்ட் தொடர்பான படிப்புப் படிக்கிறவங்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறாங்கனு ஒரு செய்தி படிச்சேன். ஆங்கில மீடியம் படிச்சதால, எனக்கு அது ஒரு அற்புதமான வாய்ப்பா அமைஞ்சது. எழுபத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு சிலை செய்ய அரசு ஆர்டர் கிடைச்சுச்சு. சின்னதா ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு பட்டறையை ஆரம்பிச்சுட்டேன்.

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்


அப்போ போன டெல்லிப் பயணம் எனக்குள்ள பல கதவுகளைத் திறந்துச்சு. ஐம்பொன் சிற்பத்துக்கு உலக அளவுல பல்லாயிரம் கோடிக்கு வணிகம் இருக்கு. ஆயிரம் ஆண்டு பழமையான மரபுங்கிறதால ஐம்பொன் சிலைகளை வாங்க சர்வதேச சமூகம் ரொம்பவே ஆர்வமா இருக்கு. ஆனா, அந்தத் தேவையை ஈடுகட்டுற அளவுக்கு உற்பத்தி இல்லை. வெறும் 11 பட்டறைகள்தான் சுவாமிமலையில இருக்கு. எல்லோரும் தலைமுறையா தொழில் செய்யிற கலைஞர்கள். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தா நாலு மாசமோ, அஞ்சு மாசமோ கழிச்சுத்தான் கிடைக்கும்.

ஒரு பக்கம், இவ்வளவு பெரிய வணிகம் இருக்கு. இன்னொரு பக்கம், சமூக ஒடுக்குமுறைகளைத் தாங்கிக்கிட்டு, அவச்சொற்களைத் தாங்கிக்கிட்டு ஒரு சமூகம் பின்தங்கிப் போய்க்கிட்டே இருக்கு. கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை. அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார். திறமையும் ஆர்வமும்கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும். இங்கிருக்கிற சிலர் மட்டுமே இதைச் செய்றாங்க; எல்லாரும் கத்துக்கிட்டா பெரிய அளவுல வணிகம் நடக்கும்; சமூக மரியாதையும் மாறுமேனு யோசிச்சேன்.

தனியா சிற்பப் பட்டறை தொடங்கும்போதே, `உணவு, தங்குமிடத்தோடு இங்கே சிற்பம் கற்றுத் தரப்படும்’னு அறிவிப்புப் பலகையை மாட்டிட்டேன். முதன்முதல்ல, இந்தப் பகுதியோட போஸ்ட்மேன், `சும்மா ஊர்ல சுத்திக்கிட்டிருக்கான்; இவனுக்கு ஒரு வழிகாட்டுங்க’னு ஒரு பையனைக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பையன் இன்னும் மூணு பேரை அழைச்சுக்கிட்டு வந்தான். இப்படித்தான் என்கிட்ட பசங்க வந்து சேர்ந்தாங்க.

பொதுவா, சிற்பக்கலைக்குக் குறைந்தபட்சம் ஓவியமாவது வரையத் தெரியணும்னு சொல்வாங்க. என்கிட்ட வந்து தொழில் கத்துக்கிட்டு, இன்னைக்கு உலக அளவுல வர்த்தகம் பண்ற 99 சதவிகிதம் பேருக்கு, ஆரம்பத்துல சின்னக் கோடுகூட நேராப் போடத் தெரியாது. நிறையப் பேர், எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. யாரெல்லாம் கிராமங்கள்ல புறக்கணிக்கப்பட்டாங்களோ, அவங்களை எல்லாம் தேடிப்போய் அழைச்சுக்கிட்டு வந்து தொழில் கத்துக்கொடுத்தேன்.

நாங்களே சமைப்போம்... சாப்பிடுவோம்... குடிப்போம்... சிற்பமும் செய்வோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாம, எல்லா நுணுக்கங்களையும் கத்துக் கொடுத்தேன். பயிற்சி முடிச்சப் பசங்க அடுத்தடுத்து பட்டறைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, இதை அவ்வளவு எளிதா மத்தவங்க ஜீரணிக்கலை. இரவு நேரத்தில் பட்டறையில கல் எறிவாங்க. நாலைஞ்சு பேர் குடிச்சுட்டு வந்து, `நாளை காலைக்குள்ள ஊரைக் காலி பண்ணலைனா, வெட்டிடுவோம்’னு மிரட்டுவாங்க. எல்லாத்தையும் புறம் தள்ளிட்டு எங்கப் பாதையில நாங்க போய்க்கிட்டே இருந்தோம்...”

நாத்திகராக இருந்தாலும், நாத்திகம் பேசியே விற்பனை செய்தாலும், ராஜனுக்கு விற்பனை படிப்படியாகப் பெருகியதுதான் வியப்பு. தஞ்சைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ராஜனின் பட்டறைக்கும் வரத் தொடங்கினார்கள். ஏற்றுமதியையும் வியாபாரிகளுக்கு விட்டுத்தராமல் தானே செய்தார். நியாயமான விலை, அற்புதமான சிற்ப நேர்த்தி எனப் பல்வேறு தனித்தன்மைகள் இருந்ததால், உள்ளூர் ஆட்களும் ஆர்டர் கொடுத்தார்கள். வெகு சீக்கிரமாகவே ஒரு ஏக்கரில் பட்டறையை விரிவுபடுத்தினார் ராஜன். “வியாபாரிகள் குவிய ஆரம்பிச்சுட்டாங்க. 75 பேர் ஒரே நேரத்துல வேலை செய்வாங்க.  எதிர்ப்பெல்லாம் கரைஞ்சு போச்சு. படிப்படியா தொழிலை முறைப்படுத்தினேன். நாள் சம்பளத்தை மாதச் சம்பளமா மாத்தினேன். போனஸ் கொடுத்தேன். 37 வருஷம்... ராத்திரி, பகல் பார்க்காம பட்டறைக்குள்ளேயே உலகம் சுருங்கிடுச்சு.

இப்போ போதும்னு தோணிடுச்சு. வெளியில வந்துட்டேன். போட்ட விதைகள் எல்லாம் வீரியமா முளைக்கத் தொடங்கிடுச்சு. வேர்கள் பரவி பெரிய வனமா மாறிக்கிட்டிருக்கு. தலைமுறை தலைமுறையா ஆதிக்க சக்திகள் கட்டிக்காத்த நம்பிக்கைகளைத் தகர்த்து, `பார்த்தா தீட்டு, தொட்டா தீட்டு’னு எவனை ஒதுக்கி வெச்சானோ, அவனே அங்குலம் அங்குலமா தொட்டு ரசித்துச் செஞ்ச சிலைகளை கருவறைக்குள்ள கொண்டு போய்வெச்சு வணங்குற நிலை உருவாகிடுச்சு. ஆதிக்க வாதத்தோட உயிர்நாடியில அடிச்ச அடி அது. பெரியார் கண்ட பெருங்கனவு.

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்

நெசவுத்தொழிலாளியா இருந்த வரதராஜன், 23 அடி உயரத்துல 35 டன் வெயிட்ல ஒரு நடராஜர் சிலை செஞ்சிருக்கான். 60 கோடி ரூபாய் போகும். இத்தனை வருட வரலாற்றுல சுவாமிமலையில இவ்வளவு பெரிய சிற்பத்தை வேறு யாரும் செஞ்சது இல்லை. சுவாமிமலைக்கே அவன்தான் இப்போ அடையாளம். இதோ இந்த பாஸ்கர், பாண்டிச்சேரிக்காரன். விவசாய வேலைக்குப் போய்க்கிட்டிருந்தான். இப்போ, இவன் அளவுக்கு நேர்த்தியா சோழ முகபாவத்தோட சிலை செய்ய யாரும் இல்லை. இதில் நிறைய பேர் தலித் பிள்ளைகள்தான்...”கும்பகோணத்தில், பயிற்சிப் பள்ளியாகவும் பரபரப்பான சிற்பத் தொழிற்சாலையாகவும் இருந்த பட்டறையை விற்றுவிட்டார் ராஜன். இப்போது முழுக்க முழுக்க பெரியாரிய பிரசாரகராக மாறிவிட்டார். பெரியார் பெயரைச் சொல்லி யார் அழைத்தாலும் போய்ப் பேசுகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுகிறார்.

`நான் இப்பவும் பேச்சுலர்... பட்டறை ஆரம்பிச்சு தொழில் வளர்ந்த நேரத்துல போய் பெண் கேட்டேன். `நீ என்ன ஜாதி?’னு கேட்டாங்க. `சாதியில்லாதவன்’னு சொன்னேன். `வெளியில போ’னு சொல்லிட்டாங்க. எங்கக் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு குடும்பம். ரொம்ப வறுமை. அவங்களுக்கு மகேஸ்வரினு ஒரு பெண். அந்தப் பெண்ணை 6,000 ரூபாய் பணம் வாங்கிக்கிட்டு 60 வயசு கிழவருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செஞ்சார் அவங்க அப்பா. கோயில்ல நிச்சயதார்த்தம் நடந்துக்கிட்டு இருக்கும்போது போய்த் தகராறு செஞ்சு, அந்தக் கிழவனை விரட்டியடிச்சேன். அந்தப் பெண்ணை திருமணம் செஞ்சுக்க எனக்கு ஆசை. அந்த சமயம் டெல்லியில ஒரு கண்காட்சி. 30 நாள் கழிச்சு திரும்ப வந்து, என் விருப்பத்தைத் தெரிவிக்க அவங்க வீட்டுக்குப் போனப்போ, அந்தப் பெண்ணோட போட்டோவுக்கு மாலை போட்டிருந்தாங்க. `யாருக்கும் தொந்தரவா இருக்க விரும்பலை’னு எழுதி வெச்சுட்டு தற்கொலை பண்ணிக்கிச்சு. அதுக்கப்புறம் திருமணம் பற்றி யோசிக்கவேயில்லை. வாழ்க்கை அப்படியே ஓடிடுச்சு.

இப்போ எந்தப் பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தோட எந்தத் தொடர்பும் இல்லை. சில வருஷங்களுக்கு முன்னாடி, அம்மா இறந்துட்டாங்கனு ஒரு செய்தி வந்துச்சு. குடும்பத்துல இருந்து யாரும் கூப்பிடலை. மானசீகமா அம்மாவை நினைச்சு அஞ்சலி செலுத்தினேன். அண்மையில, திருச்சியில ஒரு திராவிடர் இயக்க நிகழ்ச்சி... போற வழியில எங்க மூத்த அண்ணனோட படம் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்துச்சு. என்னைக் கடந்து ஆம்புலன்ஸ்ல அவரோட உடல் போச்சு. ஒரு செய்தியாதான் அது என் மூளைக்குப் போச்சே ஒழிய, எந்த உணர்வும் ஏற்படலே.  

“பெரியாரின் பெருங்கனவு!” - சிற்பி ராஜன்


நான் ரொம்ப நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கேன். 11 பட்டறைகள் இருந்த சுவாமிமலையில இப்போ 4,500 பட்டறைகள் இருக்கு. அழியிற நிலையில இருந்த தொழில் இன்னைக்கு வீரியமா வளர்ந்து நிக்குது. ஆனா, இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு. கோவை அன்னூர்ல தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் மொபைல்போன் பேச முடியலை. பிடுங்கிக்கிட்டு, அடிச்சு விரட்டுறாங்க. பொதுக்குழாய்ல தண்ணி பிடிக்க வந்த பையனை அங்குள்ள பெண் காலால மிதிக்கிறா. திராவிட இயக்கங்களோட போக்கு முடங்கிப்போச்சு. `வட்டி வாங்குறது தாசித்தொழில்’னு சொன்னார் பெரியார். ஆனா, ஊருக்கு ஊர் `திராவிடர் நலநிதி’னு போர்டு போட்டு, `குறைந்த வட்டியில் கடன் தருவோம்’னு விளம்பரம் செய்றாங்க. இவங்களை நம்பி இனி ஆகக்கூடியது ஒண்ணும் இல்லை. இருக்கிற காலம் வரைக்கும் ஊர் ஊராப் போய் பெரியாரைப் பத்திப் பேசணும். சாதிக் கொடுமைகளுக்கு எதிரா போராடணும்கிறதுதான் என்னோட திட்டம். இன்னைக்கு பாண்டிச்சேரி, நாளைக்கு கொடைக்கானல், நாளை மறுநாள் திண்டுக்கல்... பயணம் நீண்டுக்கிட்டே இருக்கு..!’’ உற்சாகமாகச் சொல்கிறார் ராஜன்.

புத்தர் இப்போது கண் திறந்துவிட்டார். பார்வையில் சாந்தமும் கனிவும் தளும்புகிறது!