
சாலை போடுவதில் நடந்ததா ஊழல்? - ஆதாரம் கேட்கிறார் சென்னை மாநகராட்சி கமிஷனர்!
இரண்டு நாள் மழைக்கே, சென்னை சாலைகள் எல்லாம் மினி ஏரிகளாக மாறிவிட்டன. இந்தச் சூழலில், சென்னையில் செயல்படுத்தப்பட்ட சாலைத் திட்டங்களின் ஒப்பந்ததாரர்கள் பட்டியலை இணையத்திலிருந்து மாநகராட்சி நிர்வாகம் நீக்கியது சர்ச்சையை உண்டாக்கியது.
அறப்போர் இயக்கம், கடந்த 28-ம் தேதி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள் என அந்தப் பகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கான பொதுக்கூட்டம் அது. அதில் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை வசதிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி 350 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இவ்வளவுப் பணம் ஒதுக்கப்பட்ட நிலையில், சாலைகள் அனைத்தும் மிக மோசமாக உள்ளன. சாலைகளுக்காகக் கோடிகளில் ஒதுக்கப்படும் பணம் எங்கே போகிறது? ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதுதான் இதற்குக் காரணம். அந்த முறைகேட்டை விரைவில் வெளிக்கொண்டு வருவோம்” என்றார். அப்படி அவர் பேசியதற்கு மறுநாள்தான், சாலை ஒப்பந்ததாரர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி நீக்கியதாகக் குற்றம்சாட்டுகிறது அறப்போர் இயக்கம்.

இதுபற்றி ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘கடந்த ஐந்தாண்டுகளில், சாலை மற்றும் மழைநீர் வடிகால்களுக்காக சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி செலவிட்டுள்ளது. அந்தப் பணம், முறையாக அந்தத் திட்டங்களுக்குச் சென்று சேரவில்லை. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 350 கோடி ரூபாய் சாலை வசதிக்காக ஒதுக்கியுள்ளது. அந்த ரூபாய் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அந்த ஊழலை வெளியே கொண்டுவருவேன் எனச் சொன்ன மறுநாளே, ஒப்பந்ததாரர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நீக்கியது. மொத்தம் 40 ஒப்பந்ததாரர்கள். அவர்களில் யார் யார் எந்தெந்தப் பகுதிகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்துள்ளார்கள்... எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களையும் நீக்கியுள்ளனர்.

அதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்குப் புகார் அனுப்பியிருந்தேன். அந்த நேரத்தில், பட்டியல் நீக்கப்பட்ட விவரம் குறித்து ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆணையர், ‘டெக்னிக்கல் எரர்’ எனச் சொல்லியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒப்பந்ததாரர்களின் பட்டியலைப் பதிவேற்றம் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் இப்படியான நடவடிக்கை மூலமே ‘ஊழல்’ நடந்திருப்பது உறுதி ஆகிவிட்டது. எங்களுடைய அமைப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக, அந்த 40 ஒப்பந்ததாரர்களின் பட்டியலை மீண்டும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். 350 கோடி ரூபாய் சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த நிதியில் ஊழல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். அதில் பலரும் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முழுமையான, உறுதியான ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம். அவ்வாறு ஊழல் நடக்கவில்லை என ஆணையர் கூறுவாரேயானால், வெளிப்படையாக சென்னையின் சாலை வசதித் திட்டங்கள். அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மழைநீர் வடிகால் வரைபடங்கள், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்ய அவர் உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘‘அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளை நானும் படித்தேன். அவை முற்றிலும் தவறானவை. மாநகராட்சி செயல்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களுக்கும் போதுமான ஆதாரங்கள் உள்ளன. 2015 வெள்ளத்தில் சென்னை தத்தளித்தபோது, அறப்போர் இயக்கம் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்த அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தது. அதைவைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்தினோம். அந்த இயக்கத்தில் உள்ளவர்கள் விவரம் அறிந்தவர்கள் என எண்ணியிருந்தேன். இப்படி தவறான, பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அவர்கள் மீதான மதிப்பை அவர்களே குறைத்துக்கொண்டுள்ளனர்” என்றார். ‘‘தகவல்கள் நீக்கப்பட்டது ஏன்?’’ என்றபோது, ‘‘வெப்சைட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒப்பந்ததாரர்கள் அடங்கிய அந்தப் பட்டியல் இரண்டு நாட்களாகக் காட்சி ஆகவில்லை. அதை வைத்து ஊழல் நடந்துள்ளது எனச் சொல்லிவிட முடியுமா? இந்தத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என உரிய ஆதாரங்களோடு புகார் கூறினால் கடும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
அறப்போர் இயக்கம் தயாராகிவருகிறது.
- கே.புவனேஸ்வரி