
ஓவியம்: பிரேம் டாவின்ஸி
சமகால மக்களை ஈர்க்கும் பேச்சாளர், குறைந்தபட்சம் இரண்டு நக்சல்பாரி இயக்க ஆதரவு இதழ்களுக்கு (மனிதன், செந்தாரகை) ஆசிரியராக இருந்தவர், மனித உரிமைப் போராளி, தொழில்சங்கத் தலைவர், நகர வளர்ச்சித் துறை எனும் அரை அரசு நிறுவனமொன்றில் (CIT) பணி புரிந்தவர், அந்தப் பணியிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டவர், பிழைப்புக்கு முட்டைக் கடை நடத்திய பார்ப்பனர், கட்சியிலிருந்து சற்றே ஒதுங்கி வாழ நேர்ந்தபோதெல்லாம் நிதி நிறுவனங்கள் சிலவற்றில் ‘மேனேஜராக’ இருந்தவர் எனப் பல பரிமாணங்களை உடையவர் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள். தமிழ்த் தேசியத்தில் தொடங்கியவராயினும் வாழ்வின் பெரும்பகுதியை அரசுகளால் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி இயக்கங்களோடு குடும்ப சகிதம் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்ந்தவர். இறுக்கமான கட்சிக்காரராகவே அடையாளம் காணப்பட்டபோதும் மிகவும் நெகிழ்ச்சியான சிந்தனை உடையவர். அதனாலேயே, எந்தக் கட்சிக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தாரோ, அந்தக் கட்சியாலேயே ‘குட்டி முதலாளிய அறிவுஜீவி’, ‘கிராமத்துக்குச் சென்று ஐக்கியமாகத் தயாராக இல்லாதவர்’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டபோது சற்றே நொந்துபோனவர். எனினும் தொடர்ச்சியாக இறுதிவரை பல்வேறு குழுக்களாகச் சிதைந்துபோயிருந்த நக்சல்பாரி இயக்கத்தை ஒருங்கிணைக்க முயற்சித்தவர்.
அவரது வாழ்க்கை குறித்த ஓரளவு விரிவான பதிவாக நமக்குக் கிடைப்பது அவரது ‘தீராநதி’ நேர்காணல் (ஜூன் 2012) என்றுதான் நினைக்கிறேன். அவரின் அன்பு மனைவியும் உற்ற தோழருமான ரத்னா அவர்களை அவர் இழந்திருந்த நேரம் அது. மீனா, அந்த நேர்காணலைச் செய்தபோது, கூட இருந்தது நானும் ஈஸ்வரனின் மைத்துனரும், ரத்னாவின் சகோதரருமான பி.வி.சீனிவாசனும்தான். ‘பி.வி.எஸ்’ என அழைக்கப்பட்ட சீனிவாசனும் நக்சல்பாரி இயக்கத்துக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்தான். சென்ற ஆண்டு மறைந்தார் அவர்.

யாரைப்பற்றிச் சொல்லும்போதும் அவர்களின் சாதியைச் சொல்ல வேண்டியது இல்லை என்பது உண்மைதான். ஆயினும், ஈஸ்வரன் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அதைச் சொல்வது அவசியம் என நினைக்கிறேன். கோபிச்செட்டிப்பாளையத்தில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று முறைப்படி மந்திரம் ஓதிப் பூணூல் அணிந்துகொள்ளும் ஆசாரமான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் முற்றிலுமாகத் தன்னைச் சாதி விலக்கம் செய்துகொண்டு வாழ்ந்தவர். மிகச் சிறிய வயதில் பூணூல் அணிவிக்க வீட்டுக்கு வந்த புரோகிதர், இவர் மந்திரம் சொல்ல இயலாததைக் கண்டு, “நீ பிராமணன் இல்லை. சூத்திரனுக்குத்தான் பிறந்திருக்கணும்” எனச் சபித்ததைச் சொல்லிச் சிரிப்பார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் ஆசாரமான தந்தை ஒரு காந்தியவாதி, ஓராண்டு சிறைப்பட்டு, சிறை தந்த பரிசாகக் காச நோய்க்கு ஆளாகி இளம் வயதில் மறைந்தார். ஐந்தாம் வகுப்புவரை படித்திருந்த ஈஸ்வரனின் தாய் சென்னைக்கு இடம் பெயர்ந்து ஆசிரியப் பயிற்சி பெற்று மகனையும் வளர்த்துள்ளார்.
நானெல்லாம் மாணவனாக இருந்தபோது ஏ.எம்.கே என்ற ஏ.எம்.கோதண்டராமன், பி.வி.எஸ் என அழைக்கப்பட்ட சீனிவாசன் ஆகியோர் என்னைப் போன்றவர்களால் வியந்து நோக்கப்பட்டவர்கள். மிகக் கொடுமையான அடக்குமுறைகள் நிகழ்ந்த ஒரு கட்டத்தில் தலைமறைவாகச் செல்ல இருந்த பி.வி.எஸ், தன் சகோதரி ரத்னாவை ஈஸ்வரனுக்கு மணமுடித்துச் சென்றுள்ளார். ரத்னாவும் ஒரு பார்ப்பனராயினும் கணவரைப்போலவே தன்னை முழுமையாகச் சாதிநீக்கம் செய்துகொண்டவர். நந்தனம் சி.ஐ.டி காலனியில் இருந்த அவர்களின் சிறு வீட்டில் எந்நேரமும் தமிழகம் முழுவதிலிருந்தும் வழக்குத் தொடர்பாகவும், சில நேரங்களில் மருத்துவத்துக்காகவும் வரும் தோழர்கள் தங்கி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு பேருக்கும் இயன்ற வரையில் சமைத்துப்போட்டவர் ரத்னா. சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் நோய்வாய்ப்பட்டபோது அவர்களை மருத்துவமனையில் சேர்த்து ஒரு தாதியைப்போலக் கவனித்துக் கொண்டவர் அவர். ‘ரத்னா’ எனச் சொன்னால் அவருக்குப் பிடிக்காது. ‘தோழர்’ என்றுதான் சொல்ல வேண்டும். அவர் மறைந்தபோது அவரது உடலை நந்தனத்திலிருந்து கண்ணம்மாப் பேட்டைச் சுடுகாடு வரை பெண்களே சுமந்துசென்று எரியூட்டியதைச் சென்னை நகர மக்கள் வியந்து பார்த்தனர்.
தோழர்கள் ஈஸ்வரன் - ரத்னா இணையர் தம் மகளை ஒரு பிற்படுத்தப்பட்ட இளைஞருக்குத்தான் திருமணம் செய்வித்தனர். மகன் திருமணம் செய்துகொண்டது ஒரு தலித் பெண்ணை.

கடுமையான நெருக்கடிகளின் மத்தியில் வாழ்ந்தவர் ஈஸ்வரன். அரசு நெருக்கடிகள் மட்டுமல்ல, கட்சிக்குள்ளும் நெருக்கடிகள்தான். இந்த உள் நெருக்கடிகள் பல நேரங்களில் அரசு நெருக்கடிகளையும்விடத் துயர் மிகுந்ததாக இருக்கும் என்பதை, பட்டவர்கள் அறிவர். சிறைக் கொடுமைகளைக்கூட அனுபவித்துவிடலாம். சக தோழர்களின் இரக்கமற்ற அவதூறுகள் தாள முடியாதவை. சீனப் பாதையைத் தேர்வுசெய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி உடைந்தபோதும், பின் அதன் வர்க்கச் சமரசத்துக்கு எதிராக நக்சல்பாரி அமைப்பு உருவானபோதும் அந்த உருவாக்க முயற்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர்களில் ஈஸ்வரனும் ஒருவர். ‘தீக்கதிர்’, ‘மனிதன்’ முதலான இயக்கப் பத்திரிகைகளின் உருவாக்கத்திலும் அவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. இந்த இதழ்களின் ஆசிரியரும் அவரே. எனினும், மக்கள் திரள் அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ‘வர்க்க எதிரிகளின் அழித்தொழிப்பு’க்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது, மக்களோடு வாழ்ந்து விவசாயிகளைத் திரட்டாமல் தலைமறைவு வாழ்க்கையையே பிரதானப்படுத்துவது, காந்தியத்தைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் காந்தி சிலை உடைப்பு முதலானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தது போன்றவற்றை ஈஸ்வரன் விமர்சித்தபோது அவர் தனிமைப்பட நேர்ந்தது. ‘கட்சி விரோத நடவடிக்கை’, ‘குட்டி முதலாளிய நகர்ப்புறவாதம்’ முதலான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. கட்சியிலிருந்து விலகி வெறும் ஆதரவாளர் எனும் நிலையில் தொடர அவர் வற்புறுத்தப்பட்டார்.
நொந்துபோன தோழர், சென்னையை விட்டகன்று சொந்த ஊரான கோபிக்குத் திரும்பி, அவரின் மாமா வீட்டில் சில காலம் வாழ்ந்தார். அப்போது அவரைத் தேடி வந்த ஏ.எம்.கே அவர்கள், அன்று சிறையில் அடைப்பட்டுக்கிடந்த தோழர்களை விடுதலை செய்யும் மனித உரிமைப் பணிகளில் ஈடுபட அவரை வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்று மீண்டும் சென்னைக்கு வந்த ஈஸ்வரனுக்கு இப்போது இன்னோர் அரிய தோழமை கிடைத்தது. தமிழக மனித உரிமை வரலாற்றில் மிக முக்கியமாகத் தடம் பதித்த மேயர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து அந்தப் பணியைச் செய்யும் வாய்ப்பு அது. காந்தியத்தையும் கம்யூனிஸத்தையும் ஒருசேர நேசித்த கிருஷ்ணமூர்த்தி ஒரு பார்ப்பனர்தான். குடிசைப்பகுதி மக்களுடன் மிக நெருக்கமாக வாழ்ந்தவர் அவர். எம்.ஜி.ஆர். நகர் என இப்போது அழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் எல்லாம் அவரால்தான் உருவானவை என்பர். சிறைப்பட்டிருந்த அன்றைய நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் முதலாளித்துவ அரசின் இந்த நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது என்கிற கொள்கை உடையவர்களாக இருந்தனர். அவர்களைச் சிறைகளில் சந்தித்து வழக்காடச் சம்மதிக்க வைப்பதே ஈஸ்வரன் போன்றோருக்குப் பெரும்பாடாக இருந்தது.
மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த தோழர்கள் புலவர் கலியபெருமாள், தியாகு, பஞ்சலிங்கம், கிருஷ்ணசாமி ஆகியோரின் தண்டனை ரத்தானதில் இவர்களின் பங்கு முக்கியமானது. அன்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த விடுதலைக்குப் பெரிதும் உதவினார். எனினும், அவர் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதி எனவும் அவரைப் பாராட்டக் கூடாது எனவும் கட்சிக்குள் ஈஸ்வரனுக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும், நான்கு வரிகளில் மிகச் சுருக்கமாகக் கலைஞரை, ஈஸ்வரன் பாராட்டியபோது அவருக்கு ஒரு பொட்டலம் நிறைய மயிரை பார்சல் செய்து சிலர் அனுப்பினர். “இது தலைமுடி அல்ல. அடிமுடி” எனக் குறிப்பு வேறு. இப்படிப் பல அனுபவங்கள். தோழர் சாரு மஜூம்தார் சென்னைக்கு வந்தபோது மாநிலக் குழு கூட்டத்தில் ‘அழித்தொழிப்புப் பார்வை தவறு’ என ஈஸ்வரன் விமர்சனம் வைத்தார். அதையொட்டி ஈஸ்வரன் மாநிலப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மைதிலி சிவராமனும் என்.ராமும் நடத்திய Radical Review இதழில் நக்சல்பாரி இயக்கத்தை விமர்சித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ் அவர்கள் எழுதியபோது, அதை மறுத்து ஈஸ்வரன் எழுதிய பதில் கட்டுரை பிரசித்தமானது. ஈ.எம்.எஸ் அவர்கள் மீண்டும் அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால், அப்போது கட்சிப் பொறுப்பில் இருந்தவரும் பின்னர் தமிழகக் காவல்துறையால் கடத்திச் சென்று கொல்லப்பட்டவருமான தோழர் அப்பு அவர்கள் அதற்குப் பதில் எழுத வேண்டாம் என ஆணையிட, அந்த விவாதம் அத்துடன் முடிந்தது.
1973-ம் ஆண்டு தொடங்கி நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் வரை (1975) ‘மனிதன்’ ஒன்பது இதழ்கள் வெளிவந்தன. 1980-களில் ஆந்திர மாநிலத்தில் கொண்டபள்ளி சீதாராமையா தலைமையில் இயங்கியவர்களும், தமிழகத்தில் ஏ.எம்.கே முதலானோரும் இணைந்து, ‘மக்கள் யுத்தக் குழு’ (PWG) உருவாக்கப்பட்டபோது, மீண்டும் தீவிரமாக நக்சல்பாரி இயக்கத்தில் செயல்படத் தொடங்கினார் ஈஸ்வரன். அப்போது உருவாக்கப்பட்ட “ ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’ அதன் மாத இதழான ‘செந்தாரகை’ ஆகியவற்றில் கோ.கேசவன், பழமலய், அ.மார்க்ஸ் ஆகியோருடன் சேர்ந்து செயல்பட்டது ஒரு பொற்காலம்” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எனினும், அந்தப் பொற்காலமும் விரைவில் முடிந்தது. மீண்டும் ஏ.எம்.கே முதலானோர் மக்கள் யுத்தக் குழுவிலிருந்து விலகினர். விவசாயிகள், தொழிலாளிகள் என எல்லா இயக்கங்களையும் ‘போர்க்குணம் மிக்க பொருளாதாரவாதம்’ நிராகரித்த தமிழக அமைப்பிலிருந்துதான் ஒதுங்க நேரிட்டது எனக் கூறிய ஈஸ்வரன், அதன் பின் இங்கு செயல்படுகிற நக்சல்பாரி வழிவந்த இயக்கங்கள் அனைத்துக்கும் பொதுவான, எல்லோராலும் மதிக்கப்படும் தோழரானார். இறுதிக்காலத்தில் தற்போதுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சற்று நெருக்கமாக இருந்தார். அமைப்புகளிலிருந்து ஒதுங்கி நின்ற முன்னாள் நக்சல்பாரி இயக்கத்தவர்களை ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர் ஐக்கிய அணி’ என ஒருங்கிணைக்கச் செய்த முயற்சி ஒன்றில் முக்கியப் பங்காற்றினார். எனினும், அவர்கள் பலமுறை சந்தித்துப் பேசியும் ஒன்றும் உருப்படியாக நடந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர் ஈஸ்வரன். பிற மாநிலத் தோழர்கள் இங்கு வரும்போது அவர்களது பேச்சுகளை மொழிபெயர்ப்பது, ஆங்கிலக் கட்டுரைகளைக் கட்சித் தோழர்களுக்கு மொழிபெயர்த்துத் தருவது எனத் தன்னை நக்சல்பாரி இயக்கத்துக்கு இறுதிவரை அர்ப்பணித்துக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி பிரிந்துகொண்டிருந்த நேரத்தில், மறைந்த தோழர் ஏ.கே.கோபாலனின் அயனாவர உரையை மொழிபெயர்த்ததும் அவர்தான். நக்சல்பாரி இயக்கத்தின் மீது அவர் சில விமர்சனங்களைக் கொண்டிருந்தபோதும் இறுதிவரை அதனுடன்தான் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். எந்நாளும் அதை அவர் விட்டுக் கொடுத்ததே இல்லை.
ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். அவர் இளைஞனாக அரசியல் களத்தில் நுழைந்தது ம.பொ.சியின் தமிழ்த் தேசிய இயக்கத்துடன் அடையாளப்படுத்திக் கொண்டுதான். அப்போது, தமிழ்த் தேசிய உணர்வைத் திராவிட இயக்கமும் முன்வைத்துக்கொண்டிருந்தது. இரண்டுக்கும் உள்ள ஓர் அடிப்படை வேறுபாடு, திராவிட இயக்கம் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்து முன் வைத்தது. ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகமோ இந்து மதம், பார்ப்பனியம் ஆகியவற்றை ஏற்று, கடுமையாகப் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் எதிர்த்து வந்தது. அந்த நிலையில் ஈஸ்வரன் அவர்கள் ம.பொ.சி-யுடன் இணைந்து செயல்படுவது என்கிற நிலையைத் தேர்வு செய்தது குறித்து விரிவாக எங்கும் எழுதியுள்ளாரா எனத் தெரியவில்லை. எனினும், அவரது உரைகள் அந்தக் காலகட்டத் திராவிட இயக்கப் பாணியில்தான் இறுதிவரை அமைந்திருந்தன.
நான் முதன்முதலில் அவரைச் சந்தித்தது. 1980-களின் தொடக்கத்தில். அப்போது நான் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மக்கள் யுத்தக் குழுப் பக்கம் திரும்பியிருந்தேன். புரட்சிப் பண்பாட்டு இயக்கத்திலும், ‘செந்தாரகை’ இதழிலும் என்னைச் சேர்த்திருந்தனர். நான் கலந்துகொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் யாரோ ஓர் ஆதரவாளரின் வீட்டு மாடியில் நடந்தது. அங்குதான் ஈஸ்வரன் அவர்களை நான் முதன்முதலில் பார்த்தது. அந்தக் கூட்டத்தில் அந்த இயக்கம் குறித்து கோ.கேசவன் அவர்கள், தான் தயாரித்து வந்த அறிக்கையை ஒப்புதல் பெறுவதற்காக வாசித்தார்.
அதில் ஓரிடத்தில் “அந்நியமாதல் போன்ற மார்க்ஸிய விரோதக் கோட்பாடுகளை இங்கு சிலர் முன்வைத்துத் திரிகின்றனர்” என எஸ்.வி.ராஜதுரை, ஞாநி, எஸ்.என்.நாகராசன் போன்றோரைக் கேசவன் தாக்கியிருந்தார். நான் அதை மறுத்தேன். ‘‘அந்நியமாதல் என்பது காரல் மார்க்ஸ் முன்வைத்த ஒரு கோட்பாடு. அதை எப்படி மார்க்ஸிய விரோதம் எனச் சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டேன். என் கருத்தை அங்கிருந்தவர்களில் ஈஸ்வரன்தான் முதலில் ஆதரித்தார். இறுதியில் அந்த வாசகம் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. வறட்டுத்தனமான அரசியலுக்கு ஈஸ்வரன் எப்போதுமே எதிராக இருந்தார். அவர் மறைந்த அன்று நேரில் அஞ்சலி செலுத்த இயலாமல் நான் வெளிநாடொன்றில் இருக்க நேர்ந்ததை நினைக்கும்போது கண்கள் பனிக்கின்றன.