
கவிதை: இயற்கைசிவம், படம்: எம்.விஜயகுமார்
1.
மரத்தினடியில் முளைத்து
சாயங்காலம் வரையிலும்
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன
வெயில் எழுப்பிய
நிலத்தின் கண்கள்.
2.
இலைகள் றெக்கைகள்
ஒவ்வொன்றினடியிலும்
ஓடிவந்து பதுங்கிக்கொண்டது நிழல்.
தற்போது
மரத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது
வெயில்.

3.
ஆடி
அசைந்து
மிதந்து
பூமி சேர்ந்து
அத்தனையழகாய்
மரணத்தை வாழ்கிறது
சருகொன்று.
4.
குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து
வெயிலைப் பரிகசிக்கிறது
ஒரு குயிலிருள்
ஒரு காகயிருள்
ஒரு ரெட்டைவாலிருள்.
5.
மிகுந்த கணத்துடன்
பின்தொடரவேண்டியிருக்கிறது வெயிலுக்கு
ஒரு மூன்று சக்கர வண்டியின் பின்னே,
கைவிடப்பட்ட ஒரு முதியவளின் பின்னே,
சிக்னலில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும்
கால்களின் பின்னே.
6.
அப்படி ஓர் அடர்த்தியாய்ப்
பொழிந்த வெயிலை
அலைந்து திரிந்து சேகரித்து
அடுப்பினுள் மூட்டிய விறகில்
ஊதிவிடும் அம்மாவின் முத்தம்
ஒருபோதும்
காந்தியதில்லை எங்களுக்கு.