
News
தய்.கந்தசாமி

பிடுங்கி எறியப்பட்ட கதிரென
கிடந்தந்தச் சடலம்.
பாதித் திறந்துகிடந்த கண்களில்
பச்சையாய் உறைந்துகிடந்ததொரு கனவு.
கபாலத்தைத் திறக்க வெளியேறியது
வறண்டு வெடித்த
வயல்வெளியின் காங்கல்.
நெஞ்சுக்கூட்டினுள்ளே முளைத்துப் பிளந்த
இரண்டாய் வெடித்துக்கிடந்தது
இதயம்.
குருத்துப்புழு வாழ்ந்த
பருத்தியின் சூலறையாய்
வயிற்றுக்குழிக்குள்
முளைக்காத விதைகளென
பாதி செறிக்காத பருக்கைகள்.
வானையும் மண்ணையும்
சபித்துச் செத்த
அந்தக் கடைமடைக்காரனுக்கு
நீருக்கேங்கி நீண்ட
நெற்கதிரின் வேர்கள்போலவே இருந்தன
விரல்கள்.