
ஜூ.வி நூலகம்: இலக்கியங்களை எப்படி உள்வாங்குவது?
‘தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை!
தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?’ - என்று கேட்டார் புரட்சிக்கவி பாரதிதாசன். தமிழைப் பாடுவதும், போற்றுவதும், அதுபற்றிப் பேசுவதும் ‘தமிழ் வாழும் காலமெல்லாம் நாமும் பேசவும், போற்றவும் படுவோம்’ என்ற நோக்கிலும்தான். பொதுநலம் கலந்த சுயநலம் அது. அப்படிப்பட்ட பேரறிஞர்களான கால்டுவெல், உ.வே.சா., தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ம.பொ.சிவஞானம், தனிநாயக அடிகள், மு.வரதராசனார், அகத்தியலிங்கம், கார்த்திகேசு சிவத்தம்பி, பொற்கோ, கந்தசாமி, சாரங்கபாணியார், சிற்பி, மணிவாசக மெய்யப்பனார் - ஆகியோரின் தமிழ்த்திறன் நினைவுகூரப்படும் தொகுப்பு இது.

இதில் கால்டுவெல், உ.வே.சா நீங்கலாக மற்ற அறிஞர்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருந்தவர் அறிஞர் செ.வை.சண்முகம் என்பதால் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் இலக்கியங்களை எப்படி உள்வாங்க வேண்டும் என்பதை இந்நூல் கற்பிக்கிறது. ‘‘கால்டுவெல்லின் நூலை ஒப்பீடுகள் முறையிலும், உ.வே.சாவின் பதிப்புகளை மூன்று பகுதிகளாகப் (முன்னுரை, நடுப்பகுதி, பிற்சேர்க்கைகள்) பிரித்தும், தெ.பொ.மீ. எழுத்துக்களை மொழி, தத்துவ அடிப்படையிலும், ம.பொ.சி-யின் படைப்புகளை இன உணர்ச்சித்தன்மையுடனும் அணுக வேண்டும்’’ என்கிறார்.
வரலாறு, சமூகம், இலக்கியம், மொழி, உலகளாவிய ஒப்பீடு - ஆகிய ஐந்து தன்மைகளோடு இலக்கியங்கள் நோக்கப்பட வேண்டும் என்ற தூண்டுதலை இக்கட்டுரைகள் தருகின்றன. இன்று மொழி உணர்ச்சி, மொழிப்பற்று, மொழி ஆர்வம், மொழிப் பாசம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. ஆனால் அது மொழி அறிவாக இல்லை; ஆகவும் இல்லை. தமிழ் மொழி, அறிவாக மாற இதுபோன்ற புத்தகங்கள் தூண்டுதலாக அமைகின்றன.
‘‘அறிஞர்கள் காலத்தைப் பிரதிபலித்தும் காலத்தால் உருவாக்கப்பட்டும் உருப்பெறுகிறார்கள்” என்கிறார் செ.வை.சண்முகம். அத்தகைய அறிஞர்கள் இன்னும் ஏராளமாக உருப்பெற வேண்டும்.
நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்
- செ.வை.சண்முகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 - பி, சிட்கோ இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
தொடர்புக்கு: 044 - 26251968
விலை: ரூ.200/-
- புத்தகன்